அயோத்தி

1949 ஆம் ஆண்டு அயோத்தியில் ஒரு மசூதியில் நடைபெற்ற ஒரு சம்பவம், அதனால் ஏற்பட்ட பதற்றம் மற்றும் வன்முறையால் இதுவரை ஆயிரக்கணக்கான உயிர்கள் பலி வாங்கப்பட்டுள்ளன.  அதன் பின்னர் பொறுப்பேற்ற ஐந்து பிரதம மந்திரிகளுக்கும் இந்த விவகாரம் தீராத தலைவலியை உண்டாக்கியது. 
சராயு நதி, நேபாள நாட்டின் எல்லையோரம் வழியாக வட  இந்தியாவில் நுழைந்து கங்கையுடன் சங்கமித்து அயோத்தி நகரம் வழியாக பாய்ந்து செல்கிறது. 1949ல் அயோத்தி  நகரம் கோயில்கள், ஆசிரமங்கள் மற்றும் மடங்கள் நிறைந்த ஒரு நகராக அறியப்படுகிறது. பண்டைக் காலம் முதல் இந்நகரம், ராமரின் பிறந்த ஊராக கூறப்பட்டு வருகிறது. "அயோத்தி" என்பதற்கு "எவராலும் வெல்ல முடியாத" என்று சமஸ்கிருதத்தில் பொருள் கொள்ளப்படுகிறது. இந்நகரில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் வசித்து வந்தாலும், நெற்றியில் பட்டை  தீட்டிக்கொண்டு, நீண்ட தாடியுடனும், பெரிய அங்கியுடனும் சுற்றி வரும் சாதுக்களால் இன்று இருப்பது போலவே அன்றும் நிறைந்து காணப்பட்டது. 
1930ல் நாற்பது வயது மதிக்கத்தக்க அபிராமதாஸ் என்கிற ஒரு சமயகுரு பீகாரில் இருந்து அயோத்திக்கு வந்திருந்தார். இவர் தீவிரமான ராம பக்தராவார். அவருடைய சீடர்கள் கூறுகையில், "ராமரை அவர் பிறந்த இடத்தில் பிரதிஷ்டை செய்வதே தனது வாழ்வின் லட்சியம்" என்று சூளுரைத்து வந்ததாக தெரிவிக்கின்றனர். அவர் கூறிய இடத்தில் சுமார் 400 வருடங்களுக்கு முன்னால் முகலாய சக்கரவர்த்தியான பாபரின் படைகள் கட்டிய மசூதி ஒன்று இருந்து வந்தது. குரான் மற்றும் பெர்சிய மொழி எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட செய்யுள் அடிகள் அதன் சுவர்கள் முழுவதும் காணப்படுகின்றன. 
மசூதி இருந்த இடம் ஒரு சுவரால் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் ஒரு சிறிய மர  மேடை அமைத்து அதன் மீது ஒரு ராமர் சிலையை வைத்து இந்துக்கள் வழிபட்டு வந்தனர். திரு அபிராம தாஸுக்கு  ராமர் சிலையை அந்த மசூதிக்கு உள்ளேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற விபரித எண்ணம் தோன்றியது. அவரைப் போலவே பல சாதுக்களுக்கும் அந்த ஆசை தொற்றிக்கொண்டது.
அவர்கள், அங்கே பழங்காலத்தில் ஒரு இந்துக் கோயில் இருந்ததாகவும், அதை தகர்த்துவிட்டு இந்த மசூதி எழுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறி வந்தனர். இதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் காரணமாகவே இரு பிரிவினருக்கும் அடிக்கடி வன்முறை வெடித்து வந்துள்ளது.  
அபிராம தாஸ் தன சீடர்களிடம், தன்  கனவில் அடிக்கடி ராமபிரான் அந்த மசூதியின் மைய மண்டபத்தில் தோன்றி காட்சி தருவதாக கூறிவந்தார் 
1949 ஆம் ஆண்டின் மத்திய காலகட்டத்தில், அவர் தான் கண்ட கனவை பாயிசாபாத் தின் நகர சட்டநடுவரான  (மாஜிஸ்திரேட்) குரு தத் சிங்கிடம் தெரிவித்தார். ஆச்சரியப்பட்டுபோன திரு சிங், "சகோதரரே, எனக்கும் இந்தக் கனவு நெடு நாட்களுக்கு முன்பே தோன்றியது, இப்போது உங்களுக்கு வந்துள்ளது" என்றார். பின்பு இருவரும் ராமரின் உருவச்சிலையை அந்த இடத்தில் எவ்வாறு  வைப்பது என்பது பற்றி தீவிர ஆலோசனையில் இறங்கியதாக திரு  சிங்கின் மகனான திரு குரு பஸ்வந்த் சிங்க¤டம¢ தெரிவிக்கிறார்.  
