என்ன கோளாறு?



நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம்.
 இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். 
அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம்.

 அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை. 

அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை சீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். 

அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால்,  தண்ணீர் செரிமாண திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் சீரண பணியை பாதித்துவிடும்.

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்துபவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

 அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது.
 ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு  நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். வ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.
அதேப்போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்.

அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். 
அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். 
எனவே உணவு வாயில் மெதுவாக மென்று சீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால்,அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக சீரணமடைய வைத்துவிடும்.
========================================================================
இன்று,
ஜூலை-13.
  • லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலிவுட் மலையின் மேல் ஹாலிவுட் குறியீடு அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது(1923)
  • இலங்கையில் காவல்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன(1844)
  • பெர்லின் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது(1878)
  • முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உருகுவேயில் நடைபெற்றன(1930)
  • நான்காண்டு சாதனை விளக்கம்.
அ.தி.மு.க., ஆட்சியின் நான்காண்டு காலச் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் நடந்தது. இக்கண்காட்சியை திறந்து வைக்க, அமைச்சர் பன்னீர்செல்வம் வந்தார். அவருடன், ஆட்சியர் வெங்கடாச்சலம், நகராட்சி கமிஷனர் சந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்திருந்தனர். 
அ ப்போது அங்கு வந்த, கம்பம் நகராட்சி, 20வது வார்டைச் சேர்ந்த மேரி என்பவர், அமைச்சரை வழி மறித்தார். பின், அவரிடம் மேரி கூறியதாவது:
அய்யா... நான், 20வது வார்டில் வசிக்கிறேன்; கூலிக்காரர்கள் அதிகம் வசிக்கும் எங்கள் பகுதியில், காலையில் வேலைக்கு சென்றால், மாலையில் தான் வருவோம். 20 நாளைக்கு ஒருமுறை தண்ணீர் கொடுக்கிறாங்க; நாங்க வேலை முடிஞ்சு வந்தால், தண்ணீர் பிடிக்க முடியலை.
ஒரு உப்பு தண்ணீர் குழாய் போடுங்க என்றாலும் மறுக்கிறாங்க. நல்ல தண்ணீரும் இல்ல; உப்பு தண்ணீரும் இல்ல. வசதியானவங்களுக்கு மட்டும் எல்லாம் செய்து தர்றாங்க. எங்களுக்கு குடிக்க தண்ணீர் கூட இல்லீங்க. இவ்வாறு கூறி, அப்பெண் அழுதார்.

அமைச்சர் ஒபீஸ் மாவட்ட ஆட்சியரை பார்த்து முறைக்க அப்பெண்மணி அப்புறப்படுத்தப்பட்டார்.
பின்னர் சாதனையை அமைச்சர் விளக்கினார்.அவர் என்ன விளக்குவது.மேரி என்ற அந்த பெண்மணிதான் விளக்கு,விளக்கு என்று மக்கள் சார்பில் விளக்கி விட்டாரே?
ஆனால் அமைச்சர் இது திமுக சதி.அப்பெண் திமுக என்கிறார்!

==============================================
கிரீஸ் -
என்ன கோளாறு?
கடந்த ஜூலை 5ம் தேதி நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் `இல்லை’ என்று வாக்களித்து கிரீஸ் மக்கள் ஒரு உறுதியான தீர்ப்பினை அளித்திருக்கிறார்கள். பன்னாட்டு நிதி நிறுவனம் (ஐஎம்எப்), ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய கமிஷன் ஆகிய தாராளமயத்தின் மூன்று முக்கிய அமைப்புகளால் தங்கள் மீது மேலும் கடுமையாக திணிக்கப்பட இருந்த மோசமான சிக்கன நடவடிக்கைகளை 61.3 சதவீத கிரீஸ் மக்கள் நிராகரித்து வாக்களித்தனர்.
இதற்கு மாறாக, இந்த அமைப்புகள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டிருந்தால் கிரீஸ் மக்களின் ஊதியமும் ஓய்வூதியமும் இன்னும் கடுமையாக வெட்டப்படும் அபாயம் இருந்தது. 
இன்னும் தீவிரத் தனியார்மயம் அமலாகும் என்ற நிலை இருந்தது.
175 சதவீதம் கடன்
ஏற்கெனவே எந்த விதத்திலும் தாங்க முடியாத அளவிற்கு மிகப்பெரும் கடன் சுமையில் கிரீஸ் இருக்கிறது. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 175 சதவீதம் அதிகமான கடனில் அது சிக்கியிருக்கிறது. இந்நிலையில் கடுமையான நிபந்தனைகளை விதித்து, அதன் பேரில் கிரீசுக்கு வழங்குவதாக கூறப்படும் கடன் மீட்புத் தொகை என்பது, அந்நாடு ஐரோப்பாவின் மிகப்பெரும் வங்கிகளிடமிருந்தும் பன்னாட்டு நிதி நிறுவனத்திடமிருந்தும் வாங்கியிருக்கும் கடனுக்கான வட்டியையும் மாதாந்திர தவணையையும் செலுத்துவதற்கே பயன்படும். 
ஆனால் மக்களைப் பொறுத்தவரை, அந்தநிபந்தனைகளை ஏற்பது என்பது அவர்களதுஊதியம், ஓய்வூதியம் மற்றும் சமூக நலத்திட்டங்கள் அனைத்திலும் மிகக்கடுமையான நிதி வெட்டு, அதன் விளைவாக இன்னும் மோசமான துயரங்கள் என்பதாகவே முடியும்.


