செம்பரம்பாக்கம்:அரசின் அறிக்கை. சில கேள்விகள் !

செம்பரம்பாக்கம் அணை திறப்பு தொடர்பான அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 
ஆமாம், நாங்கள் எல்லாமே சரியாகத்தான் செய்திருக்கிறோம். இதோ எழுதிவைத்த வழிகாட்டுதல்படிதான் செய்திருக்கிறோம். 
இவ்வளவுதான் முடியும் என்றுதான் அந்த அறிக்கையை புரிந்துகொள்ள முடிகிறது.
1) முதலில் இந்த அரசு யாருடைய அரசு? தலைமைச் செயலாளர் ஏன் அறிக்கை விடுகிறார்? இதுவரையிலும் இப்படித்தான் எல்லாம் நடந்துவந்ததா?
 
2) எல்லாம் இழந்து நிர்க்கதியாய் கையேந்தித் திரியும் எங்கள் மக்கள் மேல் நிகழ்த்தப்பட்டுள்ள பேரிடரின், பேரிழப்பின்  வலியை அரசு உணர்கிறதா? 
அல்லது ஆவணங்களின்படி எங்கள் மேல் குற்றமில்லை என்று தப்புகிறதா?
 
3) அடையாறு ஆற்றின் மொத்த நீர்வரத்துப் பகுதியான 808 சதுர கி.மீட்டரில் 198 ஏரிகள் உள்ளதும், அனைத்தும் நிரம்பிவிட்டது, எல்லாத் தண்ணீரும் சேர்ந்து இது பெருவெள்ளமாகிவிட்டதென்றால் – ஏரிகள் நிறம்பிய கணக்கு யாருக்குத் தெரியும்? 
தெரிந்த அரசு ஏன் கமுக்கமாய் இருந்தது? இல்லை எல்லாம் காலக் கச்சிதமாய் கணக்கிட்டுத்தான் நடந்ததா?
 
4) நவம்பர் 8 ஆம் தேதியிலிருந்தே சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் மழையும், வெள்ளமும் ஏற்பட்டுக் கொண்டிருந்தபோது – எல்லாம் திடீரென 30 ஆம் தேதி இரவில் நடந்துவிட்டதாக நம்பவேண்டுமா? 
அதற்கு நாங்கள் ஒன்றும் ஜெயா தொலைக்காட்சிக்குள் வாழ்க்கை நடத்தவில்லையே?
 5) நவம்பர் 30 ஆம் தேதி வெளியான பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகள் அனைத்துமே சென்னையில் பரவலாக மழை விட்டுவிட்டு பெய்யும் என்றும், கனமழை இருக்கும் என்றும் சொல்லியுள்ளது. அது 29 ஆம்தேதியே வெளியான அறிக்கை. 
அரசுக்கு இது தெரியாமல் இல்லை. 
அப்போதே மழை பெய்துகொண்டுதான் இருந்தது.  
பொதுமக்கள் எல்லோருமே பதட்டத்தோடுதான் செய்தியை கவனித்துக் கொண்டிருதோம். அரசுக்கு அந்தப் பதட்டம் உருவாகாதது ஏன் என்பதை உங்கள் அறிக்கை விளக்கிவிடுமா?
 
6) பத்திரிக்கைகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ள தலைமைச் செயலர், இஸ்ரோ விஞ்ஞானி சிவன் தெரிவித்த கருத்துகளை பதில் சொல்ல தகுதியில்லை என்று ஒதுக்கிவிட்டாரா?
 
7) மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி வெளியிட்ட அறிக்கையில் 5 ஆயிரம் கன அடி திறக்கப்படும், 7 ஆயிரத்து 500 கன அடிவரை உயரலாம் என்ற தகவல் உள்ளது. இரண்டாவது அறிக்கை 2 மணி நேர இடைவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கை வருவதற்குள் வெள்ளம் வந்துவிட்டது. மாவட்ட ஆட்சியருக்கே பொதுப்பணித்துறை முடிவுகள் ‘இன்ஸ்டால்மெண்ட்டில்’ தான் தெரிவிக்கப்பட்டதா? அப்படியெனில் ஒருங்கிணைப்பு இருந்ததாகச் சொல்வது அப்பட்டமான பொய் அல்லவா?
 
