அருகம் புல் :அறுக்கும் நோய்களை




அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். அரு கம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது.
மேலும் சிறுநீரகக் கோளாறுகள் (சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உட்பட), ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டல், உடலில் ஏற்படும் துர்நாற்றம், நெஞ்சுச்சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்று நோய்கள், உடற்சோர்வு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களையும் போக்க வல்லது.
மேற்கூறிய நோய்கள் மட்டுமின்றி பின்வரும் பெயர்களுடைய ஏராளமான நோய்களையும் அரு கம்புல் வேரறுக்க வல்லது. அவை பின்வருமாறு:-
1.புற்று நோய்க்கு எதிரானது.
2.சர்க்கரை நோயை சீர் செய்ய வல்லது.
3.வயிற்றுப் போக்கை குணப்படுத்துவது.
4. குமட்டல், வாந்தி இவற்றை தணிக்கக் கூடியது.
5.நுண்கிருமிகளைத் தடுக்க வல்லது.
6.உற்சாகத்தைத் தரவல்லது. (ரத்தத்தில் பிராணவாயுவை அதிகப்படுத்த வல்லது).
7.மூட்டுவலிகளைத் தணிக்கக் கூடியது.
8.கிருமித் தொற்றினைக் கண்டிக்க வல்லது.
9.வற்றச் செய்வது.
10.அகட்டு வாய் அகற்றி.
11.கருத்தடைக்கு உகந்தது.
12.குளிர்ச்சி தரவல்லது.
13.மேற்பூச்சு மருந்தாவது.
14.சிறுநீரைப் பெறுக்க வல்லது.
15.கபத்தை அறுத்து வெளித்தள்ளக் கூடியது.
16.ரத்தத்தை உறையவைக்கும் தன்மை உடையது.
17.மலத்தை இளக்கக் கூடியது.
18.கண்களுக்கு மருந்தாவது.
19.உடலுக்கு உரமாவது.
20.ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த கூடியது.
21. காயங்களை ஆற்ற வல்லது.
இப்படி நீண்ட பட்டியலைக் கொண்டுள்ள நோய்களை வேரறுக்க வல்லதாக அருகம்புல் திகழ்கிறது.