அதன் பிறகு ஏற்பட்ட சம்பவத்தை பல இந்துக்கள் தெய்வச் செயல் என்றே நம்ப ஆரம்பித்தனர். ஆனால் திரு குரு பஸ்வந்த் சிங் இதை மறுத்து, மிகவும் தெளிவாக திட்டமிடப்பட்டு காரியம் நடந்துள்ளதாக தெரிவிக்கிறார். 
பிரிவினைக்கு முன்னால், அதாவது 1941 ஆம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள்  தொகை, மொத்த மக்கள் தொகையில் 24.4% ஆக இருந்துள்ளது. பிரிவினைக்கு பின்னர் ஒரு பத்து வருடம் கழித்து அது 10% ஆக  குறைந்துள்ளது. 
பிரதமராக பொறுபேற்றுக் கொண்ட திரு நேரு, இந்தியாவை பல வகையில் சீர்படுத்தி, பல மதங்கள் ஒன்றாக, சகோதரத்துவத்துடன் வாழவும், உலக அரங்கில் இந்தியா  ஒரு மத சார்பற்ற நாடாக அடையாளம் காணப்பட பெரிதும் பாடுபட்டார். ஆனாலும் பல இந்துக்கள், பிரிவினை ஏற்பட்டு பாகிஸ்தான் நாடு உண்டானதையும், "விருப்பப்பட்ட இஸ்லாமியர்கள் இங்கேயே இருக்கலாம், அல்லது அங்கே செல்லலாம்" என்கிற வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.  காங்கிரஸ் கட்சியிலேயே சிலர், இந்தியாவை இந்து சார்பு கொண்ட நாடாக மாற்ற ஆர்வம் கொண்டிருந்தனர். அனைத்திந்திய இந்து மகாசபை அமைவதற்கு இவர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர் என்பது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயும் இந்த இயக்கத்தை சேர்ந்தவன் தான். 1949 ஆம் ஆண்டு அவன் தூக்கிலிடப்பட்டான்.  
பிரிவினைக்கு பிறகும் அயோத்தியில் பல இஸ்லாமியர்கள் இங்கேயே தங்கிவிட்டனர். இஸ்லாமிய கலைத் தொழிலாளி உண்டாக்கிய இந்துக் கடவுள் சிலைகளை இந்துக்கள் வணங்கி வந்தனர். இந்துக் கோயில் குருக்கள், பூஜைக்கு துணிகளையும் மலர்களையும் இஸ்லாமியக் கடைக்காரரிடமிருந்து வாங்கி வருகின்றனர். அயோத்தியில் உள்ள ஒரு இந்துக் கோயிலுக்கு ஒரு இஸ்லாமிய மேலாளரும் உள்ளார் என்பதும் சுவாரஸ்யமான ஒரு தகவல்.  அன்று, முகம்மது அசிம் அன்சாரி என்கிற 25 வயது தையல்காரர் "நாங்கள் ஏன் எங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்? நாங்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்கள்" என்று கூறியதும் நினைவுக்கு வருகிறது. 
பாயிசாபாதின் சட்ட நடுவரான திரு குரு தத் சிங், அலஹாபாத் பல்கலைகழகத்திலிருந்து பட்டம் பெற்றவராவார். சிவில் சர்வீஸ் துறையில் சேர்ந்தாலும் சில விஷயங்களில் பிரிட்டிஷ் மேலதிகாரிகளிடம் வேறுபட்டு நின்றார். இவர் தலைப்பாகை அணிந்து கொள்வார், அவர்களோ தொப்பி அணிவதை விரும்புவர். நீங்கள் ஏன் தொப்பி அணியக் கூடாது? என்று அவர்கள் கேட்டால், நீங்கள் ஏன் தலைப்பாகை அணியக் கூடாது? என்று எதிர் கேள்வி கேட்பார் என்று அவர் மகன் கூறுகிறார். 
கலவரங்களை அடக்குவதில் பாகுபாடு காட்டாமல், கண்டிப்புடன் செயல்பட்டார். சில சமயங்களில் இந்துக்களிடமே அவர் "ஏதேனும் நீங்கள் வன்முறையோ குழப்பமோ விளைவித்தால், "உள்ளே லாக்கப்பில் தள்ளிவிடவும் தயங்க மாட்டேன்" என்றும் கண்டிப்பு காட்டுவார்.  இஸ்லாமியர்களுடன் கலந்துரையாடும் போது , "நீங்கள் எல்லோரும் என் சகோதரர்கள், நாம் எல்லோரும் இந்தியத் தாயின் பிள்ளைகள்"  என்று அன்பொழுக பேசுவார் என்றும் அவர் மகன் கூறுகிறார். 