8) “பொதுப்பணித்துறையினரிடம் இருந்து தகவல் கிடைத்தவுடன், காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, அடையாறு ஆற்றோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார்.” – அவர் சொல்கிறார். ஆனால், அதுதான் நடந்ததா?
ஏற்கனவே, நவம்பர் முதல் வாரத்தில் மழை வெள்ளத்தைப் பார்த்ததால், மக்களாக சுதாரித்துக் கொண்டனர் என்பதுதானே உண்மை. (அப்போதும் முதலமைச்சர் ஆர்.கே நகர் தொகுதிக்கு வாகனத்தில் சென்று ‘வாக்காளப் பெருமக்களே’ என வாய் மலர்ந்ததை மறக்க முடியுமா?)
 
9) டிசம்பர் 1–ந்தேதி காலையில் “முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கனமழை குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டார். நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு மூத்த அமைச்சர்களுக்கு முதல்–அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.” மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்தியப் படைகள் எப்போது வந்தன? அவர்களுக்கு ஒத்துழைப்பு எப்போது வழங்கப்பட்டது? இவையெல்லாம், இங்கேயே வாழ்ந்து சாகிற மக்களுக்கு உங்கள் அறிக்கைதான் தெரிவிக்குமா என்ன?
 
10) பேரிடர் மேலாண்மை பற்றி நாம் சுனாமி காலம்தொட்டே விவாதித்துவருகிறோம். இருப்பினும் செயலுக்குக் கொண்டுவரத் தவறியது யார் குற்றம்? ‘எனது அரசு’ செய்த குற்றமா? இயற்கையின் குற்றமா?
பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான பணியிலாவது அரசு அக்கறைகாட்டுமா? என்று கருதினால், உண்மையை மூடிமறைக்கும் முன்முனைப்பில் ஈடுபடுவது அபத்தத்திலும் அபத்தம்.
 
பண்டைய தமிழகத்தின் அறிவியல் பூர்வமான நீர்மேலாண்மை அமைப்புகள் சிதைக்கப்படுவது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், எல்லாவற்றையும் லாபக்காடாக்கி, மனித மாண்புகளை மறந்து செயல்பட்ட ஆட்சியாளர்கள் – தங்கள் அறிக்கையின் மூலம் பொய்மைக்கு வடிவம் கொடுக்கலாம். ஆனால், குப்பை மேடாகவும், குட்டிச்சுவறாகவும் மாறிப்போன வீடுகளின் எச்சத்தில் தங்கள் வாழ்க்கையைத் தேடும் மக்களின் கண்ணீர், உங்களை வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து மூழ்கடிக்காமல் நில்லாது.
ரா.சிந்தன்,                                                                                                                     நன்றி:மாற்று 
============================================================================================================
உலகை பயமுறுத்தும் குட்டிப்பையன்!
... எல் நினோவைப் பற்றிய 10 தகவல்கள்!
சென்னையின் பெருமழைக்கு 
முன்பும் சரி, பிறகும் சரி எல் நினோ (El Nino)  என்ற பெயர் அதிகமாக அடிபடத் துவங்கியிருக்கிறது. அதிலும் ஐ.நா சபையின் சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு எல் நினோவைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
இதோ, எல் நினோவை பற்றிய பத்து தகவல்கள்...