அருகம்புல்லில் அடங்கியுள்ள 
மருந்துப் பொருள்கள் :
அருகம்புல்லில் அடங்கியுள்ள மருந்தும் பொருள்களும் ஒரு நீண்ட பட்டிலை உடையது. அருகம்புல்லில் பின்வரும் மருத்துவ வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளன. அவையாவன:
1.மாவுச்சத்து (புரோட்டீன்).
2.உப்புச்சத்து (சோடியம்)
3.நீர்த்த கரிச்சத்து
4.அசிட்டிக் அமிலம்
5.கொழுப்புச் சத்து
6.ஆல்கலாய்ட்ஸ்
7.அருண்டோயின்
8.பி.சிட்டோஸ்டர்
9.கார்போஹைட்ரேட்
10.கவுமாரிக் அமிலச் சத்து
11.ஃபெரூலிக் அமிலச் சத்து
12.நார்ச் சத்து (ஃபைபர்)
13.ஃப்ளேவோன்ஸ்
14.லிக்னின்
15.மெக்னீசியம்
16.பொட்டாசியம்
17.பால்மிட்டிக் அமிலம்
18.செலினியம்
19.டைட்டர் பினாய்ட்ஸ்
20.வேனிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி சத்து ஆகியன பொதிந்துள்ளன.
அருகம்புல் மருத்துவம் :
அருகம்புல்லின் தண்டுப் பகுதி மற்றும் வேர்ப்பகுதி ஆகியன பாரம்பரியம்மிக்க நாட்டு மருத்துவத்தில் இதயக் கோளாறுகளைப் போக்க உபயோகித்து வரப்படுகிறது. குறிப்பாக மாரடைப்பு , இதய காளங்களின் அழற்சியைத் தடுப்பதாகவும் உள்ளது.
சர்க்கரையை குறிப்பாக ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மையுடையது. அருகம்புல்லில் அடங்கியுள்ள மேனிட்டால் மற்றும் சேப்போனின்ஸ் சத்துக்கள் சிறுநீரைப் பெருக்க அல்லது வெளித்தள்ள உதவுகிறது. ஆயுர்வேத மருத்து நூல்கள் அருகம்புல் சற்று காரமுடையது, கசப்புடையது, உஷ்ணத் தன்மை உடையது.
பசியைத் தூண்டக் கூடியது, காயங்களை ஆற்றவல்லது. வயிற்றிலுள்ள பூச்சிகளை, புழுக்களை வெளியேற்ற வல்லது. காய்ச்சலைத் தணிக்க வல்லது, ஞாபக சக்தியைப் பெருக்க வல்லது. மேலும் அறுகம்புல் வாய் துர்நாற்றத்தையும் உடலில் ஏற்படும் கற்றாழை வாடை உட்பட ஏற்படும் வேண்டாத நாற்றத்தையும் போக்க வல்லது. வெண்குட்டம் என்னும் தோல் நோய்க்கு மருந்தாவது.
நெஞ்சகச் சளியைக் கரைக்கக் கூடியது. மூலத்தை குணப்படுத்த வல்லது. ஆஸ்த்துமாவை அகற்ற வல்லது. கட்டிகளை கரைக்க வல்லது. மண்ணீரால் வீக்கத்தைக் குறைக்க வல்லது என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் ஆயுர்வேதப்படி அருகம்புல் பித்த மேலீட்டால் ஏற்படும் வாந்தியையும், தாகம் என்னும் நாவறட்சியையும், பாதங்கள், கைகள் மற்றும் உடலின் எந்தப் பகுதியில் எரிச்சல் கண்டாலும் அதைப் போக்குவதற்கும், வாயில் எப்பொருளைச் சுவைத்தாலும் சுவையை உணர இயலாத நிலையைப் போக்குவதற்கும், நம்மை அறியாமல் உணரும் ஏதோ ஓர் உருவம், ஸ்பரிசம், சப்தம், நாற்றம் சுவை ஆகிய நிலையில் அறுகம்புல் தெளிவைத் தரும்.
அடிக்கடி காக்காய் வலிப்பு வந்து உணர்விழந்து போகுதல் அல்லது உடல் உறுப்புகள் கோணித்து போதல் என்கிற நிலையில் அறுகம்புல் அருமருந்தாகிறது. ஒருவித இனம்புரியாத மயக்கநிலை மறைக்க உதவுகிறது. தொழுநோய்க்கு நல்ல மருந்தாகிறது. சொறி, சிரங்கு, படை போன்ற எவ்வித தோல் நோயானாலும் அருகம்புல் குணம் தரவல்லது.
உள்ளுக்கும் கொடுத்து மேலுக்கும் உபயோகிப்பதால் இப்பயன் நிச்சயமாக கிடைக்ககூடியது ஆகும். அறுகம்புல் உள்ளுக்கு உபயோகிப்பதால் சீதபேதி ரத்தம் கலந்து வருவதாயினும் சீதம் என்னும் சளி கலந்து வருவதாயினும் குணப்படும். மூக்கில் திடீரென ரத்தம் கொட்டுதல் இதை (சில்லி மூக்கு) நோய்க்கும் கைவந்த மருந்தாகவும் உடனடி நிவாரணியாகவும் அறுகம்புல் அமைகிறது.
அருகம்புல் யுனானி மருத்துவத்தில் எரிச்சல் எங்கிருப்பினும் அதைப் போக்கவும், நுகர்வு உணர்வை மேம்படுத்தவும், மலமிளக்கியாகவும் இதயம் மற்றும் மூளைக்கு உரம் ஊட்டவும் வியர்வை தூண்டவும் ஞாபக சக்தியை பெருக்கவும், வாந்தியை தடுக்கவும், தாய்ப்பாலை பெருக்கவும்,
கோழையை அதாவது அடர்ந்த கெட்டிப்பட்ட சளியை உடைத்து கரைத்து வெளியேற்றவும் வயிற்றில் சேர்ந்து வலியை தருகிற காற்றை வெளியேற்றவும், குழந்தைகளுக்கு வந்து அடிக்கடி துன்பம் தருகிற சளியோடு கூடிய காய்ச்சலை போக்குவதற்கும், உடலில் எங்கு வலிஏற்பட்டாலும் ஏற்பட்ட வலியை தணிப்பதற்கும், வீக்கத்தை கரைப்பதற்கும், பல்நோயை குணப்படுத்துவதற்கும், ஈரல் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.


