டெங்கு,: "வரும் முன் காப்போம்"



இப்போது தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே ஆட்டி வைக்கும் கொசு,தனது காட்டின் மூலம் டெங்கை பரப்பி மனிதனுக்கு மரணபயத்தை உண்டாக்கி விடுகிறது.
பருவமழை தொடங்கிவிட்டாலே பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாக தாக்கும். பொதுவாகவே நாம் குடிக்கும் தண்ணீர் மூலமாகத்தான் பல்வேறு நோய்கள் வருகிறது. வீட்டை சுற்றி தேங்கியுள்ள தண்ணீரால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகிறது. இந்த கொசுக்கள் மூலம் உயிருக்கே உலை வைக்கும் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய்.  எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை டெங்கு நோய் அதிகம், கடுமையாக பாதிக்கும். இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் வருகிறது. ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் டெங்கு வைரஸ் ஒரு வகையால் பாதிக்கப்பட்டால், அந்த வகை வைரசுக்கு மட்டும் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு தன்மை உருவாகி விடும். மற்ற வகை வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு தன்மை வராது.

ஏடிஸ் ஈஜிப்டி (Aedes aegypti) எனும் உடலில் கோடுகள் உள்ள, பகலில் கடிக்கும் கொசு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. 

இந்த கொசு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை கடித்து தன்னுள் வைரஸை எடுத்து, மற்றவர்களுக்கு பரப்புகிறது. இந்த கொசு அநேகமாக வீட்டினுள் பதுங்கி இருக்கும். இந்த கொசு மழை காலங்களில் இனபெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பூச்சாடிகள்,பிளாஸ்டிக் பைகள், கேன்கள், தேங்காய் மட்டைகள், டயர்கள் போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்கிறது. 
இந்த வைரஸ் கொசுக்கடி மூலம் இல்லாமல், நேரிடையாக நோயாளியிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது.நோயாளியிடம் இருந்து,கொசுக்குள் போய் பின்னர்தான் அடுத்தவர்களுக்கு பரவும். நோயாளியை தொடுதல், அருகில் இருத்தல் மூலம் பரவாது.
டெங்கு அறிகுறிகள்
கொசு கடித்து நோய் வர 5 முதல் 15 நாள் வரை ஆகும். ஆரம்பத்தில் குளிர் ஜுரம், தலைவலி, கண்ணை சுற்றி வலி, முதுகு வலி, பின்னர் கடுமையான கால் மற்றும் மூட்டு வலி போன்றவை  வந்து சில மணி நேரத்தில் வரும். 

காய்ச்சல் 104 பாரன்ஹீட் வரை போகலாம். நாடித்துடிப்பு குறைதல், ரத்த அழுத்தம் குறைதல் போன்றவை ஏற்படும். கண்கள் சிவக்கும், உடலில் தோலின் நிறம் மாறும். 

இதற்கு தனியாக மாத்திரை மருந்துகள் கிடையாது. 

காய்ச்சலை குறைக்க சாதாரண பாராசிட்டமல், போதிய ஓய்வு, நன்றாக நீர் ஆகாரங்கள் உட்கொள்ளுதல்தான் இதற்கு சிகிச்சை. 
மருத்துவர் அறிவுரை இல்லாமல், வலி நிவாரணிகள் எடுத்தால், ரத்த இழப்பு அதிகமாகலாம். 

இந்த வகையான டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்று வலி, ரத்தக்கசிவு போன்ற மோசமான உடல்நிலை உருவாகும். 

இந்த வகை டெங்கு, தொடர்ந்து அதிக ஜுரம், தலைவலி வரும். இருமல், வாந்தி, குமட்டல், வயிற்று வலி வரலாம். 2 முதல் 6 நாட்கள் கழித்து கை கால்கள் குளிர்ந்து போய், நாடித்துடிப்பு குறைந்து, வாயை சுற்றி நீலமாகி மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடும்.
தோலில் ரத்தக்கசிவு, ரத்த வாந்தி, மலத்தில் ரத்தம் போய் கருப்பு மலம், பல் ஈரலில் ரத்த கசிவு, மூக்கில் ரத்தம் போன்றவை வரலாம்.
சித்த வைத்திய முறை
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த தட்டு அணுக்கள்  அதிகரிக்கும், நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசை அழித்து, காய்ச்சலை  குணப்படுத்தும். 
மலைவேம்பு இலை சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி  கொண்டது. 
எனவே இவைகள் மூலம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்க தமிழக  அரசு உத்தரவிட்டுள்ளது.