1.  'எல் நினோ' என்பது ஸ்பானிய மொழி வார்த்தை. 'குட்டிப் பையன் ' என்பது இதன் பொருள். 
டிசம்பர் மாதத்தை ஒட்டி அதாவது கிறிஸ்துமசை ஒட்டி நிகழும் வளிமண்டல மாற்ற நிகழ்வாதலால் குட்டிப் பையனைப் பொதுவாக 'குழந்தை ஏசு' என்ற பொருள்படும்படியும் அழைக்கிறார்கள். 
பசுபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியின் மேற்பரப்பில் நடைபெறும் வெப்பநிலை மாறுபாடு மற்றும் இதன் உப விளைவாக உலகின் பெரும்பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பே 'எல் நினோ.'

 2. சுருக்கமாக எல் நினோ என அழைக்கப்பட்டாலும், 'எல் நினோ தெற்கத்திய அலைவு' (El Nino Southern Oscillation – ENSO) என முழுமையாக அழைக்கப்படுவதே சரியானது. கிழக்கு பசுபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு ஏற்படும் போது வழக்கமாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின் திசையானது அதற்கு நேர்மாறாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி திசை மாறுகிறது, காற்று வீசும் திசையின் இந்த ஊசலாட்டத்தின் காரணமாகவே 'எல் நினோ தெற்கத்திய அலைவு' என்று அழைக்கப்படுகிறது.

3.
 இத்தகைய காற்றின் திசைமாற்றத்தின் காரணமாக பசிபிக் பெருங்கடலின் காலநிலை முற்றிலுமாக மாற்றமடைகிறது. வழக்கமான ஈரப்பதம் மற்றும் மித வெப்பம் கொண்ட பசிபிக்கின் மேற்குப் பகுதியானது எல் நினோவிற்குப் பிறகு ஈரப்பதம் இல்லாமல் குறைந்த மழையும் வறண்ட நிலையும் கொண்டதாக மாறுகிறது. இதேபோல  எல் நினோ நிகழ்வால் வழக்கமாக வறண்ட குளிர் மற்றும் குறைந்த மழையைக் கொண்ட  பசிபிக்கின் கிழக்குப் பகுதியானது ஈரப்பதமும் மித வெப்பமும் அதிக மழையும் கொண்டதாக மாற்றமடைகிறது.

4. எல் நினோ நிகழ்வைப் பற்றிய முறையான அறிவியல் ரீதியான விளக்கம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முன்பாகவே மனிதனின் பட்டறிவின் மூலமாக இந்நிகழ்வு கவனிக்கப்பட்டே வந்தது. பெரு நாட்டின் கடல் பகுதி மீனவர்களும் கப்பலோட்டிகளும் சில ஆண்டுகள் இடைவெளியில் கடலில் நீரோட்டம் வழக்கத்தை விட வெப்பமடைவதையும், மீன்களின் அளவு குறைந்து வருவதையும் கண்டறிந்தனர். இத்தகைய நிகழ்வுகளை அடுத்து வானிலையில் மாற்றமடைவதையும் கவனித்தே வந்தனர்.
5. தெற்கத்திய அலைவோட்டம் பற்றி  அறிவியல் ரீதியான விளக்கத்தை முதன் முதலாக அளித்தவர்  இங்கிலாந்தைச் சேர்ந்த 'சர் கில்பர்ட் வாக்கர்'. 1923 -ம் ஆண்டு அவர் இதை கண்டறிந்தார். 1904 -ம் ஆண்டு இந்திய வானவியல் ஆராய்ச்சி மையங்களின் தலைமை இயக்குநராக பணிபுரிந்த அவர் இந்திய வானிலை ஆராய்ச்சியில்,  தான் பயின்ற கணிதம் மற்றும் புள்ளியியலை பொருத்தி ஆய்வுகள் மேற்கொண்டார்.

