எள். தவிர்க்காதீர்கள்!



இளைச்சவனுக்கு எள்ளு’ கொழுத்தவனுக்கு கொள்ளு எனக் கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக் குறைபாடுள்ளவர்களுக்கு எள்ளு தேவை என்பதே இதன் அர்த்தம். 
எள்ளின் பயன்களைப் பற்றி நம்மவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்க, அயல் நாடுகளில் எள்ளுக்கு செம கிராக்கி.
வெள்ளை எள்ளைக் காட்டிலும் நமது நாட்டில் விளையும் கறுப்பு எள்ளில்தான் அதிக சத்துக்கள் உள்ளன. மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால், சர்க்கரை நோயைத் தடுக்கும். 
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். 
ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை அண்டவிடாமல் தடுக்கும்.

பைட்டோஸ்டீரால் (Phytosterols) எனப்படும் அரிய வகைச் சத்து இதில் இருக்கிறது. இது, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். 
செஸமைன் (Sesamine),செஸமொலின் (Sesamolin) ஆகிய லிக்னன் வகை சத்துக்கள் எள்ளில் இருந்து பிரிக்கப்பட்டு உடல் எடையைக் குறைக்க  விரும்புபவர்களுக்கு  மாத்திரை வடிவத்தில் அயல்நாடுகளில் கொடுக்கப்படுகிறது.

எள்ளில் இருக்கும் பைட்டிக் அமிலம் இதயநோய்களைத் தடுக்க உதவுகிறது. 
தாமிரம் மிக அதிக அளவில் உள்ளது. 
100 கிராம் எள்ளில், ஒரு நாளின் தேவையைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. 
இது ஆர்த்ரைட்டிஸ் முதலான முடக்குவாத நோய்களைத் தடுக்கும், எலும்புகளைப் பலப்படுத்தும்.

மது அருந்துவதால் உடலில் சேரும் நச்சுக்கள், கல்லீரலைச் சிதைக்கும். 
எள் சாப்பிட்டுவந்தால் நச்சுக்கள் வெளியேறி, கல்லீரல் சிதைவு தவிர்க்கப்படும். 25 கிராம் எள்ளில், ஒரு கிளாஸ் பாலைவிட அதிக அளவில் கால்சியம் உள்ளது. 
இதனால், குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் எடுத்துக்கொள்வது எலும்பு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
தயமின் (Thiamin) சத்து எள்ளில் அதிகம் இருப்பதால், எள் உணவுகளைச் சாப்பிட்டதும் நன்றாகத் தூக்கம் வரும். 
தூக்கத்தின்போது உடலில் வலிகள் நீங்கும், மகிழ்ச்சியைத் தூண்டும் செரட்டோனின் ஹார்மோன் அதிகம் சுரப்பதால், மன அழுத்தத்தைப் போக்கும் மருந்தாக இருக்கிறது எள்.   துத்தநாகத்தை அதிகம் கொண்டிருக்கக்கூடிய உணவு எள். 
இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும். ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (Mono Unsaturated Fatty Acid) அதிகம் இருப்பதால், கெட்ட கொழுப்பு குறையும். 
நல்ல கொழுப்பு அதிகரிக்கும். 
பக்கவாதம் வருவதவற்கான வாய்ப்பு குறையும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கும்.

எள் எண்ணெய் – நல்ல எண்ணெய் நல்லெண்ணெய், சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதாகதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். 
நல்லெண்ணெயில் இருக்கும் துத்தநாகம், தோல் புற்றுநோயைத் தடுக்கும். மேலும், தோல் வறட்சியையும் தடுக்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். 
குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்வது, தோல் அரிப்புப் பிரச்னையைத் தடுக்கும்.

எள்ளு மிகவும் அதிக கலோரி கொண்டது. 
நல்ல கொழுப்பு நிறைந்தது. 
உடல் எடை அதிகம் கொண்டவர்கள், உடல் எடை குறைவாக இருப்பவர்கள் என இரண்டு பிரிவினரும், நாள் ஒன்றுக்கு 25 கிராம் மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும். 
எள் உருண்டை, எள்ளு சாதமாகச் சாப்பிடலாம். இட்லிப் பொடி அரைக்கும்போது, எள் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம். 
பொங்கல் முதல், அனைத்து உணவிலும் கொஞ்சம் எள் சேர்ப்பது நல்லது. 
 
