நெடியவன் கைது,,,,,



நெடியவன் விசாரணை:நெடியவன் விசாரணை செய்யப்பட்டுள்ள விபரத்தை நோர்வேயின் தொலைக்காட்சி சேவையான TV-2  உறுதிப்படுத்தியிருக்கின்றது. நோர்வேயில் வைத்து விசாரிக்கப்பட்டாலும், நெதர்லாந்து உளவுப் பிரிவினரின் வேண்டுகோளின் பேரிலேயே நெடியவன் விசாரிக்கப்பட்டுள்ளார். நோர்வே பொலீஸ் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மில்லியன் கணக்கிலான யூரோ பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாகவே இவர் விசாரிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. இந்தப் பண விவகாரம் தொடர்பாக சிலர் ஏற்கனவே நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். அதுபற்றிய முக்கிய வழக்கு ஒன்றும் நெதர்லாந்து நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது.
May 21, 2011

 நெடியவன்        
விறுவிறுப்பான மர்ம நாவல் போன்ற அந்த விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் நெதர்லாந்து பொலீஸ்தான் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருந்தது.
நெதர்லாந்துப் பிரஜை ஒருவர், ரொத்தர்டாம் பொலீஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடு செய்திருந்தார். குறிப்பிட்ட ஒரு நபர், தம்மை வற்புறுத்தி பண வசூல் செய்கின்றார் என்பதே அந்த முறைப்பாடு.
அடுத்த சில தினங்களில், இதேபோல வேறு சில முறைப்பாடுகளும் வெவ்வேறு பொலீஸ் நிலையங்களில் பதிவாகின. இந்தப் பதிவுகள் நெதர்லாந்தின் வெவ்வேறு நகரங்களிலும் பதிவாகியிருந்தன. இந்தப் பதிவுகள் நெதர்லாந்து பொலீஸ் இலாகாவுக்கு ‘தலைக்குள் மணியடிக்க’ வைத்தது!
இது ஒரு தனிப்பட்ட கொடுக்கல்-வாங்கல் அல்ல, ஒருவிதமான பணச் சேகரிப்பு என்பது அவர்களுக்குப் புரிந்தது. அவர்கள் தமக்குக் கிடைத்திருந்த சில ‘பணச் சேகரிப்பு’ தொடர்பான விபரங்களை ஆராய்ந்தபோது, சில வில்லங்கமான தகவல்கள் கிடைத்தன.
இவை சாதாரண பணப்பரிமாற்றங்கள் அல்ல என்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.
ஆனால், நெதர்லாந்து பொலீஸ் யாரையும் கைது செய்யவில்லை. வற்புறுத்தி பணம் சேகரிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரை, சுதந்திரமாக வெளியே திரிய விட்டிருந்தது நெதர்லாந்து பொலீஸ். ஆனால் அவரது நடமாட்டங்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டன. இது மாதக்கணக்கில் நடந்தது.
இந்தக் கண்காணிப்பு ஒருபக்கமாக நடந்து கொண்டிருக்க, தமது விசாரணையை ரகசியமாக விஸ்தரித்தது நெதர்லாந்து பொலீஸ். அந்த விசாரணைகளில், பணச் சேகரிப்பு நடைபெறுவது உறுதியாகியது. இந்தப் பணம் போய்ச் சேர்ந்த இடம், நெதர்லாந்துக்கு வெளியே, விடுதலைப்புலிகள் அமைப்பின் அலுவலகம் ஒன்றுக்கு என்ற விபரமும் கிடைத்தது.
விடுதலைப்புலிகள் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2006ம் ஆண்டே பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டு, தடைசெய்யப்பட்டிருந்தது. நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளில் ஒன்று. இதனால், இந்தப் பணப் பரிமாற்றங்கள், தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கான ‘நிதி சேகரிப்பு’ என்ற வகைக்குள் வந்தது.