======================================================================================================================

ஜெமினி கணேசன் பிறந்த நாள்.

சில நினைவுகள்!

”ஜெமினியை எல்லோரும் 
நேசிக்கக் கூடியவர்கள்.
அத்தகைய அருமை நண்பர், மறைந்தும் மறையாத மாணிக்கம். நம்முடைய கவிப்பேரரசு, மகன் தந்தைக்கு ஆற்றுகின்ற உதவி அல்லது காட்டுகின்ற நன்றி என்ற திருக்குறளின் பொருளை எடுத்துரைத்து, மகன் என்று இல்லாவிட்டாலும் மகள் என்ற முறையிலே கமலா செல்வராஜ் இந்த விழாவை அற்புதமாக இன்றைக்கு நடத்தியிருக்கிறார் என்று கூறினார். விழாவை சிறப்பாக நடத்திய கமலா செல்வராஜ், ஆண்கள் கூடி, ஏன் மகன்கள் இருந்து நடத்தினால் கூட, இவ்வளவு சிறப்பாக இந்த விழாவை நடத்தியிருக்க முடியுமா என்று எண்ணுகின்ற வகையில் இந்த விழாவை நடத்தியிருப்பது பாராட்டத்தக்கது. அவருக்கு ஜெமினி சார்பில் என் வாழ்த்துகள்.

ஜெமினி கணேசன், 17.11.1920-ல் புதுக்கோட்டையில் பிறந்தவர். அவருடைய தாயார் கங்கம்மா. தந்தையார் ராமு. ஜெமினியின் அத்தை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசாமி. அவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன. எனவே அவர் குழந்தைக்காக இரண்டாம் தாரமாக எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த "சந்திரம்மா'' என்ற பெண்ணை மணந்தார். அந்த மணம் கலப்பு திருமணம். இதை ஜெமினி கணேசன் பிறந்த பிராமண சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரைச் சாதியிலிருந்தே தள்ளி வைத்தது. ஆகவே, ஜெமினி பிறந்தபோதே ஒரு புரட்சி முழக்கத்தோடு பிறந்திருக்கிறார் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

முத்துலட்சுமி ரெட்டியை பெருமைப்படுத்தியது கழக அரசு. இந்த கலப்பு திருமணத்திற்கு பிறகு, சந்திரம்மா மூலம் நான்கு குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் முதல் குழந்தைதான் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி என்று சொன்னால் உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.

ஆக, முத்துலெட்சுமி ரெட்டி இசை வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். புதுக்கோட்டை மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிந்த சுந்தர ரெட்டி என்பவரைக் காதலித்து மணந்தார். சாதி, மொழி வேறுபாடு கடந்து அவர்களின் திருமணம் நடைபெற்றது. ஆகவே, அந்த கலப்பு திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் சமுதாய சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டார்கள்.
இன்னும் சொல்லப் போனால், சென்னை மருத்துவ கல்லூரியில் முதல் முதலாக டாக்டராகப் படித்த ஒரு பெண்மணி முத்துலெட்சுமி ரெட்டி. அதனால்தான், மேலவை உறுப்பினராக இருந்து அவர் ஆற்றிய பணியை எடுத்துக்காட்ட, விளக்கிக் காட்ட மேலவையிலும், பேரவையிலும் அவருடைய திருவுருவப்படத்தை இந்த அரசு வைத்து பெருமைப்படுத்தியிருக்கிறது என்பதை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

சென்னை மாகாண சட்டசபையில் 1929-ல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துலெட்சுமி ரெட்டி, ``பொட்டுக் கட்டும்'' வழக்கத்தை - அதாவது தேவதாசி முறையை அகற்ற வேண்டும், ஒழிக்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தினார். இது காமராஜர் அரங்கம். இந்த அரங்கத்தில் அவருடைய குருநாதர் சத்தியமூர்த்தியைப் பற்றி நினைவூட்டுவதைப் பற்றி தவறில்லை.

