மூட்டை கட்டிய அன்சுல் மிஸ்ரா.

மதுரையில் அழகிரி சாம்ராஜ்யத்தை ஒடுக்க நியமிக்கப்பட்டவர்கள்தான் சகாயம்,அடுத்து அன்சுல் மிஸ்ரா போன்ற மாவட்ட ஆட்சியர்கள்.
இப்போது அழகிரி அமுங்கி விட்டார்.
சகாயம் துணிகள் விற்க [கோ -ஆப் டெக்ஸ் ]அனுப்பப்பட்டு விட்டார்.கல்கோரி விவகாரத்தில் அதிமுகவினரிடமும் அடங்காமல் இருந்ததால் இப்போது அன்சுல் மிஸ்ராவும்
வணிகவரி கணக்கு-வழக்கு பார்க்க ஒதுக்கப்பட்டூ விட்டார்.
கலெக்டராக இருந்த சகாயம் கடந்தாண்டு மே மாதம் கோ ஆப்டெக்ஸ் இயக்குனராக மாற்றப்பட்டார். திருவண்ணாமலை கலெக்டராக இருந்த அன்சுல் மிஸ்ரா மதுரைக்கு மாற்றப்பட்டார்.
2012 மே 28ல் புதிய கலெக்டராக அன்சுல் மிஸ்ரா பொறுப்பேற்றார். கிரானைட் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி பல்வேறு உண்மைகளை இவர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். பெரிய நிறுவனங்களுக்கு சீல் வைத்தார். கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 800க்கு மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர் நியமனத்தில் ஆளுங்கட்சியினரின் பரிந்துரைகளை இவர் ஏற்கவில்லை. நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை மட்டும் நியமனம் செய்தார். இது ஆளும் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.வருவாய்த் துறையில் பட்டா மாறுதல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக 3 தாசில்தார்கள், 5 துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள், 15 விஏஓக்களை சஸ்பெண்ட் செய்தார். பொதுமக்களின்  மனுக்களை பெற்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் பேஸ்புக் மூலம் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட புகார் மனுக்களை பெற்றார். இவற்றின் மீது விசாரணை நடத்தி உடனுக்குடன் தீர்வு கண்டார்.ஊரக பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை அடிக்கடி ஆய்வு செய்தார்.

சரியில்லாத பணிகளின் ஒப்பந்தங்களை ரத்து செய்தார். அரசு கட்டிடங்களைக் கட்ட ஒப்பந்தம் எடுத்த கான்ட்ராக்டர்கள் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு கமிஷன் கொடுத்து தரமற்ற பணிகளை செய்ததாக புகார் எழுந்தது. இதில், விசாரணை நடத்தி, கான்ட்ராக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். மேலும், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் முறையற்ற பரிந்துரைகளை கலெக்டர் ஏற்பதில்லை எனக் கூறப்பட்டது.இதனால், ஆத்திரமடைந்த ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் சேர்ந்து  கூட்டம் போட்டு கலெக்டரை மாற்ற வேண்டும் என மூத்த அமைச்சர்கள் குழுவிடம் மனு கொடுத்தனர். ஆனால், அமைச்சர்கள் குழு கலெக்டரை பகைத்து கொள்ளக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பினர். மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல் புகார்கள் தொடர்பாக அன்சுல் மிஸ்ரா நடவடிக்கை எடுத்தார். குறிப்பாக உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதி பெறாமல் முறைகேடாக கட்டப்பட்ட 40க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்தார். மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளம்பர பலகைகளை அகற்றினார். இதில் மேயருக்கும், கலெக்டருக்கும் மோதல் ஏற்பட்டது.ரிங் ரோட்டில் பில் இல்லாமல் டோல்கேட் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக போலீஸ் மூலம் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வைத்தார்.