விஷயம் ‘பெரியது’ என்று தெரிய வந்ததும் நெதர்லாந்து பொலீஸ் இலாகா, இந்த விவகாரம் தமது சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்து கொண்டது. அதையடுத்து தாம் சேகரித்த தகவல்கள் அனைத்தையும் நெதர்லாந்து உளவுப்பிரிவு ஒன்றிடம் ஒப்படைத்தது பொலீஸ் இலாகா.
மற்றைய நாடுகளைப் போலவே, நெதர்லாந்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட உளவுப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் நெதர்லாந்து தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பான உளவுப் பிரிவின் கைகளிலேயே இந்த விபரங்கள் போய்ச் சேர்ந்தன. டச் மொழியில் Algemene Inlichtingen- en Veiligheidsdienst (AIVD) என்று அழைக்கப்படும் இந்த உளவுப்பிரிவின் தலைமையகம், Zoetermeer என்ற இடத்தில் உள்ளது.
AIVD, தமது பாணியில் மேலதிக விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கியது. நெதர்லாந்திலிருந்த சில தொலைபேசி இலக்கங்கள் அவர்களது கண்காணிப்புக்குள் வந்தன. அந்தத் தொலைபேசி இலக்கங்களுக்கு வந்த சில அழைப்புகள் அவர்களை ஆச்சரியப்பட வைத்தன.
சில வெளிநாடுகளில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகளில், நெதர்லாந்தில் நடைபெறும் பணப் பரிமாற்றங்கள் பற்றி அவ்வளவாக பேசப்படவில்லை. ஆனால், அந்தந்த வெளிநாடுகளில் நடைபெற்ற பணப்பரிமாற்றங்கள் பற்றிய கணக்குகள், நெதர்லாந்து தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
இது AIVDக்கு முதலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், போகப்போக, வெளிநாட்டுப் பணச் சேகரிப்புக் கணக்குகளும் நெதர்லாந்திலுள்ள ஒரு நபருக்குத் தெரிவிக்கப்படுகின்றது என்று புரிந்து போனது. அந்த நபர் சர்வதேச அளவில் பணச்சேகரிப்புக் கணக்குகளைக் கையாளும் நபராக இருக்கலாம் எனவும் ஊகிக்கப்பட்டது.
இது நடைபெற்றுக்கொண்டு இருக்கையில், வெளிநாடுகளில் இருந்து பணம் பற்றிய கணக்குகள் மாத்திரமே நெதர்லாந்துக்குள் வருகின்றன, ஆனால், பணம் வருவதில்லை என்பது கவனிக்கப்பட்டது. மாறாக, நெதர்லாந்தில் சேகரிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி, நெதர்லாந்துக்கு வெளியே செல்வது தெரியவந்தது.
இதிலிருந்து, பணம் கணக்குப் பார்க்கப்படும் இடம்தான் நெதர்லாந்து என்றும், பணம் போய்ச்சேரும் இடம் நெதர்லாந்துக்கு வெளியே இருக்கிறது என்றும் ஊகித்தது உளவுத்துறை. அதையடுத்து, சில வெளிநாட்டு உளவுத்துறைகளிடமிருந்தும் இந்தப் பணப்பரிமாற்றங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொண்டது AIVD.
இந்த வகையில் AIVD தொடர்புகொண்ட வெளிநாட்டு உளவுத்துறைகளில் ஒன்று, ஜேர்மன் உளவுத்துறையான Bundesnachrichtendienst (BND)
அவர்களும் கிட்டத்தட்ட இதேபோன்ற பணப்பரிமாற்றங்கள் தொடர்பான தகவல் சேகரிப்பில் இருந்தது அப்போது தெரியவந்தது. நெதர்லாந்து உளவுத்துறையும், ஜேர்மன் உளவுத்துறையும் தத்தமது கையிலுள்ள தகவல்களைப் பரிமாற்றம் செய்துகொண்டனர்.
அப்போதுதான், முதன்முதலில் இந்த விவகாரத்துக்கு ஒரு முழு உருவம் கிடைக்கத் தொடங்கியது.