பப்பாளி இலை சாறு:

 புதிதாக  பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர்  ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு 4  முறை அருந்த வேண்டும். பப்பாளி இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும்  ஆன்டி-கேன்சர் பொருட்கள் இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  
எனவே இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால்  பாதிக்கப்பட்டவர்கள் அருந்தி வந்தால் உடலில் உள்ள நோயை தடுக்கவும்  முடிகிறது. 
பப்பாளி இலையில் வைட்டமின் ஏ, பி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள்  நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மலைவேம்பு இலைச்சாறு
புதிதாக  பறித்த மலைவேம்பு இலைகளுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து  வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை அருந்த  வேண்டும். மலைவேம்பு இலைச்சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது. 

நிலவேம்புக் குடிநீர்நிலவேம்பு,  சுக்கு, மிளகு, பற்படாகம், விலாமிச்சை, சந்தனம், பேய்புடல்,  கோரைக்கிழங்கு, வெட்டிவேர் ஆகியவைகளை தேவையான அளவு தண்ணீர் இட்டு கொதிக்க  வைத்து வடிகட்டி 50 மில்லி வீதம் நாளொன்றுக்கு இருவேளை அருந்த வேண்டும்.  
வீட்டில் தயாரிக்க முடியாதவர்கள் மருந்து கடைகளில் நிலவேம்பு குடிநீர்  சூரணத்தை வாங்கி மேற்கண்ட முறையில் தயார் செய்தும் அருந்தலாம். 
நிலவேம்பு  குடிநீர் டெங்கு வைரசை அழித்துவிடும்.

மேற்கண்ட சாறுகளையும்  குடிநீரையும் ஐந்து நாட்கள் அருந்தி வர காய்ச்சல் தணிந்துவிடும். காய்ச்சல்  தணிந்த பிறகு மேலும் 2நாட்களுக்கு அருந்தி காய்ச்சலின் தாக்கத்தை  தடுத்துவிடலாம்.

வராமல் தடுக்க..


* வைரஸ் நோயாளியிடம் இருந்து கொசு மூலம் பரவும் சுழற்சியை தடுக்க வேண்டும். அதனால், நோயாளிகள், கொசுவலைக்குள் சுகம் ஆகும் வரை வைக்க வேண்டும்.
* டெங்கு வைரஸை பரப்பும் கொசுவான ஏடிஎஸ் கொசுவை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த வேண்டும். வீணான பொருட்களை அகற்றிவிட வேண்டும்
* வீட்டில் உபயோகப்படுத்தாத கழிவறைகளில், கொசு இனவிருத்தி செய்யும் வாய்ப்பு உண்டு. அந்த மாதிரி கழிப்பிடங்களை அடிக்கடி சுத்தம் செய்து மூடி வைக்க வேண்டும்.
* குடிதண்ணீர் பற்றாக்குறை காலங்களில், தண்ணீரை பாத்திரங்களில் மூடி வைக்கும் நிலை ஏற்பட்டால், இரண்டு நாளுக்கு மேல் வைத்துக்கொள்ளாதபடி பார்த்து கொள்ளவேண்டும். அதை நன்றாக மூடி, கொசுக்கள் அண்டவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும். 
* பொதுவாக இந்த கொசுவின் வாழ்க்கை சுழற்சி ஏழு நாள் ஆதலால், தேங்கும் சுத்தமான நீரும் ஏழு நாளை தாண்டினால், அது கொசு இனபெருக்கம் செய்து தனது வழக்கை சுழற்சியை முடித்து பரவ ஏதுவாக அமைந்து விடும்.
* நீர் தேக்க தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். வீட்டில் ஏசி, பிரிட்ஜ் மூலம் வெளியாகும் தண்ணீர் தேங்காமல் அவ்வப்போது நீக்கி விடவேண்டும்.
* கொசு கடிக்காமல், கை கால்களை நன்றாக மூடி வைக்க வேண்டும். கொசுவலைகளை பயன்படுத்தலாம். வீட்டு கதவு ஜன்னல்களுக்கு கொசு வலை அடித்து கொசு  வராமல் பார்த்து கொள்ளலாம். 
* உடலில் தேய்க்கும் கொசு மருந்துகளை உபயோகபடுத்தலாம். ஆனால் தோல் அலர்ஜி இது உண்டு பண்ணலாம்.
* இந்த கொசு அதிகாலை (சூரியன் உதயம்) மற்றும் மாலையில் (சூரியன் மறையும் நேரம்) கடிக்கும்.
* சுருங்க சொன்னால், கொசுவை ஒழிப்பதன் மூலமும், கொசு கடிக்காமல் பார்ப்பதன் மூலமே இதை தடுக்க முடியும். 

