சுவிஸ் அரசின் மனிதாபிமானமற்ற செயல்.


சுவிஸ்லாந்து அரசாங்கமானது 2010ஆண்டு இறுதியில் முறைகேடான முறையில் 235க்கும் மேட்பட்ட தமிழர்களின் தொலைபேசி இலக்கங்களை கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அதன் காரணமாக கொழும்பில் பல தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு, காணமல் போய் அல்லது நீதிக்கு புறம்பான முறையில் கொலை செய்யப்பட்டும் உள்ளார்கள் என சுவிஸ்லாந்து தேசிய தொலைகாட்சி நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
                             
இவ்வாறு சுவிஸ் அரசாங்கத்தினால் வழங்கபட்டுள்ள தொலைபேசி எண்கள் யாவும் சுவிஸ்லாந்தில் உள்ள விடுதலை புலிகள் ஆதரவாளர்களினால் இலங்கையிலுள்ள தமது சொந்தங்களுடன் தொடர்பு கொண்ட இலக்கங்கள் ஆகும் என சுவிஸ்லாந்து ஜனநாயக கட்சியின் கென்டன் பாராளுமன்ற உறுப்பினர் லாதன் சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.
சுவிசிற்கான முன்னாள் இலங்கை துதூவர் Maj.Gen.Jagath Dias அவர்களே இச் செயற்பாட்டை முன்னின்று செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட சுந்தரலிங்கம் " நாங்கள் இவ்வாறான மனித உரிமை மீறல் தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பினோம் ஆயினும் சுவிஸ் அரசாங்கமானது இந்த கொடூர செயலுக்கு அனுமதி வழங்கி இருந்தது" என அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு பல இலங்கை தமிழர்கள் விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பெயரில் சுவிஸ்சில் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரினதும் தொலைபேசி அழைப்புக்கள் நீண்ட காலமாக கண்காணிப்பு செய்யப்பட்ட பின்னர் அது தொடர்பான தகவல்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டது.
இந்த சட்டமுறையானது சுவிஸ் தமிழர்கள் தொடர்புகளை பேணுகின்ற இலங்கையில் உள்ள அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் தற்பொழுது சுவிஸ் அரச வழக்கறிஞர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியும் ஏற்பட்டுள்ளது என அத்தொலைகாட்சி நிறுவனம் சுட்டி காட்டுகின்றது.
                                   
சுவிஸ் அரசினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து தொலைபேசி எண்களுமே தமிழர்கள் அடிக்கடி தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளும் கடைகளின் தொலைபேசி எண்களாகும். இதன் காரணமாக பல தமிழர்களின் பெயர்கள் கருப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் அரசினால் கைதுசெய்யப்பட்ட விடுதலை புலி அதரவாளர் ஒருவர் சார்பாக ஆஜராகும் வக்கீல் Max Birke Mair கருத்து வெளியிடுகையில் இது முற்றிலும் சட்டதிற்கு புறம்பான செயல் என தெரிவித்தார்.
வழக்கறிஞர் Patrick Camon தான் இலங்கைக்கு தரவுகள் அனுப்புதல் தொடர்பாக அனுமதி வழங்கியவர் ஆவர்.
சுவிஸ்சில் இயங்குகின்ற உயிர் ஆபத்துக்களை எதிர்நோக்குபவர்களின் சங்கமானது அரசாங்க தரப்பு வழக்கறிஞரால் மேற்கொள்ளப்பட இந்த உத்தரவிற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன் இது இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்ற விசாரணையினை சுயாதீனமான முறையில் முன்னெடுத்து செல்ல தடையாக உள்ளது என தெரிவித்தனர்.
Rainer Senweizer சட்ட பேராசிரியரும் இந்த செயலை வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் அவர் இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் செய்யல்பாடு எனவும் தெரிவித்தார்.
சுவிஸ்லாந்து போல் வேறு நாடுகளும் இலங்கைக்கு தொடர்ச்சியாக இவ்வாறான உதவிகளை செய்யுமானால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை தொடரத்தான் செய்யும்.
                                                              
*********************************************************************88888888888888*************************************************************
இருட்டில் என்னதான் இருக்கு.? 