 முறைகேட்டில் ஈடுபட்ட 2 மாநகராட்சி ஊழியர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மாநகராட்சியின் நிர்வாகத்தில் கலெக்டர் தலையீடுவதாக கூறி, கவுன்சில் கூட்டத்தில் கலெக்டரை கண்டித்து தீர்மானம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் மாநகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தில் ஆளுங்கட்சியினரின் தூண்டுதல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. நேற்று முன்தினம் இரவு கலெக்டர் முன்னிலையில் மேயர், மாநகராட்சி ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.இந்நிலையில் பணியேற்று ஒரு வருடம், ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையில் மக்களின் நன்மதிப்பை பெற்ற, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய கலெக்டராக கடலூரில் சப் கலெக்டராக பணியாற்றும் சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அன்சுல் மிஸ்ராவுக்கு வணிகவரித்துறை இணை ஆணையர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிரானைட் விசாரணை நிலை என்ன?
கிரானைட் குவாரியில் யி16 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு என முன்னால் கலெக்டர் சகாயம் கண்டுபிடித்தார். இதனை தொடர்ந்து கலெக்டர் அன்சுல்மிஸ்ரா முறையாக விசாரணை நடத்தி 86 குவாரிகளில் முறைகேடு என கண்டுபிடித்தார். உரிய விசாரணைக்கு பிறகு போலீசார் 50க்கு மேற்பட்ட வழக்கு பதிவு செய்து 40க்கு மேற்பட்டோரை கைது செய்தனர்.ஏற்கனவே கிரானைட் விசாரணை அதிகாரியான ஜான்லூயிஸ் மாற்றப்பட்டார். தற்போது கலெக்டர் அன்சுல்மிஸ்ராவும் மாற்றப்பட்டதால் இதன் விசாரணை எப்படி போகும் என தெரியவில்லை. தற்போது இதில் இருக்கும் ஒரே அதிகாரி மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
 கலெக்டர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. மேலூர் பகுதியில் 20 ஆண்டுகளாக முறைகேடாக நடந்த கிரானைட் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். குவாரிகள் மூலம் மாவட்டத்தில் தனிராஜ்யம் நடத்தியவர்களை கைது செய்ததுடன், நிலஅபகரிப்பு, கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்தும் வருவாய்த் துறையினரை கொண்டு ஆய்வு நடத்தினார். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை, அளந்து, மதிப்பீடு செய்து, ஏலமிட ஏற்பாடுகள் செய்தார். குறைதீர் நாள் கூட்ட நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. மாற்றுத் திறனாளிகள், முதியோரிடம் தனி அக்கறை செலுத்தினார். லஞ்சம், முறைகேடு புகாரிகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
 இதனால் வருவாய்த் துறையினர் போராட்டமே நடத்தினர்.
சமீபத்தில் முறைகேடு செய்த துணை தாசில்தார் ஒருவரை கலெக்டர் பணி நீக்கமே செய்தார். நாள்தோறும் கலெக்டரிடன் பேஸ்புக்கில் பலர் புகார் அனுப்பினர். அவற்றின் மீது கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார். யூனியன்களிலும், பிர்க்கா அளவிலும், நகராட்சிகளிலும் நேரடியாகச் சென்று மக்கள் குறைகளை கேட்டார்.
 3 நாட்கள் பெண்களுக்கான முகாம் நடத்தி, மனுக்கள் பெற்றது, கவுன்சிலிங், மருத்துவ முகாம் நடத்தியதும் பெண்களிடம் வரவேற்பை பெற்றது. விதிகளை மீறிய பல கட்டடங்களுக்கு சீல் வைத்தார். இப்பிரச்னையில் மாநகராட்சியுடன் உரசல் ஏற்பட்டது. வளர்ச்சித் திட்டப் பணிகள் தரம் குறித்தும், "கட்டிங்' தொடர்பாகவும் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதிருப்தியான ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் முன்னிலையில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில், "கலெக்டர், எஸ்.பி., திட்ட இயக்குனர் இருக்கும் வரை சம்பாதிக்க முடியாது. இவர்கள் மூவரையும் மாற்ற வேண்டும்,' என வெளிப்படையாக பேசினர். ரிங்ரோட்டில் முறைகேடாக கட்டணம் வசூலித்த ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
 பணவசூலில் மாநகராட்சியில் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என கூறப்பட்டது.
 போலீசாரின் நடவடிக்கைக்கு, கலெக்டரின் பின்னணி இருக்கலாம் எனக் கருதிய மாநகராட்சி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
மேயர் ராஜன்செல்லப்பா, கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
"கிரானைட்' கற்களை "இ-டெண்டர்' விட முயற்சியையும் அன்சுல் மிஸ்ரா மேற்கொண்டார். ஆளும் கட்சியினர் மேலிடத்தில் முட்டி மோதினர். மாநகராட்சி நிர்வாகத்திலும் தேவையில்லாமல் கலெக்டர் தலையிடுகிறார் என, 2 நாட்களுக்கு முன் தலைமை செயலாளருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
நேற்று திடீரென சென்னை வணிகவரித்துறை இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
என்னதான் ஆள்வோர் எண்ணப்படி நடந்து கொண்டாலும் கட்சிக்காரர்கள் வரவு-செலவுக்கு இடைஞ்சலாக இருந்தால் மூட்டையை கட்ட வேண்டியதுதான்.இது இன்னொரு முறை நிருபணமாகியுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
தங்க நாணயம்- தங்க கட்டி விற்பனையை நிறுத்தம்.
 ----------------------------------------------------------------------------------------------------------------------
ஆபரண தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.
 ஒரே நாளில் மட்டும், ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 728 ரூபாய் சரிவடைந்து, 19,032 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த வீழ்ச்சி, இரண்டு ஆண்டுகளுக்கு முந்திய விலை நிலவரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்து, பங்குச் சந்தை மற்றும் அமெரிக்க டாலரில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இதனால், தங்கம் விலை, கடும் சரிவை கண்டு வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,470 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,760 ரூபாய்க்கும் விற்பனையானது.
 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 26,420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கம் விலை, கிராமுக்கு, 91 ரூபாய் குறைந்து, 2,379 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 728 ரூபாய் சரிவடைந்து, 19,032 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 980 ரூபாய் வீழ்ச்சிகண்டு, 25,440 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 42.10 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 39,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்ற, 2011ம் ஆண்டு, நேற்றைய தேதியில், ஒரு கிராம், தங்கம், 2,072 ரூபாய்க்கும், ஒரு சவரன், 16,576 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த ஆண்டு, இதே தேதியில், ஒரு கிராம் தங்கம், 2,811 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,488 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆக, நடப்பாண்டுடன் ஒப்பிடும் போது, தங்கம் விலை கிராமுக்கு, 432 ரூபாயும், சவரனுக்கு, 3,456 ரூபாயும் வீழ்ச்சிகண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
suran
வரும், ஜூலைமுதல், நகை கடைகளில், தங்க நாணயம் மற்றும் தங்க கட்டி விற்பனையை நிறுத்த, வர்த்தகர்கள் முடிவு செய்துள்ளனர். நாட்டின் ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகரித்துள்ளதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சரிவடைந்து வருகிறது. நாட்டின் மொத்த இறக்குமதியில், கச்சா எண்ணெய் பங்களிப்பு, 70 சதவீதமும், தங்கம் பங்களிப்பு, 20 சதவீதமும் உள்ளது.
கடந்த, 2011ம் ஆண்டில், இந்தியாவின் தங்கம் இறக்குமதி, 850 டன்னாகவும், சென்ற நிதியாண்டில், 800 டன்னாகவும் இருந்தது. தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, சுங்கவரி, 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மொத்த தங்கம் இறக்குமதியில், 20 சதவீதம், தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகளாக, விற்பனை செய்யப்படுகின்றன. பொது மக்கள், தங்க நாணயம் மற்றும் தங்க கட்டிகளை, முதலீட்டுநோக்கத்திற்காக மட்டுமே, வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, "தங்க நாணயம் விற்க வேண்டாம்' என்று, வங்கிகளுக்கு, மத்திய அரசு, அண்மையில் தெரிவித்திருந்தது.
தங்கம் பயன்பாட்டில், மும்பைக்கு அடுத்து, தமிழகம் உள்ளது. இங்கு, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்க நகை நிறுவனங்கள் உள்ளன. இதில், 10 சதவீதம் மட்டுமே, அமைப்பு சார்ந்தவை. தமிழகத்தில் விற்பனையாகும், மொத்த தங்கத்தில், 70 சதவீதம், சென்னையில் விற்பனையாகிறது.
 ஒரு கிலோ தங்கம் விற்பனையில், 10 சதவீத பங்களிப்பை நாணயங்களும், தங்க கட்டிகளும் கொண்டுள்ளன.
தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தற்போது, வர்த்தகர்கள், தங்க நாணயம் மற்றும் தங்க கட்டி விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
 தமிழகத்தில் உள்ள  நகை கடைகளிலும், ஜூலை முதல் வாரத்தில் இருந்து, தங்க நாணயம் மற்றும் தங்க கட்டி விற்பனை இருக்காது .