கிரீஸ் என்பது, 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இடம்பெற் றுள்ள ஒரு நாடாகும். 
அதுமட்டுமல்ல, 19 ஐரோப்பிய நாடுகளில் பொதுப் பணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள யூரோ நாணயத்தைப் பின்பற்றும் யூரோ மண்டலத்தில் அமைந்திருக்கிறது கிரீஸ். 
ஐரோப்பிய யூனியன் என்பது 1992ம் ஆண்டு மாஸ்ட்ரிச்ட்நகரில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். இதன்உறுப்பு நாடுகளாக உள்ள 28 நாடுகளி லும் நவீன தாராளமயக் கொள்கைகளை மிகவும் தீவிரமான முறையில் அமலாக்கிய அமைப்பும் ஆகும். 
ஐரோப்பிய கமிஷனும் ஐரோப்பிய மத்திய வங்கியும்தேர்ந்தெடுக்கப்படாத அதிகார மையங் களாகச் செயல்பட்டு வருகின்றன. 
இந்த அமைப்புகள் மேற்கண்ட ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அடிப்படையான நிதிக்கொள்கை, பணவீக்கக் கட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளில் வழிகாட்டுதல்களை அளிக்கிற - கண்காணிக்கிற `கங்காணி’ அமைப்புகளாக உள்ளன. உதாரணத்திற்கு, ஐரோப்பிய யூனியனில் உள்ள ஒவ்வொரு நாடும் தனதுநிதிப் பற்றாக்குறையை மூன்று சதவீதத் திற்குள் இருக்கும் விதமாக அனைத்துச் செலவினத்தையும் (அதாவது நிதி ஒதுக்கீடுகள்) கட்டுப்படுத்த வேண்டும் என்பது உறுப்பு நாடுகளுக்கே விதிக்கப்பட்டுள்ள விதியாகும். 
எனவே எந்த ஒரு ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடும் தனது பட்ஜெட் வரவு-செலவினத்தை சுதந்திரமான முறையில் வடிவமைக்க முடியாது; மக்களின் நலனுக்கு முதன்மை முன்னுரிமை அளித்து அதன்படியான நிதிக் கொள்கைகளை வடிவமைக்க முடியாது. மொத்தத்தில் ஐரோப்பிய யூனியனின் செயல்பாடுகள், முதலாளித்துவ நாடுகளிலேயே பலவீனமான கிரீஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளின் நலன்களுக்கு எதிராக இருக்கின்றன; 
ஐரோப்பிய யூனியனின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பணக்கார முதலாளித்துவ நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து போன்றவற்றின் நலன்களையே பிரதானமாக முன்னிறுத்துகின்றன.