பணியில் திறம்பட நேர்மையாக பணியாற்றினாலும், சிறுபான்மையினரை குறிப்பாக இஸ்லாமியர்களை திருப்தி படுத்தும் அரசாங்கத்தின் போக்கு அவருக்கு பெருத்த மன வேதனையை உண்டாக்கியது. பாகிஸ்தான் என்கிற நாடு உதயமானதை அவர் விரும்பவில்லை என்றாலும், "உங்களுக்கென்று ஒரு நாடு உண்டாக்கப் பட்டதென்றால் , நீங்கள் அங்கு செல்வது தான் முறை" என்கிற சிந்தனை அவரிடம் இருந்ததாக அவர் மகன் கூறுகிறார். 
திரு சிங் இந்து மதத்தின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தார். எந்த விதமான தீய பழக்கங்களும் அவரிடம் இல்லை. கல்லூரிக் காலம்  தொட்டு ராமபிரானை கடவுளாக வணங்கி வந்தார். ராமர் என்பவர் விஷ்ணுவின் மறுவடிவம், விஷ்ணு காக்கும் கடவுளாகவும், பிரம்மா படைப்பவராகவும், சிவன் அழிப்பவராகவும் அறியப்படுவர்.  
இந்து மத குறிப்புகளின் படி, ராமர் அயோத்தியில் பத்தாயிரம் வருடங்களுக்கு முன் பிறந்தவர். அவர் தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகனாவார். அவர் சூரிய வம்சத்து வழித் தோன்றலாக அறியப்பட்டவராவார்.  ராமர் "மரியாதை  புருஷோத்தமர்" என்கிற உயர்ந்த பட்டத்தையும் பெற்றவராக திகழ்ந்தார். தன்  மனைவியான சீதாவை இலங்கை அரக்கனான ராவணனிடம் இருந்து போரிட்டு வென்று, அவளை  மீட்டு அயோத்தி நகருக்கு திரும்பினார் என்று சமஸ்கிருத ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அயோத்தியின் அரசனாக திறம்பட ஆட்சி செய்தார் என்றும், இறுதிக் காலத்தில் அயோத்தியில் ஒரு கதவு வழியாக சொர்கத்திற்கு சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.  
திரு சிங்கிற்கு வயதான அதே வேளையில், ராமரை அவர் பிறந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யும் வைராக்கியமும் அதிகரித்தது. இஸ்லாமியர்கள் பாபர் மசூதியை மனமுவந்து தங்களுக்கு தர வேண்டும் என்றும் விரும்பினார். "நான் அவர்கள் மதத்தை மதிக்கும் போது, அவர்களும் அது போல செய்யலாமே" என்று கூறுவார் என்று அவர் மகன் தெரிவித்துள்ளார்.  
1940ம¢ ஆண¢டு மத்தியில், திரு சிங், இந்திய தேசிய  சிவில் துறையில் பணிபுரியும் நிர்வாகச் செயலரான திரு கே.கே.நாயரை சந்தித்து பேசினார்.  இந்தத் துறைதான் இன்றைய ஐ.ஏ.எஸ். துறைக்கு முன்னோடியாக விளங்கியது. திரு நாயர் கேரளத்தை சேர்ந்தவராவார். இந்த இருவரின் எண்ண  ஓட்டமும் ஒரே மாதிரியாக இருந்தது. மேலும் இருவரும் இந்து மகாசபை கட்சியை ஆதரித்து வந்தனர். அவர்களின் அரசாங்க பதவியினால், இருவராலும்  வெளிப்படையாக ஆதரித்து செயல்பட முடியவில்லை.  
அவர்கள் இருவரும் தங்களை அயோத்திக்கு மாற்றுமாறு, தங்கள் மேலிடத்திற்கு விண்ணப்பம் வைத்தனர். 1948 ஆம் ஆண்டு திரு சிங், நகர சட்ட நடுவராக அங்கே பொறுபேற்றார். அதே வேளையில், திரு நாயரும் மாவட்ட சட்ட நடுவராக பொறுபேற்றுக் கொண்டார். அவர்கள் இருவரும் இப்பொழுது உயிருடன் இல்லை.  திரு நாயரின் மகனிடம் மேற்கொண்டு தகவல்களை பெற முயன்றபோது, அவர் பேட்டி எதுவும் தர மறுத்துவிட்டார்.