தீரர் சத்திய மூர்த்தி, என்னதான் காங்கிரஸ் தியாகி ஆக இருந்தாலும்கூட, அவர் சனாதன கொடுமைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டவர்தான். ஒரு சட்டத்தை தமிழக சட்டசபையிலே கொண்டு வந்தபோது - தேவதாசிகளை ஒழிக்க வேண்டும். பெண்களுக்கு பொட்டுக்கட்டி அவர்களை கேவலப்படுத்துவது என்பது முறையல்ல, ஆகவே, அந்தப் பொட்டுக்கட்டும் வழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று சட்டம் வந்தபோது - ஒருவர் எழுந்து ``இல்லை, இல்லை.
 அந்த வழக்கம் இருப்பது நல்லது, அது தொடர வேண்டும், ஏனென்றால் காளைகள் வெறித்தால் சாந்தப்படுத்தும் சமுதாயம் அந்தப் பெண்கள் சமுதாயம்தான், எனவே, பொட்டுக்கட்டும் வழக்கம், தேவதாசி முறை தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும்'' என்று சொன்னார்.
அவர்தான் தீரர் சத்தியமூர்த்தி என்று கூறுவார்கள்.

அதை எதிர்த்து ஒரு பெண் குரல் கிளம்பியது.
அந்தப் பெண் குரல்தான் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் குரல். பெண்கள் சமுதாயம் காளைகள் வெறித்தால் சாந்தப்படுத்துகின்ற சமுதாயம் என்றால், அப்படிப்பட்ட பெண்களை உங்களுடைய வீட்டிலிருந்து அனுப்புங்கள் பார்க்கலாம் என்று முத்துலெட்சுமி ரெட்டி சிம்மக்குரல் கொடுத்து முழங்கினார் - முழங்கினார்.
மன்னிக்க வேண்டும் - ஒரு வரலாற்று உண்மையை எடுத்துச் சொல்லும்போது, அதிலே பிசிறு வரக்கூடாது.
அதிலே குறைபாடு வரக்கூடாது என்பதற்காக உண்மையை அப்பட்டமாக அப்படியே சொல்கிறேன்.
அந்த முத்துலெட்சுமி ரெட்டிதான் இந்தியப் பூபாகத்தில் அன்றைக்கு புரட்சிகரமான மங்கையாக விளங்கி - அப்படி விளங்கிய காரணத்தால் இந்த இயக்கத்தின் ஆட்சி நடைபெறும்போது, அவருடைய திருவுருவப்படத்தை நாங்கள் சட்டமன்ற மேலவை யிலும், பேரவையிலும் வைத்து கௌரவப்படுத்தி யிருக்கிறோம்.

இதை இந்த விழாவில் ஏன் சொல்ல வேண்டு மென்றால், இந்த விழாவிற்கு சம்பந்தம் இருக்கிறது. ஜெமினி கணேசனுடைய அத்தை முத்துலெட்சுமி ரெட்டி. ஆகவே, எனக்கும், ஜெமினி கணேசனுக்கும் சொந்தம் இருக்கிறதா, இல்லையா?
என்னை வாலியோ அல்லது நம்முடைய இயக்குநர் சிகரம் அவர்களோ பிரித்துப் பார்த்து ``உனக்கு சொந்தம் இல்லை'' என்று சொல்ல முடியாது.
சொந்தக்காரர் அவர்கள். அதனால்தான் இந்த விழாவை அவர்கள் வற்புறுத்தினாலும், வற்புறுத்தாவிட்டாலும் வந்திருந்து நடத்திக் கொடுத்திருப்பேன்.
காரணம், எங்கள் சொந்தக்காரர்கள் வீட்டு விழா இது.