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெற்றிக்கு அடிப்படை

-----------------------------------

மனக் கட்டுப்பாடே!

--------------------------------

வாழ்வில் ஒருவர் பெறும் வெற்றியானது, அவரின் அறிவுத்திறன் அல்லது கல்லூரியில் அவர் பெறும் மதிப்பெண்களால் மட்டும் நிகழ்வதில்லை. ஒருவரின் சுயகட்டுப்பாடே, வெற்றியை பிரதானமாக தீர்மானிக்கும் அம்சமாக திகழ்கிறது.
பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் ஒருவர், பல்வேறான குழப்பங்களுக்கு ஆளாகிறார்.
 தான் படிக்கும் கல்லூரி, சிறந்ததாக இருக்க வேண்டுமென கருதுகிறார். ஆனால் ஒருவர், எத்தகைய பிரபலம் வாய்ந்த கல்லூரியில் படிக்கிறார் என்பதைவிட, அவர் அங்கே எதை கற்றுக்கொள்கிறார் மற்றும் எப்படி கற்றுக்கொள்கிறார் என்பதே முக்கியம்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒருவர் வாழ்வில் வெற்றியடைய வேண்டுமெனில், அவருக்கு சுய கட்டுப்பாடு மிகவும் முக்கியம் என்ற முடிவு கிடைத்துள்ளது.
 உங்களின் மிதமிஞ்சிய உணர்வுகளை அடக்கும் சுய கட்டுப்பாட்டு பழக்கமானது, கல்லூரி வாழ்க்கையில் மட்டுமல்ல, உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முழுவதும், உங்களுக்கு வெற்றியைத் தரும்.
சுய கட்டுப்பாட்டின் சக்தியை நீங்கள் உணர வேண்டுமெனில், Marshmallow டெஸ்ட் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். வால்டர் மிஸ்செல் என்ற உளவியல் நிபுணரால், கடந்த 1972ம் ஆண்டு, ஸ்டான்போர்டு பல்கலையில், நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையே Marshmallow டெஸ்ட். Marshmallow என்பது ஒரு இனிப்பான தின்பண்டம்.
தனது செயல்பாட்டிற்கு, ஒரு வகுப்பறையில், நர்சரி பள்ளி மாணவர்களை அவர் திரட்டினார். வகுப்பின் ஆசிரியர் அந்தக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அந்த தின்பண்டத்தை வழங்கினார்.

