காத்திருக்கும்[ ஸ்டெர்லைட்] எமன்,,,,

Apr
23
  

ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு அனுபவம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடக் கோரிய வழக்கில் நீதிமன்ற ஆணைப்படி ஆய்வுகள் மேற்கொண்டதை விளக்கி, மதிமுக பொதுச் செயலர் வைகோ செய்தி வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

"மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் ஜெய்தாபூர் என்ற இடத்தில் அணு மின் உலை அமைப்பதைக் கடுமையாக எதிர்த்து, ரத்தினபுரி மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பலத்த கிளர்ச்சி செய்து வருகின்றனர்.
தங்கள் வாழ்விடத்தையும், ஆபத்து வருமுன் காக்கும் எச்சரிக்கையுடன் போராடும் இதே மக்கள்தான், 90-களின் தொடக்கத்தில், மராட்டிய மாநிலத்தில், அரசு அனுமதியோடு அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை, சுற்றுச்சூழலுக்கும், தங்களின் வாழ்வுக்கும் பெரும் நாசம் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.

அப்போதைய மதிப்பில் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து அமைக்கப்பட்ட தொழிற்சாலையை, இயந்திரங்களை உடைத்து நொறுக்கினார்கள். பொதுமக்களின் எதிர்ப்பைக் கண்டு, அன்றைய மராட்டிய மாநில சரத் பவார் அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்குக் கொடுத்து இருந்த உரிமத்தை ரத்து செய்தது.


குஜராத் மாநிலத்தில் அனுமதி வாங்க முடியாமல், கோவாவில் கால் பதிக்க முடியாமல், தமிழ்நாட்டில் முத்து வளமும், மீன் வளமும் கொண்ட அழகிய கடல் பூங்காவாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தூத்துக்குடி கடலோரத்தில், ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலைக்கு, அன்றைய அண்ணா தி.மு.க. அரசின் அனுமதியையும், அன்றைய மத்திய காங்கிரஸ் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியையும் பெற்று, ஸ்டெர்லைட் ஆலையை நிறுவியது.

கடற்கரையில் இருந்து 25 கிலோ மீட்டல் எல்லைக்கு உள்ளே ஆலை அமைக்கக்கூடாது என்ற சுற்றுச்சூழல் அமைச்சகம் வரையறுத்த சட்டவிதியை மீறி, 15 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளேயே ஸ்டெர்லைட் ஆலை, அ.தி.மு.க. அரசின் அனுமதியோடு அமைக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி, 250 மீட்டர் சுற்றளவுக்கு, அடர்த்தியான பசுமைச்சூழல் அமைக்க வேண்டும் என்று, முதலில் நிபந்தனை விதித்த தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம், ஒருசில நாள்களுக்கு உள்ளாகவே, 94 ஆகஸ்ட் 18 ஆம் நாள், 25 மீட்டர் சுற்றளவுக்கு பசுமைச்சூழல் அமைத்தால் போதும் என்று நிபந்தனையைத் தளர்த்திக் கொண்டது.

மன்னார் வளைகுடாவில் உள்ள வான்தீவு, கசுவர், கரைச்சல்லி, விளாங்கு சல்லி ஆகிய தீவுகள், ஆலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளேயே அமைந்து உள்ளன.

தூத்துக்குடி வட்டார மக்களும், மீனவர்களும், விவசாயிகளும், பொதுநல அமைப்பினரும், மறுமலர்ச்சி தி.மு.க.வும், தொடர் போராட்டங்களை நடத்தினர்.

மதிமுக, 96 டிசம்பர் 9 ஆம் நாள், என் தலைமையில் 20,000 க்கும் மேற்பட்டோர் உண்ணாநிலை அறப்போர் நடத்தியும், 97 ஏப்ரல் 20 ஆம் நாள், தூத்துக்குடி துணை ஆட்சியர் அலுவலகத்துக்கு முன் என் தலைமையில் மறியல் செய்து, பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டோம்.

பின்னர் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி வரை, பல்லாயிரக் கணக்கானவர்களோடு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு நடைபயணத்தை மேற்கொண்டோம்.

97 ஆகஸ்ட் 30 ஆம் நாள், 25,000 பேர் பங்கு ஏற்ற ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போரை என் தலைமையில் நடத்தியபின்னர், உயர்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த ரிட் மனு மீது, 98 டிசம்பர் 9 ஆம் நாளில் இருந்து 14 ஆம் தேதி வரையிலும், நானே வழக்கில் நேரில் ஆஜராகி வாதாடினேன்.

வழக்கு தொடர்ந்து நடைபெற்றது. 2010 செப்டெம்பர் 28 ஆம் நாள் அன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு எலைட் தர்மாராவ், மாண்புமிகு பால் வசந்தகுமார் அமர்வு நீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, ஆணை பிறப்பித்தது.