மீள முடியாத நெருக்கடி
2008 மற்றும் 2010ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு கிரீஸ். இந்நிலையில், கடன் மீட்புத் திட்டத்தை அந்நாடு ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 
referendum
அதன் விளைவாக பன்னாட்டு நிதி நிறுவனம் மற்றும் ஐரோப்பிய வங்கிகளிடமிருந்து நிபந்தனைகளின் பேரில் கடன்களைப் பெற்றது. அந்த நிபந்தனைகளின்படி, மக்கள் மீது சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தது. 
இதற்குப் பிறகு 2012ம் ஆண்டு 2வது முறையாக கடன் மீட்பு ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டது. இந்த இரண்டு கடன் மீட்பு நிதிகளும் கிரீஸ் மற்றும் ஐரோப்பிய தனியார் வங்கிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இப்படி தனியார்கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக பயன்படுத் தப்பட்ட கடன் என்பது படிப்படியாக கிரீஸ் நாட்டின் பொதுக் கடனாக மாற்றப்பட்டது. 
இதைத்தொடர்ந்து கிரீஸின் பொருளாதாரம் மீள முடியாத ஆழமான நெருக்கடிக்குள் சிக்கியது. கடந்த 4 ஆண்டுகளில் கிரீஸ் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்தை இழந்தது. வேலையின்மை 26 சதவீதமாக கடுமையாக அதிகரித்தது. 
இன்னும் குறிப்பாக வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை 56 சதவீதமாக அதிகரித்தது. 
அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 44 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

கொதித்தெழுந்த தொழிலாளர் வர்க்கம்
கடந்த 5 ஆண்டுகளாக கிரீஸ் நாட்டின் தொழிலாளர் வர்க்கமும் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினரும் தங்களது வாழ்வாதாரங்கள் மற்றும் உரிமைகள் மீதான வரலாறு காணாத தாக்குதல்களிலிருந்து மீள முடியாமல், எந்தவிதமான மீட்சியும் இன்றி,அன்றாட வாழ்விற்கே போராடிக் கொண்டிருக் கிறார்கள். 
இத்தகைய `சிக்கன’ நடவடிக்கை களுக்கு எதிராக கிரீஸ் தொழிலாளர் வர்க்கம்இந்தக் காலகட்டத்தில் எண்ணற்ற பொது வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தி யுள்ளது.
இந்தப்பின்னணியில்தான் ஒரு இடதுசாரி சார்புக் கட்சியான `சிரிசா’ இந்த ஆண்டு ஜனவரியில் ஆட்சி அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டது. அனைத்துவிதமான சிக்கன நடவடிக்கைகளையும் நிராகரிப்பதாகவும், ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை பாதுகாப்போம் என்றும், தனியார்மயத்தை உடனடியாக நிறுத்துவோம் என்றும் வாக்குறுதி அளித்து, அதன் அடிப்படையிலேயே வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது. 
ஆனால் புதிய அரசாங்க மானது அனைத்துத் திசைகளிலும் கடும் நிர்ப்பந்தங்களால் சூழப்பட்டிருக்கிறது. 
அது ஒரு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதன் விளைவாக கடந்தபிப்ரவரி 20ம் தேதி, மேற்படி மூன்று அமைப்புகளான பன்னாட்டு நிதி நிறுவனம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய கமிஷன் ஆகியவற்றுடன் நிர்ப்பந்தத்தின் பேரில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 
இது கிரீஸ் மக்களின் வாழ்வில் மேலும் கடுமையான சுமைகளை ஏற்றியது. இதைத்தொடர்ந்து கடந்த 4 மாத காலத்தில் கிரீஸ்நாட்டில் நெருக்கடி இன்னும் தீவிரமடைந் துள்ளது. வேலையின்மை முன்பிருந்ததை விடக் கடுமையாக அதிகரித்துள்ளது. 
அரசாங்கத்தின் வருவாயும் மிகப்பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

`கடனிலிருந்து மீள கடன்
’இந்நிலையில்தான் கடந்த ஜூன் மாதத்திலி ருந்து கிரீசுடன் ஐரோப்பிய நாடுகளின் தலை வர்களும் பன்னாட்டு நிதி நிறுவனமும் பேச்சுவார்த்தை நடத்தினர். 
இந்தப் பேச்சுவார்த் தைகளில், தற்போதைய கடன் சுமையிலிருந்து மீள மீண்டும் ஒரு கடன் மீட்புத் தொகை யைப் பெற கிரீஸ் விரும்பினால் அது முன்னெப்போதையும் விட இன்னும் கடுமையான `சிக்கன’ நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு அமல்படுத்த வேண்டும் என்று கிரீஸ் அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்தினர்.

