மரபணு மாற்றம் எனும் நச்சு விதைகள்.

'புழு -பூச்சியே தின்னாத ,தின்றால் இறக்கிற 

மாதிரி வடிவமைக்கப்பட்ட ஒரு மரபணு 

மாற்று பயிரை, மனிதன் மட்டும்

 எப்படி தின்ன முடியும்?'
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, குபீரென்று சமூக அக்கறையோடு புறப்பட்டுள்ளனர் இந்த நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் அலாதி பாசமும், அக்கறையும் கொண்ட தொழிலதிபர்கள் சிலர். குறிப்பாக, விவசாயத்தின் மீதும்... உணவு உற்பத்தி மீதும் இவர்களின் பாசம் பொங்கிப் பீறிடுகிறது. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், பி.டி என்றும் ஜி.எம் என்றும் விளிக்கப்படும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் விஷயத்தில் இவர்களின் அக்கறை...வான் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.
'இந்தப் பாழாய் போன நூறு கோடி இந்தியர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால், மரபணு மாற்றப்பட்ட விதைகள் ஒன்றுதான் வழி. இதை வாங்கிப் பயிரிட்டால் மட்டுமே, இந்தியர்களுக்குச் சோறு கிடைக்கும். இல்லாவிட்டால், அத்தனை பேரும் சோறு தண்ணியின்றி அழிந்துபோவார்கள். இத்தகைய அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக அறிவியலைப் பயன்படுத்திக் கண்டறியப்பட்டிருக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள் சிலர். ஆனால், மோடிக்கு தெரியும் மரபணு மாற்றப்பட்ட விதைகளின் அருமை' என்று மேடைபோட்டு முழங்க ஆரம்பித்துள்ளனர்.

மிகப்பெரும் தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.கோபாலகிருஷ்ணன், மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார். இன்னும் பற்பல தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பு, அடிப்பொறுப்பு, நுனிப்பொறுப்பு என்று உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு ஆதரவாக கூட்டங்களை நடத்துவது, மோடி அரசாங்கத்திடம் லாபி செய்வது என்று பக்காவாக வேலைகளை ஆரம்பித்துவிட்டனர்.

எனக்கென்னவோ... 'ஆடு நனையுதுனு ஓநாய் அழுத கதை' தான் நினைவுக்கு வருகிறது.

இந்தத் தொழில் அதிபர்களுக்கெல்லாம் ஏன் இந்த அதீதமான திடீர் அக்கறை?

மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்து, அநியாய விலை வைத்து, உலக அளவில் விற்பனைக்கு விட்டு, கோடி கோடியாகப் பணம் பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனம். இதிலிருந்தே நம்மூர் தொழிலதிபர்களின் அதீத அக்கறை ஏன் என்பது உங்களுக்கெல்லாம் விளங்கியிருக்க வேண்டும். அப்படி விளங்காதவர்களுக்காக மேற்கொண்டும் சொல்கிறேன்.
இத்தகையத் தொழிலதிபர்களின் எதிர்கால கனவே... 'பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் கொட்டும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்யும் மான்சான்டோவின் இந்திய ஏஜென்டுகளாக மாறிவிட்டால், நமக்கும்கூட கொட்டுமே கோடி கோடியாக லாபம்' என்பதுதான்!
இதெல்லாம்தான், இந்த இளிச்சவாய இந்தியர்களின் மீது இவர்களுக்கெல்லாம் அதீத பாசத்தைப் பொங்க வைக்கிறது.

மரபணு மாற்றப்பட்ட விதைகளில் உருவாகும் உணவுகளை உண்டால், விளைவுகள் என்னவாக இருக்கும் என்று உலக அளவில், முழுமையாக எந்த ஆராய்ச்சியும் செய்து, முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. நுண்ணுயிரியின் மரபணுவை எடுத்து, பயிர்களின் மரபணுவில் புகுத்தி, உருவாக்கப்படுவதுதான் மரபணு மாற்று விதைகள். இதில் குறிப்பாக உணவுப் பயிர்களைத்தான் அதிகமாக குறி வைத்திருக்கிறது மான்சான்டோ. 'இப்படிப்பட்ட விதைகளில் விளையும் பயிர்களை பூச்சிகள் உண்ணாது. காரணம், பூச்சிகளுக்கு எதிரான விஷம், இந்த மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் விதைகளிலேயே உருவாகிவிடும்' என்பதை, மான்சான்டோ நிறுவனமே வெளிப்படையாகச் சொல்கிறது. 'இன்றைக்கு பூச்சிகளுக்கு தின்னக் கொடுப்பதால்தான் போதுமான விளைச்சலை விவசாயியால் எடுக்க முடியவில்லை. எனவே, பூச்சிகள் தின்னாத பயிர் விளைந்தால் விவசாயிகளுக்கு லாபம்தானே' என்றுதான் மான்சான்டோவுக்கு ஆதரவாக, லாவணி பாடுகிறார்கள் புதிய மீட்பர்களான தொழிலதிபர்கள் .