அவருடைய படத்தை வைத்திருப்பது மாத்திரம் இல்லை;
அந்த அம்மையார் பெயரால் இன்றைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், கர்ப்பிணிப் பெண்களின் நலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக "டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம்'' என்ற பெயர் சூட்டி கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

அத்திட்டத்தின்கீழ் 2006-க்குப்பின் கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச் சத்து உட்கொள்ள 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
குழந்தை பிறப்பதற்கு முன்பு 3 ஆயிரம் ரூபாய், குழந்தை பிறந்த பிறகு 3 ஆயிரம் ரூபாய் - ஆக, 6 ஆயிரம் ரூபாய் அந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கிறோம் என்றால், அந்தத் திட்டத்திற்குப் பெயரே "டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம்'' என்றுதான் அந்தப் பெயரை வைத்திருக்கிறோம்.
அந்த முத்துலெட்சுமி ரெட்டியின் குடும்பத்துப் பிள்ளை - அவரால் வளர்க்கப்பட்ட பிள்ளை, ஜெமினி கணேசன்.
அந்த ஜெமினி கணேசன் பள்ளிப் பருவத்திலேயே எந்த அளவுக்கு புரட்சிகரமாக விளங்கினார் என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

அவர் படித்த பள்ளிக்கூடத்திலே - ஒரு சமஸ்கிருத ஆசிரியர் பற்றிய விவரம் (இதெல்லாம் நான் சொல்வதல்ல, ஜெமினி அவர்களே எழுதி, கமலா செல்வராஜ் வெளியிட்ட புத்தகத்தில் வந்திருக்கின்ற உண்மை விவரங்கள்). ஜெமினி, ராஜா முத்தையாச் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பிலே படித்த போது, அப்பள்ளியில் இருந்த சமஸ்கிருத ஆசிரியர் பற்றி இந்நூலில் குறிப்பிடும் ஜெமினி கணேசன், "இருபது பிராமண மாணவர்கள் மத்தியில் பிராமணர் அல்லாத ஒரே மாணவன் கோவிந்தராஜீலு.
 ஆனால், அவனுடைய சமஸ்கிருத உச்சரிப்புதான் மிக நன்றாக இருக்கும். அப்படியும் ஆசிரியர், `பிராமணனே இல்லாத நீயெல்லாம் ஏன் சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள வருகிறாய்?' - என்று கேட்கும்போது, எனக்கு கோபம் வரும்.
 ஒரு பிராமணர் அல்லாத சூத்திரனைப் பார்த்து சமஸ்கிருத ஆசிரியர் ``நீ பிராமணன் இல்லையே, ஏன் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்?'' என்று கேட்டவுடன், கோபத்தால் கொதித்து, இனம், குலம், மதம் என்ற சின்ன வட்டத்துக்குள் சிக்கி வாழ்வது தவறு. பரந்த உலகத்தில் பரந்த மனதுடையவனாக, இந்தியன் என்ற உணர்வோடு வாழ வேண்டுமென்பது பிறப்பில், வளர்ப்பில், எனக்குள் ஊறிப்போன ஒன்று'' -என்று முழங்கியவர் ஜெமினி கணேசன்.
எங்கள் சுயமரியாதை இயக்கத்திற்கும், அவருக்கும் இதுபோன்ற பிரச்சினைகளில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை என்றே கருதுகின்றேன்.