திரு சிங், திரு நாயர், திரு அபிராம தாஸ் மற்றும் பிற அதிகாரிகள் இரவு நேரத்தில் திரு சிங்கின் இல்லத்தில் கூடி ராமர் சிலையை எவ்வாறு மசூதியினுள் பிரதிஷ்டை செய்வது என்பது பற்றி ரகசியமாக விவாதித்தனர்.  அப்போது தனக்கு 15 வயது இருக்கும் என்றும், இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் போது, தான் அவர்களுக்கு நீரும், தேனீரும் அளிக்கச் சென்றதாகவும், சில சமயங்களில் கதவருகே நின்று  அவர்கள் என்ன பேசினார்கள் என்று கேட்டதாகவும் திரு சிங்கின் மகன் தெரிவிக்கிறார்.  
திரு குரு பஸ்வந்த¢  சிங்கின் கூற்றுக்களை திரு மகாந்த் சத்யேந்திர தாஸ் உறுதிப்படுத்துகிறார். இவர் திரு அபிராம தாஸின் சீடராக இருந்தவர் இப்பொழுது இவரை அரசாங்கம் தலைமைச் சமயகுருவாக நியமித்துள்ளது. 1958 ஆம் ஆண்டு இவர் திரு அபிராம தாஸிடம் சேர்ந்துள்ளார். அவர் கூறுகையில்:  
மாவட்ட உயர் அதிகாரிகள், திரு கே.கே.நாயர், மற்றும் திரு குரு தத் சிங் உட்பட திரு அபிராம தாஸுடன் கூட்டுச் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி, பூட்டிக் காவலில் இருக்கும் பாபர் மசூதிக்குள் எவ்வாறு ராமர் சிலையை வைப்பது என்பது பற்றி விவாதித்தனர். 
ஒரு இந்துக் காவலாளி மதியம் மற்றும் மாலை வேளைகளில் மசூதியில் காவல் பணியில் இருந்தார்.  ஒரு இஸ்லாமியக் காவலாளி இரவு நேரக் காவல் பணியில் இருந்தார். திரு அபிராம தாஸையும் மற்றும் சில சிறிய சாதுக்கள் கூட்டத்தையும் உள்ளே அனுமதிக்க இந்துக் காவலாளி ஒப்புக் கொண்டார். இந்து மதத்திற்கு ஒரு மிகப் பெரிய புண்ணிய செயல் செய்து பயன் பெறுவாய் என்று கூறி அவர் மனதைக் கரைத்தனர்.  இந்துக் காவலாளி பின்னர் நடு இரவில் இஸ்லாமியக் காவலாளியிடம் மசூதியின் சாவிகளை ஒப்படைத்துச் சென்றுவிடுவதாக திட்டம் ஏற்பாடானது. மறுபக்கம் இஸ்லாமியக் காவலாளியை திரு குரு தத் சிங்கும், கே.கே.நாயரும் சந்தித்து அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினர். அவர் சம்மதிக்க மறுத்தால், உயிருக்கே ஆபத்து நேரக் கூடும் என்று மிரட்டப்பட்டதாக தெரிகிறது.  அந்தக் காவலாளிகளும் அவருடைய வழித் தோன்றல்களும் பற்றி பின்னர் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.  
ராமரின் சிலை ஏழு அங்குல உயரமும் எட்டு உலோகங்களாலும், உருவம் குழந்தை பருவ நிலையிலும் உருவாக்க தீர்மானிக்கப் பட்டது.  சம்பவம் நடந்த பிறகு, திரு நேருவும் அவருடைய அரசாங்கமும்  கோபப்பட்டு என்ன நடவடிக்கை எடுப்பார்கள்  என்று திரு சிங்கும், நாயரும்  நன்கு உணர்ந்திருந்தனர்.  சிலையை அப்புறப்படுத்த வரும் உத்தரவை ஏற்பதைக் காட்டிலும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதே மேல் என்றும் தீர்மானித்திருந்தனர்.  
நவம¢பர¢ 1949 ஆம் ஆண்டு இறுதியில், அயோத்தியில் பதட்டம் அதிகமாக நிலவியது.  சாதுக்களும் ராம பக்தர்களும் மசூதிக்கு வெளியே நெருப்பு மூட்டி யாகத்தை நடத்தினர். ராமரை அவர் பிறந்த இடத்தில் திருப்பிக் கொண்டுவருவது பற்றியும் சொற்பொழிவு நடத்தினர். இதில் அங்கிருந்த இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. 