இத்தாலிய நாட்டு விஞ்ஞானிகள் பூமியின் வயிற்றைக் கிழிப்பது போல், நிலத்தைத் தோண்டி, கப்பியிருக்கும் இருட்டில் மறைந் திருக்கும்மர்மங்களைக் காண முயற்சித்துள்ளனர். அவர்கள் மேலும் பல கேள்விகளுக்கு விடைகாண முனைந்துள்ளனர். அவர்களின் மூளையைக் குடைந்து கொண்டுள்ள கேள்விகள்: கோழிகள் ஏன் இருட்டுப் பகுதியில் அதிக முட்டைகளிடுகின்றன? ஏன் சேவல்கள், காலைக் கதிரவன் ஒளியைப் பார்க்காமலேயே, இருட்டுக் குகையிலிருந்து கூவுகின்றன? ஏன் பசு, திறந்த வெளியில் கொடுக்கும் பாலைவிட, இருட்டுப் பகுதியில் இருந்தால் அதிக பாலைக் கொடுக்கிறது? ஒரு மனிதன் எவ்வளவு நேரம் இருட்டில் இருந்தால், வண்ணங்களின் வேறுபாட்டை அறியமுடியாமல் போகும்?
                                                
அணுகுண்டு வெடிப்பினால் ஏற்படும் கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, ஒருவர் தரையில் எவ்வளவு ஆழமான குழியில் பதுங்க வேண்டும்? விஞ்ஞானிகள் கோழி, ஆடு, மாடுகளை எடுத்துச் சென்று அவைகளுடன் 30 நாட்கள் தங்கத் திட்டமிட்டுள்ளனர். இருட்டில் உள்ள மர்மத்தை அறிய விஞ்ஞானிகள் எடுக்கும் முயற்சிகளின் மர்மத்தை, கண்டுபிடிப்பை உலகம் அறிய ஆவலுடன் உள்ளது.
வெளிச்சத்தைக் காண முயலும் வேளையில், இருளின் பொருள் என்ன என்று காண வேண்டும் என்று விரும்புகின்றனர். இருட்டுக் குகையில் வாழ்ந்த கற்கால மனிதன் இருட்டிலிருந்து வெளிவந்து, வெளிச்சத்தில் வாழத் துவங்கிய காலம், நாகரிகம் தோன்றிய காலம் ஆகும். இந்த நாகரிக வளர்ச்சி தேய்பிறையாகிவிடும் அச்சம் தோன்றுகிறது. அணுசக்தி ஆயுத வளர்ச்சியால், மனித இனம் அச்சத்தினால், இருள் சூழ்ந்த புதைகுழிகள், குகைகளில் ஒதுங்க வேண்டி யுள்ளது. இது அடுத்த இருண்ட காலத்துக்கு மனித இனம் நகர்ந்து செல்வதாக உள்ளது. இருளில் எப்படி வாழலாம் என்று கற்றுக்கொடுக்க ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள், வர இருக்கும் புதிய இருண்ட காலத்துக்கு நம்மைத் தயார்செய்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
-நன்றி: தி இந்து
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
அணு உலைகளில் மறைந்திருக்கும் ஆபத்து.