ஜெமினி கணேசன் அவர்கள் அவருடைய வாழ்க்கையில் சீர்திருத்தவாதியாக, சாதி, மதம் இவைகளையெல்லாம் மறுப்பவராக, ``ஒன்றே குலம், ஒருவனே தேவன்'' என்ற கருத்து கொண்டவராக, எல்லோரையும் நண்பர்களாகப் பெறுகிற அந்த பரந்த மனப்பான்மை உள்ளவராக வாழ்ந்து காட்டினார் - அவருடைய வாழ்க்கைப் பாதை, நடந்து பார்த்து, உணர்ந்து பார்த்து, அவர் வழியிலே நாமும் புகழொளியைப் பரப்ப வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழின்பால் அவருக்குள்ள ஆர்வத்தை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன்.
ஒருமுறை நான் கோலாலம்பூரில் தமிழ் மாநாட்டிற்குச் சென்றிருக்கி றேன். அந்த மாநாட்டிலே திரும்பிப் பார்த்தால், ``வணக்கம்'' என்ற ஒலி கேட்கிறது. யாரென்று பார்த்தால், ஜெமினி கணேசன். அந்த மாநாட்டிற்கு வந்து எங்களோடு இரண்டொரு நாட்கள் தங்கி பொழுதைப் போக்காமல், தமிழைப் பருகி, கருத்துக்களை ஏற்றுச் சென்றவர் அருமை நண்பர் மறைந்த ஜெமினி கணேசன் ’
 -                                                                                                    -கலைஞர் மு. கருணாநிதி.
=================================================================================================================================


 திரை உலகில் எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும், புகழின் சிகரத்தில் இருந்த அதே காலகட்டத்தில் தன் அழகாலும், இயற்கையான நடிப்பாலும் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர், ஜெமினிகணேசன். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகிய மூவரும், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் போல கலை உலக மூவேந்தர்களாகத் திகழ்ந்தார்கள்.
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் நாடக மேடையில் இருந்து திரை உலகத்துக்கு வந்தவர்கள். ஜெமினிகணேசனோ, நாடக அனுபவம் இல்லாதவர். கல்லூரி விரிவுரையாளர் உத்தியோகத்தை உதறித் தள்ளிவிட்டு, சினிமா நடிகரானார்.     வசதியான குடும்பத்தில் பிறந்து, இளமையில் செல்வசெழிப்போடு வாழ்ந்தவர் ஜெமினிகணேசன்.
ஜெமினிகணேசனின் தந்தை பெயர் ராமசாமி. தாயார் கங்கம்மா. புதுக்கோட்டையில் நல்ல வசதிகளுடன் வாழ்ந்த குடும்பம். இந்த தம்பதியருக்கு 2 ஆண் குழந்தைகள். முதல் குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்துவிட்டது. இரண்டாவதாக பிறந்தவர்தான் ஜெமினிகணேசன். 1920_ம் ஆண்டு நவம்பர் மாதம் 17_ந்தேதி பிறந்தார்.
பெற்றோர் சூட்டிய பெயர் கணேஷ்.   ஜெமினிகணேசன், அவருடைய சின்ன தாத்தா நாராயண சாமி அய்யர் வீட்டில் வளர்ந்தார். நாராயணசாமி அய்யர் சிறந்த கல்வியாளர். புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் முதல்வராக பணியாற்றியவர். (இவருடைய மகள் முத்துலட்சுமி, பல சாதனைகளைப் புரிந்தவர்.
இந்தியாவிலேயே டாக்டருக்குப் படித்துத் தேறிய முதல் பெண்மணி. 1929_ல் சென்னை சட்டசபை உறுப்பினரானார். சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மணி என்ற பெருமையைப் பெற்றார். தேவதாசி முறையை ஒழிக்க வகை செய்யும் சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தார்.
சுந்தரம் ரெட்டியை கலப்புத் திருமணம் செய்து, `டாக்டர் முத்துலட்சுமி' ரெட்டி ஆனார்.)     ஜெமினிகணேசன் புதுக்கோட்டை நெல்லுமண்டி தெருவில் இருந்த குலமது பாலையா பிரைமரி ஸ்கூலில் பள்ளிப்படிப்பை தொடங்கினார்.
 ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசுவாமி வசதி படைத்தவராக இருந்ததால், ஜெமினியை ராஜகுமாரனைப் போல குதிரை மீது அமர வைத்து பள்ளிக்கூடத்துக்கு ஊர்வலமாக அழைத்து சென்றார். அந்த பள்ளியில் நிர்வாகி பாலையா என்பவர் ஜெமினிகணேசனின் வலது கையை பிடித்து வெள்ளித்தட்டில் தங்க காசால் "ஓம்" என்று எழுத வைத்தார்.