அதனை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தற்காலிகத் தடை ஆணை பெற்று உள்ளது.

நிரந்தரமாக மூட வேண்டும் என்று நானும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு முறையும் பங்கு ஏற்றேன்.

கடந்த பிப்ரவரி 25 ஆம் நாள் அன்று, உச்சநீதிமன்றம், நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வுக்கூடம் நீரி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆய்வு நடத்தி, எட்டு வாரங்களுக்குள் அறிக்கை தர வேண்டும் என ஆணையிட்டது. ஆய்வின்போது, எதிர்மனுதாரர்களையும் பங்கு ஏற்கச் செய்ய வேண்டும் என்றும் கூறியது.

40 நாள்கள் கழித்தே நீரி நிறுவனத்தில் இருந்து டாக்டர் நந்தி தலைமையில் ஆய்வுக்குழு ஏப்ரல், 6,7,8 தேதிகளில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வுகளை மேற்கொண்டது.

ஆலை வளாகத்துக்குள் மண், நீர், மாதிரிகளை சோதனைக்கு இம்முறை எடுப்பது இல்லை என்று நீரி நிறுவனம் கூறியதற்கு, நான் பலத்த எதிர்ப்புத் தெரிவித்ததன் பேரில், மாதிரிகள் எடுக்கப்பட்டன. ஆயினும், நம்முடைய தரப்பில் மாதிரிகள் எடுக்க  அனுமதிக்கவில்லை. மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மண்டலத்தில் ஏற்படும் மாசு, நச்சுத்தன்மையைக் கண்டு அறியத் தேவையான கருவிகளை, நீரி ஆய்வுக்குழு கொண்டு வரவில்லை.

மீண்டும் ஆய்வு ஏப்ரல் 19 ஆம் நாள் தொடங்கியது. இதில், நானும், சுற்றுச்சூழல் நிபுணர் நித்தியானந் ஜெயராமன், வழக்கறிஞர் தேவதாஸ், தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் ஜோயல்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டோம்.

25 மீட்டர் சுற்றளவுக்கு, ஆலையில் அடர்ந்த பசுமைச்சூழல், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆணைப்படி அமைக்கப்பட்டு உள்ளதா? என்பதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. 80,000 மரங்கள் நடப்பட்டு இருப்பதாக, உண்மை இல்லாத ஒரு செய்தியை, ஸ்டெர்லைட் கூறி வருகிறது.

உயர்நீதிமன்றம் ஆலையை மூடச் சொன்னதற்குப் பின்னர், வெளி இடங்களில் இருந்து, குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் மண்ணில் இருந்து பிடுங்கப்பட்ட, ஓரளவு வளர்ந்த மரங்களையும், செடிகளையும், லாரிகளில் ஏற்றிக்கொண்டு வந்து, ஸ்டெர்லைட் வளாகத்துக்கு உள்ளே நட்டு வைத்து இருப்பதை, அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் நமக்குத் தெரிவித்து இருந்தனர். அதனால், பல இடங்களில் மரங்கள் பட்டுப்போய் நிற்பதும், ஒரு போலித்தோற்றத்தை ஏற்படுத்தவே, ஸ்டெர்லைட் முயற்சிக்கிறது என்பதையும், நீரி ஆய்வுக்குழுவிடம் தெரிவித்தோம்.

பல இடங்களில், புதிதாக ஊன்றப்பட்ட வேப்ப மரங்கள், இலைகளே இல்லாமல் காய்ந்து கிடப்பதைச் சுட்டிக்காட்டியபோது, இது இலையுதிர் காலம் என்றும், இனிமேல்தான் இலைகள் துளிர்க்கும் என்றும், ஸ்டெர்லைட் நிர்வாகம் அதற்கு விளக்கம் அளித்தபோது, மற்ற இடங்களில் எல்லாம் வேப்ப மரங்கள் இலைகள் இல்லாமல் வெறும் குச்சுகளாகவா நிற்கின்றன? என்று நாங்கள் மறுத்துக் கூறி, நீரி ஆய்வுக்குழு அதைப் பதிவு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினோம்.

ஸ்டெர்லைட் வளாகத்தில், ஆலையின் ஒரு பகுதியில் ஓரளவு மரங்கள் நடப்பட்டு இருந்தாலும், மற்ற இடங்களில் காங்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டும், பசுமைச் சூழலுக்கு வாய்ப்பே இல்லாமல் ஆக்கப்பட்டும் இருப்பதையும் சுட்டிக் காட்டினோம்.