"வரும் முன்  காப்போம்" என்று நாமே அரசை நம்பாமல் "நமக்கு நாமே "என்று நம் வீட்டை சுத்தமாக நாம் பராமரித்து பார்த்துக்கொண்டால் வளமாக வாழலாம்.
==================================================================================
கற்றாழை
கற்றாழையில் பல வகைகள் உண்டு. 
அவை எல்லாம் மருந்து பொருளாக பயன்படுவதில்லை. ஆனால், சோற்றுக்கற்றாழை மட்டும் மிக சரியான மருந்தாக பயன்படுகிறது. சித்த மருத்துவத்தில் பல நோய்களுக்கு, சோற்றுக்கற்றாழை மருந்தாகிறது. 
காடு, மேடுகளில் மிக எளிதாக கிடைக்கும் சோற்றுக்கற்றாழையை பறித்து, சிறு துண்டுகளாக நறுக்கி, அதன் தோல் பகுதியை நீக்கி விட்டு, உள்ளே இருக்கும் சோற்றுப்பகுதியை பச்சையாக விழுங்கினால், வயிற்று எரிச்சல், அல்சர் தொல்லை, உடல் சூடு நீங்கும். 

வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு நோய் வந்தால், சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. 
கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து, அதை இரண்டாக பிளந்து, சோற்றுப் பகுதியை நெருப்பில் வாட்டி உடல் தாங்கும் வெப்பத்தில், அடிபட்ட இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி, வீக்கம் மட்டுமல்ல, ரத்தக் கட்டும் குணமாகும். 
கற்றாழையின் பிசின் போன்ற சோற்றை, தலையில் தேய்த்து, 30 நிமிடம் ஊற வைத்துக் குளித்தால் தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு மற்றும் துர்நாற்றம் முதலியவை நீங்கும். சோற்றுக் கற்றாழையை இரண்டாகப் பிளந்து உள்ளே கொஞ்சம் வெந்தயத்தை வைத்து மூடி விடவும். 
இரண்டு நாட்கள் கழித்து, அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து, அதை தேய்த்து குளித்து வந்தால் வெள்ளை முடிகள் கருமையாகும். காய்ந்த கற்றாழையை நெருப்பில் கருக்கி, அதை தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப்புண்கள் மீது பூசி வந்தால், விரைவில் புண் குணமடையும். 
குடல் புண், மூல நோய்க்கு கற்றாழை நல்ல மருந்து. 
மலச்சிக்கல் பிரச்னைகளுக்கு இந்த செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து, தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வந்தால் நல்ல பலனளிக்கும். 
=====================================================================================
இன்று,
அக்டோபர்-26.

  • ஆஸ்திரியா தேசிய தினம்(1955)
  • அமெரிக்கா, அமெரிக்க தேசப்பற்று சட்டத்தை நிறைவேற்றியது(2001)
  • நார்வே, ஸ்வீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது(1905)
  • ஆஸ்திரியா அணிசேரா நாடாக தன்னை அறிவித்தது(1955)

=====================================================================================
ஏண்டா ? ஏன்?
வாழ வேண்டிய  நாட்களில் ஒருவரை ஒருவர் சாதி,மதம்,மொழி என்று சண்டை போட்டு நீங்கள் சாதித்ததெல்லாம் கல்லறைகளைத்தானே ?
நீங்கள் இந்த உலகில் உண்டான ஆயிரக்கணக்கான உயிரினங்களில் ஒருவகைதான்.
ஆறறிவு  மட்டுமே உங்கள் தனித்தன்மை.
அதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழாமல் சாதி,மதத்தை படைத்துக்கொண்டு சாகிறீர்களே ?
உங்கள் கற்பனை போல் சொர்க்கமும் கிடையாது!
மறுபிறப்பும் கிடையாது!
இருந்த ஒருவாழ்வையும் கெடுத்துக்கொண்டீர்களே.
உங்கள் சாதியை படைத்தவனும்,கடவுளை படைத்தவனும் மண்ணாகி விட்டான்.அவன் எங்கே மறுபிறப்பு எடுத்தான்?எந்த சொர்க்கத்தில் வாழ்கிறான்?
நமக்கும் மேலே உள்ள சக்தி பிரபஞ்சம் தான்.அதன் கோளாறுகளில் உண்டான கிருமிகளில்,பாக்டிரியாக்களில் ஒன்றுதான் மனிதன்.
நீ இறந்தால் நீயும் மற்றொரு பக்டிரியாதான்.மண்ணுக்கு உரம் மட்டும்தான்.

















இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?