பொது வாக்கெடுப்பு
முற்றிலும் சூழப்பட்ட - முற்றுகையிடப்பட்ட நிலைமையை எதிர்கொண்ட, கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ், கடந்த ஜூன் 27ம் தேதி ஒரு பொது வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்தார். 
கடன் வழங்குவதற்காக பன்னாட்டு நிதி நிறுவனம் உள்ளிட்ட மேற்படி மூன்று அமைப்புகளும் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்று மக்களை பொது வாக்கெடுப்பின் மூலம் கேட்பது என்று நாடாளுமன்றத்தால் முடிவு செய்யப்பட்டது.
ஜூலை 5ம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதே தருணத்தில், ஏற்கெனவே பன்னாட்டு நிதி நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக 1.6 பில்லியன் டாலர் தவணைத் தொகையை செலுத்த வேண்டிய நேரமும் வந்து, அதைச் செலுத்த முடியாமல் கிரீஸ், மீளாத கடனாளி என்ற நிலைமைக்கும் சென்றது. இந்த நிலையில்தான் ஜூன் 28ம் தேதி கிரீஸ் அரசு பல மூலதனக் கட்டுப்பாடுகளை திடீரென்று விதித்தது. 
வங்கிகள் மூடப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.

இளைஞர்களின் தீர்ப்பு
இந்நிலையில் பொது வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகின. 
கிரீஸ் மக்கள் சிரிசா அரசுடனான தங்களது ஆதரவினைத் தெரிவித்தார்கள். அவர்கள், சிக்கன நடவடிக்கைகள் தொடர்வதையும், அதன் விளைவாக தங்கள் மீதானசுமைகள் மேலும் மேலும் ஏற்றப்படுவதையும் முற்றாக நிராகரித்தனர்.
 பொது வாக்கெடுப்பில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், `இல்லை’ என்று வாக்களித்த மக்களில் 75 சதவீதம் பேர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்பதுதான். 
அழுகி முடைநாற்றமெடுக்கும் தற்போதைய அரசியல் கட்டமைப்பில் தங்களுக்கு எந்த எதிர்காலமும் இல்லை என அந்த இளைஞர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது.