 தின்பண்டங்களைப் பெற்ற குழந்தைகளிடம் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதாவது, வகுப்பின் ஆசிரியை வெளியே சென்று ஒரு சிறு வேலையை முடித்துவிட்டு வருவார். அதுவரை, அத்தின்பண்டத்தை குழந்தைகள் உண்ணலாம் அல்லது ஆசிரியர் வரும்வரை காத்திருக்கலாம். காத்திருக்கும் குழந்தைகளுக்கு, ஆசிரியர் வந்தபின், கூடுதலாக இன்னொரு தின்பண்டம் வழங்கப்படும் என்பதே அந்த நிபந்தனை.

ஆசிரியர் வெளியில் சென்று திரும்பிய பின்னர், குழந்தைகளைப் பார்த்தார். சில குழந்தைகள் தின்று முடித்திருந்தன. சில குழந்தைகளோ, பொறுமையாக காத்திருந்தன.

காத்திருந்த குழந்தைகளை, வளர்ந்து, கல்லூரிப் படிப்பை முடித்து, வேலைக்கு சென்று பணிபுரியும் காலம் வரை, வால்டர் மிஸ்செல் கண்காணித்து வந்தார்.
சிறுவயதில், அந்த வகுப்பறையில், தின்பண்டத்தை உண்ணாமல் வைத்திருந்து, காத்திருந்த குழந்தைகள், மேல்படிப்பில் சிறந்து விளங்கியதோடு, நல்ல பணிவாய்ப்புகளைப் பெற்று, ஆரோக்கியமான உடல்நலத்தைக் கொண்டிருந்து, மற்றவர்களுடன் நல்ல உறவையும் பேணி வந்தார்கள் என்பதை அவர் கண்டறிந்தார்.
கல்லூரி வாழ்வில் நுழைந்தவுடன், ஒரு புதிய சுதந்திரமான உலகை, இளைஞர்கள் உணர்கிறார்கள். கல்லூரி வாழ்க்கை என்பதே, சந்தோஷமாக ஆடி-பாடி திரிந்து, இன்பமாக இருப்பதற்குத்தான் என்றும், படிப்பது மற்றும் வகுப்பறை நடவடிக்கைகளில் பங்கு கொள்வது அவ்வளவு முக்கியமற்றது என்றும் அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.
 இதன்மூலம், அவர்களின் தங்களின் எதிர்கால மற்றும் நீண்டகால நலனை பணயம் வைக்கிறார்கள். அவர்களால், தங்களின் மனஉணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடிவதில்லை. குறுகியகால சந்தோஷங்களுக்காக, நீண்டகால நன்மையை தொலைக்கின்றனர்.
எனவே, ஒவ்வொரு மாணவரும், எப்போதுமே கட்டுப்பாட்டோடு இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இன்னொரு கூடுதல் தின்பண்டத்திற்கு காத்திருக்கும் பண்பானது, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்தல் மற்றும் நேர்மறையாக இருத்தல் ஆகிய குணநலன்களை குறிக்கின்றன.
நீங்கள் உங்களுக்குள் நம்பிக்கை வைக்கவில்லையெனில், உங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பவில்லையெனில், உங்களின் வாழ்வில் எதிர்மறை விளைவுகளே ஏற்படும்.
 எதிர்மறை எண்ணங்களை தன்னுள் வளர்த்துக் கொண்டவர்கள், வெற்றிக்கான வாய்ப்புகள், தங்கள் கதவுகளை தட்டும்போது, அதை கவனிக்க தவறிவிடுவார்கள்.
எனவே, அவசரப் புத்தியை கைவிடுங்கள். தேவையற்ற கோபம் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்.
பொறுமையையும், நேர்மறை எண்ணத்தையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
 வெற்றி உங்களைத் தேடிவரும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

suran
-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?