'பூச்சியே தின்னாத ஒரு பயிரை, மனிதன் மட்டும் எப்படி தின்ன முடியும்... அப்படி தொடர்ந்து இதைத் தின்று வந்தால், அவனுக்கும்தானே விஷம் பரவும்' என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலே இல்லை. இப்படி சாப்பிட்டுச் சாப்பிட்டு எதிர்காலத்தில் செத்து விழுந்தால் என்னாவது என்கிற கேள்விக்கும் பதில் இல்லை.

இதுமட்டுமா, இந்த மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருந்து மீண்டும் விதைகளை எடுக்க முடியாது. எனவே இது மலட்டு விதை. திரும்பத் திரும்ப, மான்சான்டோவிடம்தான் விவசாயி ஆயிரங்களை அள்ளிக் கொடுத்து விதைகளை வாங்க வேண்டும். இது மட்டுமா, இன்றைக்கு நீங்கள் விதைக்கும் மரபணு மாற்றுப்பயிர்களிலிருந்து பரவும் மகரந்தத் தூள், உங்கள் தோட்டத்தைச் சுற்றியிருக்கும் அனைத்துவிதமான பயிர்கள், மரங்கள், செடிகள், கொடிகள் புற்கள் என்று எல்லாவற்றுக்கும் பரவி, அனைத்துமே மலட்டுச் செடிகளாக மாறக்கூடிய ஆபத்தும் காத்திருக்கிறது. நாமெல்லாம் பெருமையோடு பேசும் அருகம்புல்லை வளர்ப்பதற்குகூட நாளைக்கு மான்சான்டோவிடம் விதைக்காக கையேந்த வேண்டிய நிலைதான் உருவாகும்.

இதையெல்லாம் எடுத்துச் சொல்லித்தான் 'நியாயன்மாரே... இந்த பூமியை இயற்கையாகவே இருக்க விடுங்கள். விவசாயிகளை வாழ வைக்கிறோம்... உணவு உற்பத்தியை பெருக்குகிறோம் என்று சொல்லிக் கொண்டு பூமிப் பந்திலிருக்கும் மொத்த உயிரினங்களுக்கும் வேட்டு வைத்துவிடாதீர்கள். மரத்தை வெச்சவன்... தண்ணி ஊத்துவான் என்பது போல, இந்த பூமியைப் படைத்து தாவர, உயிரினங்களையும் படைத்து, இன்று வரை காத்துக் கொண்டிருக்கும் இயற்கை, அனைவருக்கும் சோறு போடுவதற்கும் உரிய ஏற்பாட்டை செய்தே வைத்திருக்கிறது. நீங்கள் படைப்பவனாக மாற வேண்டாம்' என்று மன்றாடுகிறார்கள்... இயற்கை ஆர்வலர்களாகவும், தன்னார்வலர்களாகவும், நம்மாழ்வார்களாகவும், பசுமை நேசர்களாகவும்!

ஆனால், பணவெறி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு திரிபவர்களின் காதுகளில் இதெல்லாம் ஏறவே மாட்டேன்கிறது!