போர் தொடுக்கும் பெரும் முதலாளிகள்
ஐரோப்பிய பெரும் முதலாளிகளும் பெரும்வங்கியாளர்களும் ஆளும் வர்க்கங்களும்கிரீஸ் மக்கள் மீது ஒரு போரினை அறிவித் திருக்கிறார்கள். `சிக்கன நடவடிக்கை’ என்ற பெயரிலான தாக்குதல்களை ஏற்க முடியாது என்று பிரகடனம் செய்த ஒரு அரசாங்கத்தை தேர்வு செய்தமைக்காக கிரீஸின் மக்களை ஐரோப்பியப் பெரும் முதலாளிகள் தற்போது தண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். 
பொது வாக்கெடுப்பிற்கான பிரச்சாரத்தில் ஒட்டுமொத்த பிரதான ஊடகங்களும், வலதுசாரி மற்றும் பிரதான அரசியல் கட்சிகளும் பெரும் வர்த்தகர்களும் சிக்கன நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி `ஆமாம்’ என வாக்களிக்குமாறு தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால் கிரீஸ் மக்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றனர்.ஐரோப்பிய யூனியனின் ஆளும் வர்க்கக் கட்டமைப்பிற்கு ஜனநாயகம் என்பதும் தேசிய இறையாண்மை என்பதும் கசப்பான விசயங்களாக இருக்கின்றன. 
இந்நிலையில் பொது வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்ததும், அதை ஏற்று கிரீஸ் மக்கள் ஜனநாயகப் பூர்வமாக தங்களது கருத்தினை தெரிவித்ததும் பன்னாட்டு நிதிநிறுவனம் உள்ளிட்ட மேற்படி மூன்று அமைப்புகளையும் அதிர்ச்சியடையச் செய்தன. 
அந்த அமைப்புகள் தங்களது எதிர்ப்பைக் கடுமையாகத் தெரிவித்தன. சில அமைப்புகள் பகிரங்கமாகவே இந்த அரசாங்கத்தை தூக்கி எறிய வேண்டும் என்று பேசின.
‘யூரோ’ வில் இருந்து வெளியேறு!`
சிரிசா’ என்பது ஐரோப்பிய இடதுசாரிகள் என்ற வகையை சேர்ந்த ஒரு கட்சி; குறிப்பாக `யூரோ கம்யூனிஸ்டுகள்’ என்று முன்னர் அழைக்கப்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர்கள். 
இவர்கள் ஐரோப்பிய ஒற்றுமையை உறுதியாக வலியுறுத்துபவர்கள்; ஐரோப்பிய யூனியன்என்ற கட்டமைப்பை உறுதியாக ஆதரிப் பவர்கள். அதனால்தான் ஜனாதிபதி அலெக்சிஸ் சிப்ராஸ் அரசாங்கம் யூரோ நாணயத்தைத் தொடர்ந்து பின்பற்றவும் ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்கவும் விருப்பம் தெரிவித்து, அதில் உறுதியாக நிற்கிறது. 
இந்த அம்சம்தான், சிரிசா அமைப்பிற்கும் கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, போர்ச்சுக்கல் கம்யூனிஸ்ட் கட்சி, சைப்ரஸ் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இதர சில நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடாக இருக்கிறது.
 கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐரோப்பிய யூனியன் என்ற கட்டமைப்பையே பெரும் வர்த்தக மற்றும் பன்னாட்டு மூலதனத்தின் ஒரு செயல்திட்டமாகப் பார்க்கின்றன. சிரிசா கட்சிக்குள் செயல்படும் இடதுசாரிப் பிரிவினரும் கூட யூரோ பொது நாணயக் கட்டமைப் பிலிருந்து கிரீஸ் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். 
ஆனால் சிரிசா அரசாங்கத்தைப் பொறுத்தவரை யூரோ நாணயத்திலிருந்து வெளியேறுவதற்குத் தயக்கம் காட்டுகிறது. 
இதுவே பன்னாட்டு நிதி நிறுவனம், ஐரோப்பிய மத்திய வங்கி உள்ளிட்ட மேற்படி மூன்று அமைப்புகளின் ஈவிரக்கமற்ற நிர்ப்பந்தங்களுக்கு இலக்காகும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடனை ரத்து செய்!
சில கடன்களிலிருந்து கிரீஸ் முற்றாக விடுவிக்கப்படவில்லை என்றால், அதாவது ரத்து செய்யப்படவில்லை என்றால் அந்நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவே முடியாது; 
தனது பொருளாதாரத்தை எந்த விதத்திலும் மீட்சி பெறச் செய்ய முடியாது. எனவே இதைத்தான் சிரிசா அரசாங்கம் வலியுறுத்தியிருக்க வேண்டும்.ஆனால் பொது வாக்கெடுப்பிற்குப் பிறகும் கூட ஐரோப்பியப் பெரும் நிதி முதலாளிகளும் பன்னாட்டு நிதி நிறுவனமும் அதைச் செய்வதற்குத் தயாராக இல்லை. 
மீண்டும் ஒரு புதிய கடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காகவே இந்த வார இறுதியில் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. 
இந்த பேச்சுவார்த்தையில் எப்படிப்பட்ட சலுகைகள் செய்வதாக அறிவித்தா லும், அது சிக்கன நடவடிக்கைகளின் கடுமையான தன்மையை மேலும் அதிகரிப்பதாகவே அமையும். இந்நிலையில் ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றை மேலும் வெட்டுவது அல்லதுமக்கள் மீது மறைமுகமான வரிகளை அதிகரிப்பது என எப்படிப்பட்ட முடிவினை எடுத்தாலும் அது கிரீஸ் மக்கள் மீதான ஒரு பேய்த்தனமான தாக்குதலாக - ஒரு மிகப்பெரிய கிரிமினல்தனமான தாக்குதலாகவே அமையும். 
இத்தகைய சிக்கன நடவடிக்கைகளையும், கிரீஸ் மக்களின் உரிமைகள் மீதான கொடூரமான தாக்குதல்களையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி, யூரோ நாணயக் கட்டமைப்பிலிருந்து கிரீஸ் வெளியேறுவதும், பழைய கிரீஸ் நாணயமான டிராட்ச்மா நாணயத்தை மீண்டும் கொண்டுவருவதுமே ஆகும். சிதைந்து வீழும் தருணத்தில் சிக்கியிருக்கிற கிரீஸ் வங்கிக் கட்டமைப்பை காப்பாற்றிட உடனடியாக அனைத்துவங்கிகளும் தேசியமயமாக்கப்படவேண்டும்.

அடிமை ஆகப்போகிறதா கிரீஸ்?
சந்தேகமே இல்லை, இது ஒரு கடுமையானமற்றும் வேதனைமிக்க கட்டமாகவே இருக்கும். 
ஆனால் யூரோ நாணயக் கட்டமைப்பில் மேற்படி மூன்று அமைப்புகளின் நிபந்தனைகளின் கீழ் தொடர்வது என்பது கிரீஸ் நாட்டை ஒரு கடன் வாங்கிய அடிமையாகவே மாற்றிவிடும்;
 இதன் விளைவாக அந்நாட்டின் ஜனநாயகம் அழியும்; கிரீஸின் தேசிய இறையாண்மை பறிக்கப்படும்.

========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?