வேம்பு ....!

வீட்டு வாசலில் வேம்பு,
 - நிழலுக்காகவும்
குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது.

கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் .


வேம்பின் தாவரவியல் பெயர் 'அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica). அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள்.

இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது.
வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
 இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது.
பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் 'அஸாடிராக்டின்’(Azadirachtin) என்னும் வேதிப் பொருளில் இருந்து பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன.
வேப்ப மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. அதன் பிசின், கோந்து தயாரிக்கும் மூலப் பொருள் ஆகும்.

'வேப்ப மரத்தின் எண்ணற்ற பலன்களின் காரணமாக, இதைக் 'கற்பக விருட்சம்’ என்றே சொல்வார்கள். இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் அதிகமான பயன்களைக்கொண்டது.
இலை:
வேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து எடுத்துத் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும்.

குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம் கிடைக்கும்.
இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும், வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம்.
வேப்பங்கொழுந்துடன் குன்றிமணி அளவுக்கு வேர்ச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து தினம் மூன்று முறை கொடுத்தால், அம்மை நோய் குணமாகும்.
வேப்பிலையைத் தனியாகவோ அல்லது மஞ்சளுடன் சேர்த்தோ வெந்நீர்விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு, வீக்கம் மற்றும் அம்மைப் புண் ஆகியன குணமாகும்.
வேப்பிலையை நீரில் நன்கு ஊறவைத்துப் பின் உலர்த்தி உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பயோரியா நோய் கட்டுப்படும்.
பூ:
 வேப்பம்பூக்களை நெய்விட்டு வதக்கி, உப்பு, புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றுடன் சேர்த்து அரைத்துத் துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நா வறட்சி, ஏப்பம், சுவை இன்மை, வாந்தி ஆகியன குணமாகும். வயிற்றுப் புழு நீக்கியாகவும் இது செயல்படும். வேப்பம் பூவில் வடகம் மற்றும் ரசம் போன்றவையும் தயாரித்து உண்ணலாம். சுவையாக இருக்கும்.
காய்:
மிகவும் கசப்புச் சுவையை உடையது. காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.
விதை
புழு நீக்கியாகச் செயல்படும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. விதைகளை அரைத்துப் புழு உண்டாகிவிட்ட புண்களின் மேல் தடவினால், புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவதோடு புண்ணும் விரைவில் ஆறும்.
வேப்ப எண்ணெய்: வேம்பின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் எருக்கு இலையைச் சேர்த்து ஒத்தடம் கொடுத்தால், பிடரி வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

பட்டை:
வேப்பன் பட்டையை நீரில் இட்டுச் சூடாக்கி 30 அல்லது 45 மி.லி. அளவில் குடித்துவந்தால், காய்ச்சல் குணமாகும். உடல் சோர்வையும் நீக்கும். வேப்ப மரப் பட்டையைப் பொடி செய்து, நான்கில் இருந்து எட்டு கிராம் வீதம் தினம் இருவேளை உட்கொண்டால், வாந்தி, சுவையின்மை ஆகியன நீங்கும்.
பிசின்:
உலர்த்தி சூரணம் செய்து இரண்டில் இருந்து ஆறு கிராம் அளவில் உட்கொண்டால், மேகரோகம் குறையும்.
புண்ணாக்கு:
வேப்பன் புண்ணாக்கு, பயிர்களுக்கு நல்ல உரமாகும். இதை இடித்துப் பொடி செய்து வறுத்துத் தலைவலிக்குப் பற்று போடலாம்.


==========================================
யூடியூப்  ஆரம்பிக்கப்பட்டது.
யூடியூப் கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனாளர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும்.
 அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன.

பெப்ரவரி 2005-ல் தொடங்கப்பட்ட யூடியூபை அக்டோபர் 2006-ல் கூகிள் நிறுவனம் வாங்கியது.

பிப்ரவரி 2005 -ல் பேபால் நிறுவனத்தில் பணிபுரிந்த சாட் ஹர்லி , ஸ்டீவ் சென் , ஜாவேத் கரீம் ஆகிய மூன்று பேர் இணைந்து இந்த இணையதளத்தைத் தொடங்கினர்.சாட் ஹர்லி பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் படித்தவர் . ஸ்டீவ் கரீம் மற்றும் ஜாவேத் கரீம் இருவரும் இல்லினோயஸ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். நவம்பர் 2005 ற்கும் எப்ரல் 2006 ற்கும் இடையே 11.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஸீகியோயியா கேபிடல் நிறுவம் இதில் முதலீடு செய்தது.

'மி அட் ஸூ' என்ற காணொளியே இதில் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி. ஜாவேத் கரீம் 2005 ஆம் ஆண்டு , ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி இரவு 08:27 ற்கு பதிவேற்றம் செய்தார்.



1 ரூபாய், 2 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான செலவு அதிகரித்ததால் மத்திய அரசு, கடந்த 1994 ஆம் ஆண்டு 1 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை நிறுத்தியது.
அதை தொடர்ந்து 1995 பிப்ரவரியில் 2 ரூபாய் நோட்டும், அதே ஆண்டு நவம்பர் மாதம் 5 ரூபாய் நோட்டும் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.
ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1,000 நோட்டு தாள்கள் மட்டும் அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் மதிப்பில் நாணயங்கள் தயாரித்து வெளியிடப்பட்டன.
சமீப காலமாக நாணயங்களுக்கு நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதை தொடர்ந்து ரூபாய் நோட்டு புழக்கத்தை ஆய்வு செய்த மத்திய அரசு, நாணயங்களுக்கு பதில் மீண்டும் 1 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது என்று முடிவு செய்துள்ளது.

அதன்படி 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 1 ரூபாய் நோட்டு வினியோகத்துக்கு விரைவில் வர உள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''1 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு அச்சடிக்கும். 2011 நாணய சட்டப்படி இந்த நோட்டுகள் இருக்கும்.

அந்த நோட்டுக்களில் நிதிதுறை செயலாளர் கையொப்பம் இருக்கும். மீண்டும் புழக்கத்துக்கு வர உள்ள 1 ரூபாய் நோட்டுக்கள் பச்சை நிறத்தில் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?