இந்திய பருவ கால மழைகளை ஆராய்ந்ததில் சில குறிப்பிட்ட நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதை அவர் கண்டறிந்தார். பதினைந்து ஆண்டுகள் இந்திய வானிலை மாற்றங்கள் மற்றும் பசிபிக் பிராந்திய வானிலையைக் கண்காணித்து வந்ததில் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் வளிமண்டல அழுத்தத்தில் ஏற்படும் ஊசலாட்டம் போன்ற நிகழ்வு தெற்காசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கப் பகுதிகளின் வானிலையில் மாற்றம் ஏற்படுத்துவதைக் கண்டறிந்தார். இந்த நிகழ்வுகளையே 'எல் நினோ தெற்கு அலைவு' என்று அழைத்தார்.

6.
 எல் நினோவைப் பொறுத்த வரை, முன்கூட்டியே நம்மால் அதை துல்லி யமாக இதுவரை கணிக்க முடிந்ததில்லை. இரண்டு முதல் ஐந்து ஆண்டு களுக்கு ஒரு முறை இந்நிகழ்வு ஏற்படுகிறது. இந்த கால இடைவெளியில் எல் நினோ நிகழ்வு சில வாரங்கள் முதல் மாதம் வரை நீடிக்கிறது.

சில சமயங்களில் எல் நினோ நிகழ்வானது மூன்று ஆண்டு முதல் ஏழு ஆண்டு  வரையிலான கால இடைவெளியில் காணப்படுகிறது. இத்தகைய சமயங்களில் சில மாதங்கள் வரை கூட எல் நினோ நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்.

7. எல் நினோ நிகழ்வின் விளைவாக தென் அமெரிக்காவை ஒட்டிய கடல் பகுதிகளில் முக்கியமாக பெரு நாட்டின் கடல் பகுதிகளில் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரிக்கிறது. இதனால், மீன்களின் உணவூட்டப் பொருட் கள் குளிர்ச்சியான நீரின் அடிப்பகுதியில் தங்கிவிடுவதால் மேற்பகுதியின் வெப்பநீரில் ஊட்டப்பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படுகிறது, இதனால் மீன்கள் மடிகின்றன. இதனால் இக்கடல் பகுதிகளில் எல் நினோ நிகழ்வுக் காலத்தில் மீன்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படும்.

8. 1982 மற்றும் 1983 ம் ஆண்டு  ஏற்பட்ட எல் நினோ நிகழ்வின் விளைவாக உலகம் முழுக்க 2000க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். பொருளாதார ரீதியாகவும் ஆயிரம் கோடிக்கும் மேலான இழப்பு ஏற்பட்டது. 1990-1995 -ம் ஆண்டு வரை மிக நீண்ட எல் நினோ நிகழ்வு ஏற்பட்டது. இக்காலப்பகுதியில் மிகப்பெரும் வெள்ளம், புயல் போன்றவை சில பகுதிகளிலும் பஞ்சம், காட்டுத்தீ போன்றவை சில பகுதிகளிலும் நிகழ்ந்தது. ஆயிரம் ஆண்டுகாலத்தின் பெரும் பேரழிவாக இது கருதப்படுகிறது.

1997-1998 -ம் ஆண்டு எல் நினோ நிகழப்போவதை முன்கூட்டியே நம்மால் கணிக்க முடிந்தது என்றாலும்,  உலகம் முழுவதும் ஏற்பட்ட  2000க்கும் மேற்பட்ட உயிரிழப்பை தடுக்க முடியவில்லை.

9. எல் நினோ நிகழ்வால் உலகின் பல பகுதிகளில் பெரு மழை, வறட்சி போன்றவை நிலவி பெரும் சேதத்தை ஏற்படுத்தினாலும் எல் நினோ நிகழ்வால் சில நன்மைகளும் இருக்கின்றன. வளி மண்டலத்தின் உயரத்தில் வேகமாக கிழக்கு நோக்கி வீசும் 'ஜெட் காற்றோட்டங்கள்' இக்காலப் பகுதியில் பெரும்பாலான புயல்களை வழி நடத்துவதாக இருக்கின்றன.