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று தேதி குறிக்கப்பட்டது.  அன்று இரவு இஸ்லாமியக் காவலாளி காவல் பொறுப்பு ஏற்க வந்த போது, இந்துக் காவலாளி அவரிடம் சாவிக் கொத்தை கொடுத்துவிட்டு சென்றார். அதிகாலை மூன்று மணி அளவில் (இந்து மதத்திற்கு அது அனுகூலமான உகந்த நேரமாக கருதப்பட்டது) அபிராம தாஸும் அவருடன் வந்த சாதுக்களும் சிறிய மணிகளை ஆட்டியபடி தங்கள் பணியைத் துவக்கினர். விளக்கேற்றிய பிறகு, அந்த சிறிய சிலை மைய மண்டபத்தின் உள்ளே வைக்கப்பட்டு, "இரக்கம் நிறைந்த பரந்த மனப்பான்மையுடைய கடவுள் தோன்றினார்"! என்று பாடினார்கள்.  
அந்த இஸ்லாமியக் காவலாளி உள்ளூர் அதிகாரிகளுக்கு அளித்த வாக்குமூலத்தில், அதிகாலை மூன்று மணி அளவில் மசூதியின் மைய மண்டபப் பகுதியில் பெரிய ஒளி தோன்றியதாகவும், அங்கு சென்று பார்த்த பொழுது அங்கு சிறிய ராமர் சிலை தானாக உதயமாகி ஒளி  வீசிக் கொண்டிருந்ததாகவும்  தெரிவித்துள்ளார். 
சம்பவம் நடந்த பிறகு, பதட்டத்தை தணிக்க போலீசார் அங்கு வரவைக்கப்பட்டனர்.  சாதுக்கள் கூட்டத்தை கலைக்க,  வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சில சாதுக்கள் மீது துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. திரு சிங்கின் மகன் தன் தந்தையாரும் மற்றவர்களும் தீட்டிய திட்டப்படி போலீஸாருக்கு வானில் சுடும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டதாக தெரிவிக்கிறார். 
இரண்டு தகவல் தொடர்பாளர்கள் அயோத்திக்கும் பைசாபாதிற்கும் இடையே மிதிவண்டியில் சென்று செய்தி சேகரித்து திரு குரு தத் சிங்கிடம் தெரிவித்தனர்.  அவர் பிரத்யேகமாக நியமித்த ஒரு இந்துப் பணியாளரிடம் தன் கைப்பட எழுதிய தகவல்களை கொடுத்து திரு நாயரிடம் சென்று சேர்க்குமாறு பணித்திருந்தார்.  இவ்வாறு இருவரும் தகவல் பரிமாற்றத்தை பெற்றனர் என்று கூறுகிறார் திரு குரு பஸ்வந்த சிங். மேலும் அவர்,  திரு சிங், தனது இல்லத்தில் வழிபாட்டையும், பூஜையையும் நடத்தி முடித்தார் என்றும், "அவர்  என்ன வேண்டினார் என்று தெரியவில்லை, ஆனால் என் அனுமானப்படி அவர், "எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கட்டும்" என்று கூறியிருப்பார் என்று நம்புகிறேன்"  என்கிறார்.  
பிறகு திரு சிங், அயோத்தியில் மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடையுத்தரவு பிறப்பித்தார். ஆனாலும் காவல் துறையினருக்கு அவர் "இந்துக்களை தடுக்க வேண்டாம்" என்று மறைமுகமாக உத்தரவிட்டார்.  அவர் தனது பாயிசாபாத் இல்லத்தை விட்டு, அதிகாரிகள் தங்கும் அரசினர் விடுதிக்கு சென்றார். தன்னைப் பற்றி யார் விசாரித்தாலும் வெளியூர் சென்றிருப்பதாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி இருந்தார். 
அருகில் இருக்கும் ஊர்களுக்கு செய்தி காட்டுத்தீ போல பரவியது.  ஆயிரக்கணக்கான இந்து பக்தர்கள் சிலையை தரிசனம் செய்ய அயோத்திக்கு படை எடுத்த வண்ணம் இருந்தனர்.  திரு அக்க்ஷய பிரம்மச்சாரி, வயது 35 - (இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், மற்றும் தீவிர ராம பக்தரும் கூட), "ராம பக்தர்கள் வாகனங்களில் ஒலி பெருக்கி மூலம், "கடவுளை தரிசிக்க வாருங்கள் " என்று எல்லா இடங்களுக்கும் கூவியபடி சென்றனர். உள்ளூர் அதிகாரிகளோ, திரு நாயரோ, ஒருவர் கூட சிலையை அகற்ற அல்லது பதட்டத்தை தணிக்க ஒரு சிறு துரும்பைக் கூட நகர்த்தவில்லை. 
------------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?