கபட நாடக வேடதாரி?

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:  ஜெயலலிதா என்ன தான் முதலமைச்சர் பதவியிலே அமர்ந்திருந்தாலும், அவரது நினைவெல்லாம் நிறைந்திருப்பது திமுக மீது தான். சங்கரன்கோவில் இடைத்தேர்தலாக இருந்தாலும், இலங்கை பிரச்னையாக இருந்தா லும் திமுகவையும் என்னையும் கடுமையாக தாக்காமல் அவரால் இருக்க முடியாது.

இலங்கை தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது  மத்திய அரசு  தலையிட்டு போர் நிறுத்தம் செய்திட கேட்டு நான் விடியற்காலை 5.45 மணியளவில்  உதவியாளர் கூட உடன் வராத நிலையில் தனியாக அண்ணா நினைவிடம் சென்று உண்ணாவிரதம் தொடங்கினேன். செய்தி டெல்லி வரை சென்று, சிதம்பரமும்,  மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் தலையிட்டு என்னிடம் இலங்கை நிலை குறித்து விளக்கி என் உடல்நிலை கருதி உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.
அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்த அறிக்கையில், போர் நடவடிக்கைகள் முற்றுப்பெற்று விட்டதென்றும், தகுந்த ஆணைகள் வழங்கப்பட் டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. மக்கள் பாதுகாப்பு பற்றிய பிரச்னைகளை தீர்ப்பதற்கு இலங்கை அரசு செய்துள்ள அறிவிப்பு முக்கியமான முதல் படியாகும் என்று தெரிவித்ததையொட்டிதான் அன்று பிற்பகலில் எனது உண்ணாவிரதத்தை திரும்பப் பெற்றேன். 
இலங்கை தமிழர்களுக்காக அதைக் கூட செய்ய முன்வராத, போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான் என்று அறிக்கை விட்டு விட்டு, பிரதமருக்கு கடிதம் எழுதுவதையே வாடிக்கையாக கொண்டு திசை திருப்பும் ஜெயலலிதா, நான் ஏதோ மூன்று மணி நேர நாடகம் நடத்தியதாகத் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார். நானாவது இந்த வயதில் உண்ணாவிரதம் இருந்தேன். இப்போதும் அமெரிக்க தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க முன் வரவில்லை என்றால், திமுகழகத்தினர் உண்ணாவிரதம் இருப்பார்கள், நானும் பங்கேற்பேன் என்றும் அறிவித்தேன். 
மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்கள் விலகுவார்கள் என்று தீர்மானம் எழுதி உயர்நிலை செயல் திட்ட குழுவிலே நிறைவேற்றுவதாக இருந்தேன். ஆனால் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியதை தவிர வேறு என்ன செய்து கிழித்தார்? திமுக ஆட்சி இருந்த போது, பிரதமருக்கு கடிதம் எழுதினால் போதுமா? நேரிலே எடுத்துக் கூற வேண்டாமா என்று எத்தனை அறிக்கைகளிலே ஜெயலலிதா என் மீது தாக்குதல் தொடுத்தார்? தற்போது அவர் ஏன் டெல்லி சென்று பிரதமரிடம் முறையிடவில்லை?
அதற்கு மாறாக பிரதமரே கருணாநிதியின் கபட நாடகத்திற்கு துணை போகின்ற அளவிற்கு நடந்து கொள்கிறார் என்று அவதூறு அறிக்கை விடுகிறார் என்றால் அது நாடாளுமன்ற நடவடிக்கைகளையே அவமதிக்கின்ற செயலாகும். பிரதமர் கூறியதை வைத்து, உண்ணாவிரத போராட்டத்தை நான் கை விட்டு விட்டேன் என்கிறார் ஜெயலலிதா. பிரதமரின் பேச்சின் போது  அதிமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்று மேசையை தட்டியதை தொலைக்காட்சியில் காட்டினார்கள். பழ நெடுமாறன் போன்றவர்கள் 23ம் தேதி நடத்தவிருந்த வேலை நிறுத்த போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா மட்டும் பிரதமர் தெளிவற்ற பதிலை கூறியதாக அறிக்கை விடுத்துள்ளார். 
அதுபோலவே நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப் படும் என்ற முடிவினையும் ஜெயலலிதா எடுத்துள்ளார். கூடங்குளம் கடந்த ஆறு மாதங்களாக மூடிக் கிடக்க யார் காரணம்? போராட்ட குழுவினரை ஜெயலலிதா அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சரவையிலே கூடங்குளம் அணு நிலைய பணிகளை நிறுத்திவைக்குமாறு பிரதமரையும், மத்திய அரசையும் கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதால் தானே ஆறு மாதமாக அந்த அணு மின் நிலையம் மூடப்பட்டு, தமிழகத்திலே வரலாறு காணாத அளவிற்கு மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு இருள் சூழ்ந்ததோடு, கூடங்குளம் நிலையம் மூடப்பட்டு அலுவலர்களுக்கெல்லாம் பணியே இல்லாமல் ஊதியம் கொடுத்த அளவிலே மட்டும் ரூ.900 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட காரணம் யார்?
சாட்சாத் ஜெயலலிதா அல்லவா? அது மாத்திரமல்ல, போராட்டக்காரர்களை சமாதானப்படுத்துவதற்கு பதிலாக, அவர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசே ஊக்கம் கொடுத்த காரணத்தால், அப்பாவிப் பொதுமக்கள் ஏமாந்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டு, இன்று அந்த போராட்டக்காரர்களையும் ஜெயலலிதா ஏமாற்றி அவர்களை கைது செய்கின்ற நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறார்.
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதை போல அந்த அப்பாவி மக்களை மேலும் ஏமாற்றுவதற்காக ஏற்கனவே மத்திய அரசு பதினைந்து பேரை கொண்ட குழுவினை அமைத்த பிறகும், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் போன்றவர்கள் உண்மையை தெளிவாக்கிய பிறகும், தமிழக அரசின் சார்பாக தேவையே இல்லாமல் ஒரு குழுவினை அறிவித்து அவர்களை அனுப்பி, அவர்கள் அந்த பகுதி மக்களை சந்திக்காமல், அறிக்கை கொடுத்து, அதை அப்படியே அலட்சியமாக கிடப்பிலே போட்டு விட்டு, தற்போது அந்தப் பகுதி வளர்ச்சிப் பணிக்கு  500 கோடி ஒதுக்கீடு செய்யப்போவதாக திடீரென்று அறிவித்திருப்பதற்கு பெயர் தான் கபட நாடகம் என்பதை, கபடநாயகிகளின் கடந்த கால வரலாற்றை மறந்து நம்பி ஏமாந்து போராட்டத்திலே ஈடுபட்ட கூடங்குளம் பகுதி மக்கள்தான் எண்ணிப்பார்க்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
_________________________________________________________________________________
இன்று பல்வேறு பணிகளால் புதிய பதிவை ஆற,அமர போடவில்லை.இந்த அறிக்கையை சும்மா இருக்கும்போது படியுங்கள். மற்றபடி ஒன்றும் இல்லை.
சங்கரன் கோவில் முடிவுகளுக்குப்பின் சந்திப்போம்.
_____________________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?