எல் நினோ நிகழ்வால் இந்த ஜெட் காற்றோட்டங்கள் மாற்றம் பெறுகின்றன. இதனால் பெரும் புயல்கள் வலுவிழக்கின்றன. சில பகுதிகளில் வானிலை மாற்றங்களில் நல்ல விளைவை ஏற்படுத்துகின்றன.

10
. எல் நினோ நிகழ்விற்கு அப்படியே எதிர்மாறானது லா நினா ஆகும். எல் நினோ எவ்வாறு சிறுவன் எனப் பொருள் கொண்டதோ அதே போல லா நினா என்றால் ' சிறுமி' என்று பொருள் ஆகும். லா நினா நிகழ்வால் தென் அமெரிக்க கடல் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக அதிக வறட்சியும் குளிர்ச்சியும் ஒருங்கே நிகழும். மேற்கு பசுபிக் கடல் பகுதி மிதவெப்பமாகவும் அதிக ஈரப்பதமும் மற்றும் அதிக மழையும் இருக்கும். 
========================================================================================

இன்று,

டிசம்பர்-15.
  • ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்(1891)
  • சர்தார் வல்லபாய் பட்டேல் இறந்த தினம்(1950)
  • உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்(1966)
  • நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 இணைய உலாவி வெளியிடப்பட்டது(1994)


========================================================================================

கொசுவைப் பற்றி அறிவோம்:
* குலிசிடை (culicidae) குடும்பத்தை சேர்ந்த ஒரு பூச்சியினமாகும். இவை மெல்லிய உடல் மற்றும் ஓர் இணை இறக்கைகள், மற்றும் நீண்ட கால்களை கொண்டவையாம்.
* இவ்வகைப் பூச்சிகளில் பொதுவாக பெண் கொசுக்களே மனிதர்களிடமிருந்தும் பிற உயிரனங்களிடம் இருந்தும் இரத்ததை உறிஞ்சும்.
ஆண் கொசுக்கள் பழச்சாற்றைப் பருகும்.
* கொசு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் உறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும். அதேவேளை மனித உடலில் இருந்து கொசு குருதியை உறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும்.
* கொசு இனங்களில் அனோஃபிலசு (Anopheles) எனப்படும் இனத்தின் பெண் வகையே உலகின் சில பாகங்களில் மனித இறப்பை ஏற்படுத்தும். மலேரியா என்னும் அபாயகரமான தொற்று நோயை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரப்புகின்றது.
கொசுவால் பரப்பப்படும் நோய்கள்:
1. மலேரியா (Malaria) - Anopheles gambiae எனும் வகையைச் சேர்ந்த பெண் கொசுவால் பரப்பப்படும்.
2. சிக்குன்குனியா (chikungunya) - Aedes aegypti or Aedes .(Tiger mosquito) எனும் வகை கொசுவால் பரப்பப்படும்.
3. மூளைக்காய்ச்சல் (encephalitis) - Culex tarsalis எனும் வகை கொசுவால் பரப்பப்படும்.
4. டெங்குக் காய்ச்சல் (Dengue fever) - Aedes இனத்தைச் சேர்ந்த, பொதுவாக Aedes Aegypti எனும் வகை கொசுவால் பரப்பப்படும்.
5. ஆனைக்கால் நோய் (Filaria) - Culex quinquefasciatus எனும் வகை கொசுவால் பரப்பப்படும்.
=============================================================================================

முகநூல்.




போட்டோ ஷாப் கூட ஒழுங்க பண்ண தெரியல 

1.ஜெயலலிதா பேசி கொண்டு இருக்கும்போது அமைச்சர் சிரித்து கொண்டு இருக்கிறார் 

2.ஓபிஎஸ் படத்தை பாருங்கள் .மேசையை துளைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

                                  இடுப்பளவு தண்ணீரில் நின்றுகொண்டு காப்பாற்ற சொல்கிறாயா?
                                            இல்லை ஆண்டவனிடம் பம்புசெட்டு கேட்கிறாயா?




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?