பணப்பரிமாற்றத்தின் ஜேர்மனித் தொடர்புகள் பற்றிய விபரங்கள் கிடைத்தன. நெதர்லாந்து உளவுத்துறை சம்மந்தப்பட்ட ஆட்களை வெளியே சுதந்திரமாக உலாவவிட்டு விபரங்களைச் சேகரித்ததுபோலச் செயற்படவில்லை ஜேர்மன் உளவுத்துறை.
அவர்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கிவிட்டனர்.
கடந்த வருடம் மார்ச் மாத முதல் வாரத்தில், ஜேர்மன் உளவுப்பிரிவினர் ஜேர்மனியிலுள்ள மொத்தம் 8 இடங்களை ஒரேநேரத்தில் சுற்றி வளைத்தனர். இந்த 8 இடங்களில், தமிழர் தொடர்பு மையம் ஒன்றின் அலுவலகமும் அடக்கம்.
இந்தச் சுற்றிவளைப்பில் ஜேர்மன் பிரஜாவுரிமை பெற்றவர்கள் உட்பட, 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜேர்மன் கைதுகளுடன், நெதர்லாந்தில் விஷயங்கள் கொஞ்சம் குழம்பிப் போயின. தங்களால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஆட்கள் உடனடியாகவே வெளித் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக் கொண்டதை AIVD கவனித்தது. இனியும் இவர்களை வெளியே விட்டு வைத்திருப்பதால், மேலதிக தகவல்கள் கிடைக்கப் போவதில்லை என்பதும் புரிந்து போனது.
இதன் பின்னரே, AIVD தனது வேட்டையைத் தொடங்கியது.
ஏப்ரல் மாதம், நான்காவது வாரம். நெதர்லாந்து உளவுத்துறை ஒரே நேரத்தில் மொத்தம் 16 இடங்களைச் சுற்றிவளைத்தது. இதில் 7 பேர் கைதாகினர். கம்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கள், டி.வி.டிக்கள், போட்டோக்கள் உட்பட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரொக்கப் பணமாக 40,000 யூரோக்களும் எடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில், விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு பிரதான கணக்காளரும், நெதர்லாந்துத் தலைவரும் அடக்கம் என்று கூறப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் மகளிர் அமைப்பு, தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் நெதர்லாந்துத் தலைவர்களும் கைது செய்யப்பட்டதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டது.
இந்தக் கட்டத்தில், விவகாரம் நெதர்லாந்து நீதிமன்றத்துக்குச் சென்றது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு நிதி சேகரித்தல் தொடர்பான வழக்கு பதிவாகியது.
வழக்கு ஒருபுறத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்க, AIVD இந்த விவகாரத்தில் மேலதிக உளவுத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தது. காரணம், இந்தப் பணப்பரிமாற்றங்கள், ஒரு சர்வதேச வலையமைப்பாகச் செயற்பட்ட தகவல்கள் அவர்களிடம் கிடைத்திருந்தன.
அதேநேரத்தில் ஜேர்மனியில் BND, தமது விசாரணை வட்டத்துக்குள் இருந்தவர்களை விசாரித்து, இந்த வலையமைப்பின் பரிமாணங்களைப் புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தது..
அவர்களது விசாரணையில் வித்தியாசமான தகவல் ஒன்று கிடைத்தது. அது என்னவென்றால், ஜேர்மனியில் பணச் சேகரிப்புடன் தொடர்புடைய ஒருவர், யுத்தம் முடிவடைந்தபின் தம்வசமிருந்த பணத்துடன் ஜேர்மனியைவிட்டு வெளியேறிவிட்டார் என்பது.
அவருக்கு வலைவிரித்த ஜேர்மன் உளவுத்துறை, அவர் ஆபிரிக்காவில் மடகாஸ்கரில் தன்னிடமுள்ள பணத்துடன் செட்டிலாகிவிட்டதைத் தெரிந்து கொண்டது. BND கோரியதையடுத்து அந்த நபர் மடகாஸ்காரிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.
ஜேர்மன் பிரஜையான அவர் டியூசல்டோஃப் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, அவரைக் கைது செய்து தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டது BND.
நெதர்லாந்து உளவுத்துறையிடம் இந்த சர்வதேச வலையமைப்பு தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைக்கத் தொடங்கின.