ஜப்பான் ஃபுகுஷிமா அணு உலை விபத்தைத் தொடர்ந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி விழும் என்று தோன்றவில்லை. மார்ச் 27ந் தேதி அங்குள்ள ஓர் உலையில் இருந்து கசிந்த தண்ணீர் மாதிரியைப் பரிசோதித்த ஜப்பானிய அதிகாரிகள், அது மிக அதிக அளவு கதிரியக்கத்துடன் இருந்தது என்றும், ஒரு சில மணி நேரங்களிலேயே இது மோசமாகப் பாதிக்கக் கூடும் என்றும் கூறினார்கள். அங்கிருந்து வெளியேறிய சீசியம் 137, ஐயோடின் 131 ஆகிய இரண்டு கதிரியக்க நியூக்ளைடுகளும் மனித உடல்நலனுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த விடயங்கள், 1986இல் நடைபெற்ற செர்னோபில் அணுஉலை விபத்தைவிட இது மோசமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
செர்னோபில் விபத்து நிகழ்ந்த பிறகான இந்த கால் நூற்றாண்டு காலத்தில் "பேரழிவு விபத்துகள் என்பவை கடந்த காலமாகிவிட்ட ஒன்று" என்ற பசப்பு வார்த்தைகளை அணுஉலை நிறுவனங்கள் திரும்பத்திரும்பக் கூறி வந்தன. ஆனால் ஃபுகுஷிமாவில் நிகழ்ந்த மோசமான விபத்தால் அந்நிறுவனங்களின் போலியான வாக்குறுதிகள் வெட்டவெளிச்சமாகிவிட்டன. ஆனால் இந்தியாவில் அணுசக்திக்காக வாதாடுபவர்கள், ஃபுகுஷிமா அணுஉலை விபத்து என்பது ஒரு சிறிய விலகல்தான், பெரிய விஷயமல்ல என்பது போல் சித்திரிக்க முயற்சிக்கிறார்கள்.
இவை போன்ற பேரழிவு விபத்துகள் இந்திய அணு உலைகளில் நிகழ வாய்ப்பில்லை என்று இந்திய அணுசக்தித் துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர். கதிரியக்கம் வெளியாவதற்கு முன்பாக பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகள் உள்ளதாகவும், அந்த தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்துமே பொய்த்துப் போகாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்த அமைப்புகள் தாங்களாகவே செயலிழக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் ஏதாவது ஒரு நிகழ்வு தொடர்ச்சியான, அடுத்தடுத்த செயலிழப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஃபுகுஷிமாவில் முதல் கட்ட, பதிலி மின் விநியோகத்தை ஆழிப் பேரலை சிதைத்துவிட்டது. மின் கட்டுப்பாட்டு பகுதியின் அடித்தளத்துக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. 1993ஆம் ஆண்டில் நரோரா அணு மின் உலையில் ஏற்பட்ட தீவிபத்து மின்சாரத்தை தடை செய்து, குளிர்ச்சியூட்டும் அமைப்புகளை நிறுத்தியது. இதுபோன்ற நிலையில், தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்று மதிப்பிடுவது கடினம்.
இன்னும் சிலரோ அடிப்படையையே தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். அமெரிக்க இந்திய வர்த்தகக் கவுன்சிலின் தலைவரான ரான் சோமர்ஸ், "நல்ல வேளையாக இந்தியா தற்போது புதிய தொழில்நுட்பத்தின் கீழ் இயங்கும் அணுஉலை திட்டத்தை தொடங்கியிருக்கிறது. இதன் கீழ் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது, அணுஉலைகள் தானாகவே செயல்பாட்டை நிறுத்திவிடும்" என்று கூறியிருக்கிறார். அமெரிக்க அணுஉலை நிறுவனங்களை ஊக்குவிப்பதில் சோமர்ஸ§க்கு உள்ள ஆர்வம் தெளிவாகத் தெரிகிறது. அதன் காரணமாக அவர் குழம்பியிருக்கிறார் என்பதும் தெரிகிறது. அவர் கூறுவதைப் போலவே ஃபுகுஷிமா அணு உலைகளும் நிலநடுக்கத்துக்குப் பின் தாங்களாகவே செயல்பாட்டை நிறுத்திவிட்டன. ஆனால் அதேநேரம் ஒரு அணுஉலை செயல்பாட்டை நிறுத்திவிட்டதாலேயே, எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறிவிட்டு, அதை இயக்குபவர்கள் வீட்டுக்குப் போய்விட முடியாது.
அணு உலையின் ஆதாரப் பகுதியில் உள்ள அணு எரிபொருள் மிக மோசமான வகையில் கதிரியக்கம் கொண்டது. அணுஉலை செயல்பாட்டை நிறுத்திய பிறகும் தொடர்ச்சியாக வெப்பத்தை வெளியிட்டுக் கொண்டேதான் இருக்கும். அதிலிருந்து வெப்பத்தை அகற்றாவிட்டால், எரிபொருள் வெப்பமடைந்து, அணுஉலை உருகக்கூடும். ஃபுகுஷிமாவில் ஏற்பட்டது இந்தப் பிரச்சினைதான். அங்குள்ள பலஅடுக்கு குளிர்ச்சியூட்டும் அமைப்புகள் ஏதோ ஒரு காரணத்தால் செயலிழந்தன.