இவ்வாறு ஜெமினியின் படிப்பு சிறப்பாகத் தொடங்கியது. இளம் வயதில் ஜெமினி முதன் முதலாக பார்த்த தமிழ்ப்படம் டி.பி.ராஜலட்சுமி _டி.வி.சுந்தரம் நடித்த "வள்ளித்திருமணம்". 48 பாடல்கள் கொண்ட அந்த சினிமா படத்தின் எல்லா பாடல்களையுமே ஜெமினி மனப்பாடம் செய்து விட்டார்.
அந்த பாடல்களை பாடி ரசிப்பார். இதை கேள்விப்பட்ட புதுக்கோட்டை திவான் ஜெமினியை வரவழைத்து, வள்ளித்திருமணம் பாடல்களை எல்லாம் பாடச் சொல்லி கேட்டு வெள்ளிக் கோப்பை பரிசு கொடுத்தார். ஜெமினிக்கு 10 வயதாகும்போது தந்தையும், சின்ன தாத்தாவும் காலமானார்கள்.
இதனால் ஜெமினி மிகவும் வேதனை அடைந்தார். அத்தை முத்துலட்சுமி அவரை சென்னைக்கு அழைத்துச்சென்று, ராஜாமுத்தையா செட்டியார் உயர் நிலைப்பள்ளியில் 7_ம் வகுப்பில் சேர்த்து படிக்க வைத்தார். பின்னர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் சில காலம் படித்தார்.
ஐ.ஏ.எஸ். பரீட்சை எழுதி மகன் கலெக்டராக வேண்டும் என்பது ஜெமினியின் தாயார் கங்கம்மாவின் ஆசை. ஆனால் ஜெமினியோ `எம்.பி.பி.எஸ்' படிக்க ஆசைப்பட்டார். ஆனால் ஒரு டிகிரி முடித்த பின்னர் சேரலாம் என்று அத்தை முத்துலட்சுமி யோசனை சொல்லவே ஜெமினி கணேசன் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கி படித்தார். விளையாட்டு, பேச்சு, பாட்டு என்று பல திறமைகளை வளர்த்துக் கொண்டார்.   1940_ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெமினியின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஜெமினிக்கு அப்போது 20 வயது. அவருக்கு திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்து, குடும்பத்தினர் பெண் பார்த்தார்கள்.
அலமேலு என்கிற பாப்ஜியை பார்த்து முடிவு செய்தார்கள். ஜெமினியை "எம்.பி.பி.எஸ்" படிக்க வைப்பதாக, பாப்ஜியின் அப்பா கூறினார். அது ஜெமினிக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. ஜுன் மாதம் 30_ந்தேதி ஜெமினி_ பாப்ஜி திருமணம் நடந்தது.   ஜெமினிக்கு சரியான வேலை கிடைக்காததால் திருமணத்துக்கு பிறகும் பாப்ஜி பிறந்த வீட்டிலேயே இருந்தார்.  
மருத்துவ படிப்பு கனவு உருவான வேகத்திலேயே தகர்ந்து போனது. திருமணம் ஆன ஒரு மாதத்தில் பாப்ஜியின் அக்காள் கணவர் மரணம் அடைந்தார். அடுத்தபடியாக அக்காளும் இறந்தார். அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு மரணங்கள் அதிர்ச்சியாக அமைந்தன. ஜெமினி _ பாப்ஜி தம்பதிகளுக்கு குழந்தை (`ரேவதி') பிறந்தது.
குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய சூழ்நிலை ஜெமினிக்கு ஏற்பட்டது. வேலை தேடினார். அவர் ஏற்கனவே படித்த தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியிலேயே ரசாயன விரிவுரையாளர் வேலை கிடைத்தது. கல்லூரி விரிவுரையாளர் வேலையை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த நிலையில்,திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. ஜெமினி கணேசன் வாழ்க்கையில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டது. விரிவுரையாளர் காதல் மன்னன் ஆனார்.
================================================================================================================================ ]

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?