நட்ஸ் சாப்பிட்டால் சிலருக்கு உதடு வீக்கம், தும்மல், மூச்சிரைப்பு, சளி, தொண்டைக் கரகரப்பு, குரல் கம்முதல்,  திடீரென ரத்த அழுத்தம் குறைவது, அடிவயிற்று வலி போன்ற அலர்ஜி இருக்கலாம்.  அவர்கள் எள் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
============================================================================================

உங்களுக்கு அடிக்கடி கால் உளைச்சல்,குதிகால் வலி உண்டாகிறதா?

குதிகாலில் எலும்பின் வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதை எக்ஸ்ரே மூலம் தெரிந்து கொள்ளலாம். 
பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால்  பூட்டு, உள்ளங்கால் ஆகியவை உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகமாக உள்ள இடங்களாகும். உள்ளங்கால் மற்றும்  கணுக்கால் தசைகள் வலுவிழுந்தால் நடக்க முடியாது. நிற்க முடியாது. 
குதிகால் வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும். 
இவை வராமல் தடுக்க இரவு  படுக்கும் முன்னும், காலையில் குளிப்பதற்கு முன்னும் உள்ளங்கால்களுக்கு எண்ணெய் தடவிக் கொள்ளுதல் அவசியம்.

சஹசராதி தைலம் 100 மி.லி.யும் கர்ப்பூராதி தைலம் 100 மி.லியும் கலந்து ஒரு இரும்பு கரண்டியில் சிறிது எண்ணெயை (10 மி.லி.) சூடு செய்து  இரவில் படுக்கும் முன் வலது கணுக்கால் பூட்டு, குதிகால் சதை ஆகிய இடங்களில் மசாஜ் செய்து(20 நிமிடங்கள் வரை ) வெந்நீர் நிரப்பிய  பாத்திரத்தில் கால் முழ்குமளவு 10 நிமிடம் வரை வைத்திருந்து பிறகு துணியால் காலைத் துடைத்துவிட்டுப் படுக்கச் செல்லவும. 
காலையில்  குளிப்பதற்கு முன்பும் இதுபோலச் செய்யலாம்.


கடினமான காலணியைத் தவிர்த்து மிருதுவான காலணியை உபயோகிக்கவும். திராட்சைப் பழத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்டுகள்  காணப்படுகின்றன. வலி ஏற்படும் போது திராட்சை ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் வலி கட்டுப்படுவதோடு நிவாரணம் கிடைக்கும். 
சித்தரத்தை,  அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு பொடியை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால்  மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.

முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியவை. 
பிரண்டைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம்  அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குணமாகும். 

குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும்  சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூட்டு வலிகள் குண மாகும். 

பாகற்காயை உண வில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத்  தடுக்கலாம்.

அதிக உடல் எடையும் நாளடைவில் குதிகால் வலி வரக் காரணமாகின்றது.
ஹை ஹீல்ஸ் குதிகாலின் லும்பார் முள்ளெலும்பில் அழுத்தம்  ஏற்படுத்தி, 
உங்கள் கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாக்குகிறது.
========================================================================================
இன்று,
நவம்பர்-04.

  • ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது(1918)
  • அறிவியல் இதழான நேச்சர் முதல் முறையாக வெளியிடப்பட்டது(1869)
1845 - நவம்பர் 4 : 
இந்திய ஆயுதப் புரட்சிக் குழுக்களின் தந்தை என்று போற்றப்படுபவர், வாசுதேவ் பல்வந்த் பட்கே; 
இவர், மஹாராஷ்டிரா மாநிலம், ராஜ்காட் மாவட்டத்தில் உள்ள ஷிர்தான் கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். 
புனே ராணுவ கணக்குத் துறையில், எழுத்தராகப் பணி புரிந்தார்; அங்கு, ஆங்கிலேய ஆட்சியின் அநியாயங்களை கண்டவர், அவர்களுக்கு எதிரான போராட்டக் களத்தில் குதித்தார்!
அப்பகுதியில், 300 இளைஞர்களை தேர்ந்தெடுத்து, தாக்குதல் படையை உருவாக்கினார்; இப்படை, ஆங்கிலேயரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து, பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்தது.பட்கேவை பிடித்துத் தருவோருக்கு வெகுமதி தருவதாக, ஆங்கிலேயர் அறிவித்தனர்; பதிலடியாக, பம்பாய் மாகாண ஆளுனரைப் பிடித்துக் கொடுப்போருக்கு பரிசளிப்பதாக, பட்கே அறிவித்தார்! 
துரதிஷ்டவசமாக ஆங்கிலேய போலீசாரிடம், பட்கே சிக்கினார்; 
சிறைக்குள், அவரை துன்புறுத்தினர்; 
இதைக் கண்டித்து, சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்து, 1883 பிப்., 17ம் தேதி உயிர்நீத்தார்.பட்கே பிறந்த தினம் இன்று!
=========================================================================================
சீனப் பொருட்களில் போலிகள்.
சீன அரசே எச்சரிக்கை,