காற்று மண்டலத்தில், மாசும், தூசும், நச்சுப்புகையும் எந்த அளவுக்கு ஸ்டெர்லைட் ஆலையால் கலக்கிறது என்பதைக் கண்டு அறிய, ஆய்வுக்குழுவினர் ஆங்காங்கு அந்த ஆய்வுக் கருவிகளைப் பொருத்தினார்கள். எட்டு மணி நேரத்துக்கு ஒரு முறையும், 24 மணி நேரத்துக்கு ஒரு முறையும், அந்த ஆய்வுக்கருவியின் பதிவுகள் குறிக்கப்படும் என்றனர்.

20, 21 இரண்டு நாள்களும், நல்ல மழை பெய்ததால், காற்றில் படரும், தூசும், மாசும், சரியாகப் பதிவு செய்ய இயலாமல் போக வாய்ப்பு ஆயிற்று. இடையிடையே ஏற்பட்ட மின் தடையும், ஆய்வுக்குக் குந்தகம் ஆயிற்று.

ஆலைக்கு வெளியில் மீளவிட்டானில், காற்று மண்டலத்தில்,ஆலையில் இருந்து வெளியாகும் புகையால் ஏற்படும் பாதிப்பைக் கண்டு அறிய, ஆய்வுக்கருவியை, கூட்டுறவு வேளாண்மைச் சங்கக் கட்டடத்தில் அமைத்தபோது, அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து, கடந்த ஒரு வார காலமாக, ஆலையில் உற்பத்தியை மிகவும் குறைத்து விட்டார்கள் என்றும், ஆலைப்புகை, பத்தில் ஒரு மடங்குதான் தற்போது வருவதாகவும், ஆலை முழுவதும் இயங்கும் நாள்களில், காற்றில் கலந்து வரும் புகையால், தங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், தாங்கள் அங்கே குடி இருப்பதற்கே அவதிப்படுவதாகவும் கூறியதை, ஆய்வுக்குழுத் தலைவர் டாக்டர் நந்தியிடம் தெரிவித்தேன்.

ஆலையில் உற்பத்தி மிகவும் குறைக்கப்பட்டு விட்டது. பிப்ரவரி 25 முதல் மார்ச் 25 வரை, ஆலையில் ஒவ்வொரு நாளிலும் உற்பத்திக் கணக்கை, நீரி குழுவினர் ஆலை நிர்வாகத்திடம் ஆவணங்களின் ஆதாரங்களோடு பெற வேண்டும் என்று வற்புறுத்தினேன்.

தாமிர உருக்கு உற்பத்தி செய்வதற்கு, பல்வேறு நச்சு உலோகங்களும், ஆர்சனிக், யுரேனியம் உள்ளிட்டவையும் கலந்து உள்ள தாமிர அடர்த்திப் பொருளை, ஆஸ்திரேலியாவில் இருந்து, பல்லாயிரக்கணக்கான டன் கணக்கில் ஸ்டெர்லைட் நிர்வாகம் இறக்குமதி செய்து, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆலைக்குக் கொண்டு வருகிறது.

ஆனால், நீரி குழுவினர் ஆய்வு செய்த நாள்களையொட்டி, ஒரு வார காலம் ஆலைக்குள் இந்தத் தாமிர அடர்த்தி கொண்டு வரப்படவில்லை என்பதையும் நீரி குழுவினரிடம் தெரிவித்தோம்.

இந்த நச்சு உலோகங்களாலும், ஆர்சனிக், யுரேனியத்தாலும் மற்றும் ஆலையின் இயக்கத்தாலும் ஏற்படும் கதிர் இயக்கத்தைச் சோதனை செய்ய, ரேடான் ஆய்வுக் கருவிகளுடன், மும்பை நகரில் இருந்து ஆய்வாளர்கள் இருவர், ஏப்ரல் 21 ஆம் தேதி வந்தனர். எட்டு இடங்களில் ஆய்வு செய்தனர். ஒவ்வொரு இடத்திலும், ஒரு மணி நேரம் கருவி இயக்கப்பட்டது.

ஆலையின் திடக்கழிவுகள் குவிக்கப்படும் இடங்களிலும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆலையில் இருந்து நச்சுத்தன்மை மிக்க கழிவு நீரையோ, கழிவுப்பொருள்களையோ, வெளியில் கொண்டு போய் கொட்டப்படக்கூடாது என்பது, ஆலை கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனை ஆகும். ஆனால், அனுமதி பெறாமலேயே விரிவாக்க வேலைகளில் ஈடுபட்டு உள்ள ஸ்டெர்லைட் ஆலை, வெளியேற்றப்படும் கழிவுகளைக் கொண்டு போய், விரிவாக்கப் பகுதியில், பெரிய அளவில் 18 குழிகளைத் தோண்டி, அதில், கழிவு நீரைக் கொண்டு போய் கொட்டி வைத்து இருப்பதை, நீரி ஆய்வாளர் டாக்டர் நந்தியிடம் எடுத்துக் கூறி, அந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றோம். அங்கிருந்தும், நீரின் மாதிரிகளைச் சேகரித்து, ஆய்வுக்கு எடுத்துச் சென்று உள்ளனர்.