பிரிட்டன், சுவிஸ், கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், நோர்வே உட்பட சில நாடுகளில் இந்த வலையமைப்பில் இணைக்கப்பட்டிருந்த தகவல்கள் அவர்களிடம் இருந்தன. அந்த நாடுகளின் உளவுத் துறைகளின் ஒத்துழைப்பு கோரப்பட்டது. AIVDயின் அதிகாரிகள் இந்த நாடுகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சேகரிக்கப்பட்ட பணத்துக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்தபோது, இவர்களால் விசாரிக்கப்பட்ட அனைவருமே ஒரே திசையை நோக்கித்தான் கையைக் காட்டியிருக்கிறார்கள். “All roads lead to Rome” என்று சொல்வதைப்போல, எல்லாத் தகவல்களும் நோர்வேயில் வசிக்கும் நெடியவன் என்ற நபரை நோக்கியே இருந்திருக்கின்றன.
அதையடுத்தே நெடியவனை விசாரிக்கும் முடிவு நெதர்லாந்தில் எடுக்கப்பட்டது. நோர்வேயின் உதவியும் கோரப்பட்டது. சட்டரீதியான இந்த விவகாரத்தில் நெதர்லாந்துக்கு உதவ, நோர்வேக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை.
கடந்த புதன்கிழமை (மே 18ம் தேதி) உலகின் வெவ்வேறு நகரங்களிலும் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன. இவற்றில் பல நெடியவனின் தலைமையிலான குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டவை என்று கூறப்பட்டது.
இந்த நிகழ்வுகள் நடைபெற்ற அதே மே 18ம் தேதி, நெடியவன் ஒஸ்லோவில் விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்!
நெதர்லாந்திலிருந்து இந்த விசாரணைக்கென்று விசேடமாக ஒரு நீதிபதியும், ஆறு டிஃபென்ஸ் அட்டேர்னிகளும் நோர்வே சென்றிருந்தனர். நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில், மூடிய அறைக்குள் நெடியவன் மீதான விசாரணைகள் நடைபெற்றன. விசாரணைகள் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டன.
விசாரணையின்பின் என்ன நடக்கும்? தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவாரா? விசாரணையில் என்ன விபரங்கள் வெளிவரும்? வேறு யாராவது, வேறு நாடுகளில் வைத்து விசாரிக்கப்படுவார்களா?
இவைதான் இன்று மில்லியன் டொலர் கேள்விகள்.
                                                                                                                                                  நன்றி:அலைகள்
.
 ---------------------------------------------------------------------------------------------------------------
Tamil Cinema Actor - Kamalhasan's Gallery
உலக நாயகன் கமலஹாசனை ‘கலைஞானி’ என்று கோலிவுட் வட்டாரம் அழைப்பதில் தவறேதுமில்லை. தான் நடிக்கும் படத்திற்காக தன்னையே உருமாற்றிக் கொள்ளும் திறமை இவரிடம் அதிகமாகவே உண்டு. அதற்கு சமீபத்திய உதாரணமும் இருக்கிறது.

செல்வராகவன் இயக்கத்தில் முதன் முறையாக கமலஹாசன் நடிக்கும் படம் ‘விஸ்வரூபம்’. இப்படத்திற்காக தன் உடல் எடையைக் குறைத்து, மிகவும் இளமையாக காட்சி தருகிறார். ‘வாழ்வே மாயம்’ படத்தில் தோன்றிய கமலஹாசனை இப்படத்தில் காணலாமாம். அந்தளவிற்கு தன்னை இளமையாக உருமாற்றியுள்ளார்.

இப்படம் தமிழில் மட்டுமின்றி ஒரே நேரத்தில் தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராக உள்ளதாம். வேட்டையாடு விளையாடு படத்தை விட மிகவும் ஸ்டைலான படமாக இது இருக்குமாம். திகில் காட்சிகளுக்கும், அதிரடி சண்டை காட்சிகளுக்கும் குறைவே இல்லாமல் இப்படத்தை உருவாக்கப் போகிறார்களாம்.

================================================================================================== 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?