சீனாவில், 'இகாமர்ஸ்' எனப்படும், இணையவழி வர்த்தகத்தில் விற்கப்படும் பொருட்களில், 10ல் நான்கு, தரமற்றவை; போலியானவை, என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

நுகர்வோர் நலன் மற்றும் உரிமை பாதுகாப்பு மீதான, சீன அரசின் ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
"கடந்தாண்டு, இணையவழி வர்த்தகத்தில், அமெரிக்காவை, சீனா, பின்னுக்கு தள்ளியுள்ளது. கடந்தாண்டில், அமெரிக்காவில், 20 லட்சம் கோடி ரூபாய்க்கு இணையவழி வர்த்தகம் நடந்துள்ளது; சீனாவில், 28 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. 
ஆனால், இணையவழி வர்த்தகம் மூலம், சீனாவில், எண்ணற்ற போலி பொருட்கள் விற்பனை ஆவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். 
கடந்த ஆண்டில் மட்டும், அரசின் வர்த்தகத்துறைக்கு, இது சம்பந்தமாக, 78 ஆயிரம் புகார்கள் வந்தன. 
முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், இது, 356 சதவீதம் அதிகம்.இணையவழி வர்த்தகத்தில் விற்கப்படும் 10 பொருட்களில், நான்கு, தரமற்றதாகவோ, போலியாக தயாரிக்கப்பட்டதாகவோ உள்ளது. இதைத் தடுக்க, இணையவழி வர்த்தகம் மூலம், மக்களுக்கு விற்கப்படும் பொருட்களின் தரத்தை கண்காணிக்க வேண்டும்; 
போலி தயாரிப்பாளர்களை ஒடுக்க, கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்."
இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனத் தயாரிப்புகள் குறித்து, உலக நாடுகள் மத்தியில், எப்போதும் நல்ல பெயர் கிடையாது. இச் சூழ்நிலையில், இணையவழி வர்த்தகத்தில் விற்கப்படும் பொருட்களில் 40 சதவீதம் போலி என்பதை ஒப்புக்கொண்டு, சீன அரசே அறிக்கை வெளியிட்டிருப்பது பெரிய விடயம்.


சீனாவில், 328 பட்டியலிடப்பட்ட, 'இன்டர்நெட்' நிறுவனங்கள் உள்ளன. 
அந்நாட்டின் மொத்த சந்தை மதிப்பில், 25 சதவீதத்தை, இவை பெற்றுள்ளன. இவற்றில், 'அலிபாபா' உட்பட, நான்கு நிறுவனங்கள், உலகின் முன்னணி இன்டர்நெட் நிறுவனங்களாக உள்ளன.
கடந்தாண்டில், சீனாவில், இணையவழியில் பொருட்களை வாங்கியோர் எண்ணிக்கை, 36 கோடியாக அதிகரித்தது. இது, மொத்த வாடிக்கையாளர்களில், 56 சதவீதம். சீனாவின் ஒட்டு மொத்த நுகர்பொருள் தேவையில், 20 சதவீதம், இணையவழி வர்த்தகத்தில் விற்கப்படுகிறது.
இணையவழி வர்த்தகத்தில் விற்கப்படும் பொருட்களில், 40 சதவீதம் போலி என, சீன அரசின் அறிக்கை வெளியாகி இருப்பதால், சீனாவின் முன்னணி, 'இகாமர்ஸ்' நிறுவனமான, அலிபாபாவுக்கு உலக அளவில் பெருத்த பின்னடைவு ஏற்படும் .
=========================================================================================









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?