ஏற்கனவே ஆலைக்கு வெளிப்புறத்தில் நாம் சேகரித்த தண்ணீர், சேறு, மண் மாதிரிகளை, தமிழகத்தில் உள்ள ஒரு பரிசோதனைக் கூடத்துக்கு நிபுணர் நித்யானந்த் ஜெயராமன் மூலம் அனுப்பி வைத்து இருக்கிறேன். ஏற்கனவே இம்மாதிரி எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள், அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் மைக் செர்னெயிக் என்பவருக்கு அனுப்பப்பட்டு, அவர் ஸ்டெர்லைட் ஆலையிலும் சுற்று வட்டாரத்திலும்

நடத்தப்பட்ட தண்ணீர், மண் சோதனைகளின் முடிவுகளை, தான் ஆய்வு செய்ததாகவும், அவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருப்பதாகவும், ஆடு, மாடுகள் மற்றும் உயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதையும், தான் கையெழுத்து இட்டு அறிக்கையாகவே தந்து உள்ளார். அதனையும், என்னுடைய பிரமாண வாக்குமூலத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளேன்.

19, 20, 21 ஆகிய நாள்களிலும், 22 முற்பகல் வரையிலும், டாக்டர் நந்தி தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும், ஆய்வின்போது, சுற்றுச்சூழல் ஆய்வு நிபுணர் நித்யானந்த் ஜெயராமன், வழக்கறிஞர் தேவதாஸ், வழக்கறிஞர் ஜோயல், தராசு மகராசன் ஆகியோரும் பங்கு ஏற்றோம். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஆய்வின்போது, மிகவும் உபயோகம் உள்ள தகவல்களை, பேராசிரியை பாத்திமா பாபு அவர்களும் எங்களுக்குத் தந்தார்கள்.

முதல் நாள் பிற்பகலில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் தலைவர், டாக்டர் அருணாசலம் அவர்களையும், உடன் அழைத்துச் சென்றபோது, அவரை அனுமதிக்கக்கூடாது என ஸ்டெர்லைட் நிர்வாக அதிகாரி கூறியபோது, எனக்கும் அவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. நீரி ஆய்வின் தலைவர், டாக்டர் அருணாசலத்தை, ஆய்வில் பங்கு ஏற்க அனுமதித்தார்.

மூன்றாம் நாள் ஆய்வின்போது, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத் தரப்பில் இருந்து என்னிடம் தங்கள் கருத்துகளைக் கூற வேண்டுமென்று என்னிடம் தெரிவித்தபோது, மக்கள் நலனுக்காக, பொது நன்மைக்காக நான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, நீதிக்காகப் போராடி வருகிறேன். இதுகுறித்து நிர்வாகத்துடன் விவாதிப்பது சரியல்ல என்று கூறி மறுத்து விட்டேன்.

நாக்பூரின் நீரி நிறுவனம், 98 ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு நாசம் விளைவிக்கும் என்று அறிக்கை தந்தது.

2003 ஆம் ஆண்டில், நீரி நிறுவனம் இந்த ஆலைக்கு ஆதரவாகவும், 2005 ஆம் ஆண்டில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூறியதை மறுத்தும், ஆய்வு அறிக்கை தந்து உள்ளது.

வருகின்ற 29 ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது. இடையில் நான்கு நாள்களே உள்ளன. நீரி நிறுவனம், உச்ச நீதிமன்றத்துக்குத் தரும் அறிக்கையின் நகல்கள், நமக்கும் தரப்படும்.

என்றுள்ளார்.
ஆளும் மத்திய அரசும்,மாசுக்கட்டுப்பாடு வாரியங்களும் வேதாந்தா குழும நி்றுவனங்கள் போல் செயல் படும் போது அறிக்கைகள் எப்படி இருக்கும் என்பது வெளிப்படை.
நமது மக்களையும்,மண்ணையும் காப்பாற்ற இப்போதைக்கு நாதியே கிடையாது.காரணம் ஆட்சியாளர்களும்,அதிகார வர்க்கமும்  மக்கள் நலனுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்களே.அவர்களுக்கு தேவையானவற்றை பகாசுர நிறுவனங்கள் தானே கொடுக்கின்றன.  நம்மைப் போன்றவர்களுக்கு வக்கு கிடையாதே,,,,,
  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?