ஆனால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தவறான விஷயங்களை முன்னிறுத்தி பேசி வருகின்றனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், "இது போன்ற ஒரு விபத்து இந்தியாவில் நடக்க சாத்தியமே இல்லை" என்றார். ஃபுகுஷிமாவில் ஏற்பட்டது போல் இல்ல£விட்டாலும் இந்திய அணு சக்தி கமிஷனின் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கிடங்குகளில் எந்த வகையான விபத்து நடக்கவும் வாய்ப்புள்ளது. ஃபுகுஷிமாவில் குளிர்ச்சியூட்டுவதற்கான தண்ணீர் கிடைக்காததால், அணு எரிபொருள் வெப்பமடைய ஆரம்பித்தது. வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, எரிபொருளைச் சுற்றியுள்ள ஸிர்கோனிய உறை தண்ணீருடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை உருவாக்கும். ஹைட்ரஜன் எளிதில் எரியக்கூடியது. அது ஜப்பானில் இருந்தாலும் சரி, ஜெய்தாபூரில் இருந்தாலும் சரி, எங்கே இருந்தாலும் இதுதான் நிகழும்.
எளிமையான அதேநேரம் தர்மசங்கடமான ஓர் உண்மையை மறைக்க அரசு தொடர்ச்சியாக முயற்சிக்கிறது. அது இந்தியாவிலுள்ள எந்த அணுஉலையிலும் மோசமான விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதுதான் அது. அரிதாகவே நடக்கும் என்றாலும், நமது அணுஉலைகளில் விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நமது அணுசக்தித் துறை முன்வைக்கும் பாதுகாப்பு முறைகளை நம்ப முடியாததன் காரணமாகவும், இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் காரணமாக மிகப் பெரிய அளவு அணுஉலைகள் விரிவாக்கப்படும் என்பதாலும் இப்படி நம்ப வேண்டியிருக்கிறது. விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின்படி பார்த்தால் 2008இல் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்த பிரச்சினையில் மத்திய அரசு தப்பிக்குமா என்ற நிலை வந்தபோது, முறைகேடான வகையில்தான் இந்த அரசு ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது. கடந்த ஆண்டில் இந்திய குடிமக்களின் உரிமைகளை சர்வதேச அணு தொழில் நிறுவனங்களுக்கு அடகு வைப்பது போல, அணு விபத்துகளுக்கு போதுமான இழப்பீடு கோர முடியாத வகையில் அணு இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஒரு நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதையும் வீணடித்தது.
"அணுசக்தி எனும் சொகுசு வசதியை இந்தியா துறக்க முடியாது" என்று இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் செயலாற்றிய முக்கிய பிரதிநிதியான ஆஷ்லே டெல்லிஸ் கூறியிருந்தார். அணுசக்தியின் விலை அதிகம், அது மிக மோசமானது, மேலும் இந்திய ஜனநாயகத்தை பாதிக்கக் கூடும் என்பதையும் இத்துடன் சேர்த்துக் கொண்டால் (காசு கொடுத்து எம்.பிகளை வாங்கியது அல்லது ஜெய்தாபூரில் உருவான மிகப்பெரிய மக்கள் எதிர்ப்புக்கு எதிராக அரசு அடக்குமுறையை கையாண்டதை பார்க்கும்போது), அந்தக் கூற்று ஒரு வகையில் சரி. அணுசக்தியை விரிவாக்கும் செயல்பாட்டை இந்தியா ஏற்க முடியாது என்பதே அது.
                                                                                                                                                  - சுவ்ரத் ராஜு - எம்.வி.ரமணா
(கட்டுரையாளர்கள் இருவரும் இயற்பியலாளர்கள், அணு எதிர்ப்பு, அமைதிக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள். மொழிபெயர்ப்பு : ஆதி. நன்றி: டவுன் டு எர்த்,கீற்று தளம்.)
                                                           

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?