அமெரிக்கா காலால் இடும் கட்டளைகளை, தன் தலையால் செய்வதற்குத் தயாராக இருந்த மன்மோகன் சிங், எப்படியாவது மரபணு மாற்று விதைகளை இங்கே புகுத்திவிடுவது என்று பகீரதப் பிரயத்தனம் செய்தார். ஆனால், எதிர்ப்புகள் கிளம்பியதும், நாடாளுமன்றக் குழுவை அமைத்து, விசாரிக்கச் சொன்னார். அந்தக் குழு முழுமையாக விசாரித்து, தன்னுடைய விரிவான அறிக்கையை அரசிடம் கொடுத்தது. அதன் ஒட்டுமொத்த சாரம்... 'இந்தியாவுக்கு மரபணு மாற்றப்பட்ட தொழில்நுட்பமே தேவையில்லை' என்பதுதான். ஆனால், காலம்போன காலத்தில் அந்த அறிக்கையைக் குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டு, மரபணு மாற்று விதைகளை அறிமுகப்படுத்தும் வேலையைச் செய்தது மன்மோகன் அரசு. ஆனால், ஆட்சி கையைவிட்டுப் போனதால், அது நிறைவேறவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் மோடியின் ஆட்சி வந்ததுமே.. அந்தக் கட்சியின் எம்.பி.க்களை அமெரிக்காவுக்கு அழைத்து, குளிப்பாட்டி, அவர்கள் மூலமாக சாதித்துக் கொள்ள பார்த்தது மான்சான்டோ. இதற்கு இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பவே, தன் கட்சி எம்.பி.க்கள் அமெரிக்கா செல்ல மறைமுக தடையை விதித்திருக்கிறது பி.ஜே.பி. அதேபோல இந்து அமைப்புகள் சிலவற்றின் எதிர்ப்பு காரணமாக, மரபணு மாற்றப்பட்ட விதைகள் விஷயத்தையும் தற்போதைக்கு தள்ளி வைத்திருக்கிறது மோடியின் அரசு.

இதையெல்லாம் தெரிந்து கொண்டுவிட்ட மான்சான்டோ, மோடிக்கு மிகமிக பிடித்தமான 'தொழில் வளர்ச்சி' என்கிற வார்த்தையை வைத்துக் கொண்டு, சதுரங்க வேட்டையைத் தொடங்கியிருக்கிறது... இந்திய தொழிலதிபர்களைத் தூண்டிவிட்டு.

சரி, இவ்வளவு தூரம் மான்சான்டோவுக்கு வால் பிடிக்கும் தொழில் அதிபர்களே... நாட்டின் மீதும், நாட்டு மக்களுக்கான உணவுத் தேவை மீதும் இத்தனை அக்கறை இருப்பதாக உதார் விடும் புண்ணியவான்களே உங்களிடம் சில கேள்விகள்...

படாதபாடுபட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை உருவாக்கி, இந்தியர்களின் பசியைப் போக்க பாடுபடும் அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனம், இந்த விதைகளையெல்லாம் பூமி அழியும் காலம் வரையிலும் இலவசமாகவே விவசாயிகளுக்கு வழங்குமா?
இந்தத் தொழில்நுட்பத்தை அப்படியே எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் (அரசாங்கம் மூலமாக மானிய விலை என்று குறுக்குசால் ஓட்டக்கூடாது), இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்குமா? இதற்கு, நீங்கள் அனைவரும் மான்சான்டோவை வற்புறுத்துவீர்களா?

பணவெறி கொண்டு திரியும் உங்களால் ஒருபோதும் இதையெல்லாம் வற்புறுத்தவே முடியாது. அப்படியே நீங்கள் வற்புறுத்தினாலும், அதைக் கேட்டுக்கொண்டு ஓடோடி வந்து கொட்டிக் கொடுக்க மான்சான்டோ பாரிவள்ளலும் கிடையாது.
"ஆந்திராவில் மான்சாண்டோ பருத்தி விதைகளை பயிரிட்டு நிலமே விடமாகி  வேறு எந்த பயிரும் வளரா நிலமாகி போனதால் கடன் பட்டு தற்கொலை செய்து இறந்த விவசாயிகளை நினைவில் கொண்ட பின்னரும் இந்தியாவை சீரழிக்க எண்ணும் இந்திய அரசியல்வாதிகள் எதற்காக இதை செய்கிறார்கள் இவ்வளவு விவசாயிகள்,சமுக ஆர்வலர்கள் எதிர்ப்பையும் மீறி மரபணு மாற்ற காய்கறிகளை இங்கு கொண்டு வருகிறார்கள் என்றால் ஏதும் பலமான பிரதிபலன் இல்லாமாலா இருக்கும்?"

ஒருவேளை இதெல்லாம் உண்மையிலேயே நடந்தாலும்கூட ஏற்றுக்கொள்ளவே முடியாத தொழில்நுட்பம்தான் இந்த மரபணு மாற்றுப்பட்ட விதைகள்.

இயற்கையை இயற்கையாகவே இருக்க விடுங்கள். இல்லையேல்... உங்கள் தோட்டத்துக்  கத்திரி செடியில் கருநாகப் பாம்புகள் காய்க்கக் கூடும். உங்கள் வீட்டுப் பசுவின் வயிற்றிலிருந்து டைனோசர்கள்கூட பிறக்கக்கூடும் ஜாக்கிரதை!

                                                                                                                                            -
ஜூனியர் கோவணாண்டி
                                                                                                                                                           நன்றி :விகடன்  
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?