நாய்க் கடி { ரேபிஸ்} நோய்

இன்று (செப்., 28) உலக ரேபிஸ் நோய் தினம்!

ரேபிஸ் ஒரு கொடிய வைரஸ் நோய். மரணத்தை தேடி தரும் இந்நோயை அதிகம் பரப்புவது நாய்களே. 
இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய், மனிதனை கடிப்பதால் மனிதன் பாதிப்புக்கு 
உள்ளாகிறான்.
விளைவு... தனி அறையில், தனிக்கூண்டில் மரணத்தை தழுவும் நிலை வரை செல்கிறது. 

நாய் கடித்தால் தான் ரேபிஸ் தொற்றும் என்பது இல்லை. பாதிக்கப்பட்ட நாயின் உமிழ்நீர் பட்டாலும், நகத்தால் பிராண்டினாலும் வரலாம். நம் உடலில் சிறுகீறல் இருந்து அதில் உமிழ்நீர் பட்டாலும் ரேபிஸ் வைரஸ் தாக்கும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், பசியின்மை, வாந்தி, தண்ணீர் விழுங்க சிரமம் மற்றும் இரண்டாம் நிலையில் நரம்பு சம்பந்தப்பட்ட அறி
குறிகள், பக்கவாதம், உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்றவை ஏற்படும். 'கோமா' நிலைக்கு வந்து இறப்பு ஏற்படும்.
ரேபிஸ் இறப்புகளில், 85 சதவீதம், தெற்காசிய நாடுகளில் நிகழ்கிறது. இதில், முதலிடம் இந்தியாவிற்கு; ஆண்டுக்கு 35 ஆயிரம் பேர் வெறி நாய்க்கு பரிதாபமாக இறக்கின்றனர். இதில், 85 சதவீதம், 15 வயதிற்கு உட்பட்ட மற்றும் கிராமப்புற ஏழைகள் தான்.
தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம், 2007ம் ஆண்டே அறிவித்தது. தமிழகத்தில், 2005ம் ஆண்டு வரை தெரு நாய்களின் எண்ணிக்கை, அவற்றை கொல்வதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. பின் கருத்தடை திட்டம் கொண்டு வரப்பட்டது.
விலங்குகள் நல வாரியத்தின் பரிந்துரையால் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தால், 2005ம் ஆண்டுக்கு பின் நாய்களை அழிக்கும் பணியை உள்ளாட்சி நிர்வாகம் நிறுத்தியது. 
அதேசமயம், மாற்றுத்திட்டங்களான கருத்தடை, வெறிநோய் தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தவில்லை.
இதனால், தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகுவதோடு, நாய் கடிபட்டு மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. விலங்குகள் நலவாரிய அறிக்கைபடி, இந்தியாவில் மட்டும், 250 லட்சம் தெரு நாய்கள் உள்ளன; ஆண்டுக்கு, 35 லட்சம் பேரை கடிக்கின்றன.
ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் ஒருவர், நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார். 
பள்ளிக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த நாகராஜ் மீது இருபதுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் தாக்குதல் தொடுத்து இருக்கின்றன
ஆனால், 'இந்திய மருத்துவ துறை ரேபிஸ் மரணங்களை முழுமையாக பதிவு செய்து தகவல் தருவதில்லை' என, உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

நாய் கருத்தடை திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். கலெக்டர், சுகாதார அலுவலர், கால்நடை டாக்டர் கொண்ட குழு கண்காணித்து அறிக்கை தரவேண்டும். தெருநாய்கள், வளர்ப்பு நாய்கள் குறித்து கணக்கெடுத்த பின், அதில், 80 சதவீத நாய்களுக்கு இரு மாதங்களுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துவிட வேண்டும். அப்போதுதான் அதன் இனப்பெருக்கம் தடுக்கப்படும்.
ஆனால், தற்போது மாதத்திற்கு, 30 சதவீத நாய்களுக்கு மட்டுமே கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அதனால், மீண்டும் பழைய நிலைக்கே நாய்களின் எண்ணிக்கை வந்துவிடுகிறது. 2005லிருந்து நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்ட போதிலும், இன்னும் அவை தெருவெங்கும் அலைந்து கொண்டிருப்பதற்கு இதுதான் காரணம்.
ஒவ்வொரு மாவட்ட அளவிலும், 'விலங்குகள் வசிப்பகம்' ஏற்படுத்தி, அதை விலங்குகள் காப்பக தன்னார்வ அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். தெருநாய்களை மொத்தமாக பிடித்துச்சென்று அங்கே பாதுகாக்கலாம். நாய்களின் பீதியிலிருந்து மக்களை காக்கவும், ரேபிஸ் நோயை கட்டுப்படுத்தவும் முடியும். 
இதற்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும்.
பள்ளி அளவில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு, 4 மாதம் முடிந்ததும் முதல் ரேபிஸ் தடுப்பூசியும்; பின், ஆண்டுக்கு ஒரு முறையும் ஊசி போடவேண்டும்.
  தெரு நாய்களின்சாலை மறியல்.சிக்கினால் அவ்வளவுதான்.
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் நகரில், தெருநாய் மற்றும் ரேபிஸ் நோய் பாதிப்பு அதிகரித்தது. அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதாரித்த மாவட்ட நிர்வாகம், நாய்களை கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சாக ஈடுபட்டது. இந்நிலை தமிழகத்திற்கு வரவேண்டும்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சென்ற மாதம் சமூக ஆர்வலர்களும், விலங்குகள் நலகாப்பு அமைப்பினரும் ரேபிஸ் நோயை, அச்சுறுத்தல் மிகுந்த நோய் தாக்குதல் பட்டியலில் அறிவிக்கச் சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடிக்கு பின் செய்ய வேண்டியவை:
ரேபிஸ் நோய் தாக்கிவிட்டால், நரம்பு மண்டலத்தை பாதிப்பதால் மரணம் நிச்சயம். 
இதை தவிர்க்க, நாய் கடித்த இடத்தை உடனடியாக குழாயை திறந்து விட்டு நீரில், 10 நிமிடங்கள் தொடர்ந்து கார்பாக்சிலிக் ஆசிட்' கலந்த சோப்பை கொண்டு கழுவவேண்டும்.
உடனடியாக டாக்டரை அணுகி வெறிநாய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 

அதிலும் கடிபட்ட இடம், கழுத்து, முகம், தலை போன்ற மூளைக்கு அருகில் உள்ள பாகங்களாக இருப்பின், 'இம்முனோ குளோபுலின்ஸ்' தடுப்பு மருந்தை போட்டுக்கொள்ள வேண்டும்.

சந்திரனுக்கும்,செவ்வாய்க்கும் விண்கலங்களை அனுப்பும் இந்தியாவின் இன்றைய அறிவியல் வளர்ச்சியில், ரேபிஸ் நோயை வளர விடுவது அறிவியல் அவமானம். 
இந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.நீலச்சிலுவை,செஞ்சிலுவை என்று பார்த்துக்கொண்டிருந்தால் பலியாகப்போவது மனித உயிர்கள்தான்.நாய்களை விட நன்றி உணர்ச்சி வேண்டுமானால் குறைவாக இருக்கலாம் உயிர் மதிப்பு அதிகம்.அவனை நம்பி குடும்பமே  இருக்கிறது.
                                                                                                                                                                                                              டாக்டர்தேனி பி.மணிவண்ணன்,
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?