உண்மையான...குற்றவாளிகள் யார்?

மே தினம்

மே தினம், தொழிலாளி வர்க்கத்தின் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் பாரம்பரிய தினமாக, உலகம் முழுதும் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்த அரசியல் கட்சிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றைய அரசியல் நிலைமைகள் உலக அளவில் எப்படி இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்வதற்கும், அவை தொழிலாளர் வர்க்க இயக்கத்துடனும் இடதுசாரி அரசியலுடனும் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை மதிப்பீடு செய்வதற்கும் இது மிகவும் பொருத்தமான தருணமாகும்.

சென்ற ஆண்டு, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் பல, வலதுசாரிகளின் பக்கம் சாய்ந்தன. ஐரோப்பாவில் அந்நியர்கள்மீது வெறுப்பை உமிழும் கட்சிகளும் அதிதீவிர வலதுசாரிக் கட்சிகளும் செல்வாக்குப் பெற்றுவரும் சூழ்நிலையில்தான் அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
பிரான்ஸ் நாட்டில் மேரின் லீ பென் (Marine Le Pen) தலைமையில் தேசிய முன்னணிக்கு ஆதரவு அதிகரித்திருப்பதையும், நெதர்லாந்தில் சுதந்திரக் கட்சி (The Freedom Party), ஜெர்மனியில் ஜெர்மனிக்கான மாற்று (The Alternative for Germany) என்பவை முன்னுக்கு வந்திருப்பதும் இத்தகைய போக்குகளைக் குறிப்பாகத் தெரிவிப்பவைகளேயாகும்.

மேலும் இலத்தீன் அமெரிக்காவிலும் இடதுசாரிகளுக்கு எதிராக வலதுசாரி எதிர்த் தாக்குதல் (rightist counter offensive) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

பிரேசிலிலும், அர்ஜெண்டினாவிலும் வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்ததற்குப்பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம் தூக்கிப்பிடிக்கும் வலதுசாரிகள் வெனிசுலாவில் உள்ள நிலைமையை பலவீனப்படுத்திட பகீரதப்பிரயத்தனங்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு ஐரோப்பாவில் வலதுசாரிகள் பக்கம் நகர்வு ஏற்பட்டிருப்பதற்கான காரணிகளில் ஒன்று, அங்கே பிரதானமாகவுள்ள சமூக ஜனநாயகக் கட்சிகளின் திவாலாகிப் போன அரசியலாகும். 

பாரம்பரியமாகத் தொழிலாளர்களுடன் நல்ல பிணைப்பை வைத்திருந்த இக்கட்சிகள், ஐரோப்பாவில் கடந்த முப்பது முதல் நாற்பது ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாறியிருப்பதே, இந்த சூழ்நிலைமை எழுவதற்குக் காரணம் ஆகும்.
இந்த கட்சிகள்ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் போது, இவை கடைப்பிடித்திடும் சிக்கன நடவடிக்கைகள், தொழிலாளர் வர்க்கத்தையும், உழைக்கும் மக்களின் இதர பகுதியினரையும் கடுமையாகப் பாதிக்கின்றன. 

கடந்த சில ஆண்டுகளாக இக்கட்சிகளின் அரசுகள் வேலை வாய்ப்புகள் மீதும், சமூக நலத் திட்டங்கள் மீதும் தொடர்ந்து ஏவிவந்த தாக்குதல்கள்தான். 

ஆதரவு அளித்து வந்த தொழிலாளர் வர்க்கத்தை இத்தகைய சமூக ஜனநாயகக் கட்சிகளிடமிருந்து விலகிச் செல்வதற்கு இட்டுச் சென்றன. பல இடங்களில், நம்பகமிக்க இடதுசாரி மாற்று இல்லாத நிலையில், தொழிலாளர்களின் கோபமும் தற்போதுள்ள அமைப்பிற்கு எதிராகத் தனிமைப்படுதலும் அவர்களை வலதுசாரி தேசியக் கட்சிகளுக்கு ஆதரவு அளித்திட இட்டுச்சென்றன. 
டிரம்ப் வெற்றிக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்திட்ட வலதுசாரி தேசியக் கட்சிகளின் வளர்ச்சிக்கும் இவை ஒரு காரணமாக அமைந்தன.

எனினும், சென்ற ஆண்டு சமூக ஜனநாயகக் கட்சிகளின் சமரசக் கொள்கைகளுக்கு எதிராக ஒருசில இடங்களில் தேவைப்படும் மாற்றம் நிகழ்ந்ததையும் பார்க்க முடிந்தது. இடதுசாரிக் கட்சிகள் தங்கள் நிலையை உறுதிப்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.

பிரிட்டனில், பிளேரிசத்தால் (Blairism)(அதாவது டோனி பிளேரின் தலைமையில் இருந்த போது போர் வெறி பிடித்திருந்த) கறைபடிந்திருந்த தொழிலாளர் கட்சி, ஜெர்மி கோர்பின் அதன் தலைவராக வந்தபின் கடந்த கால கறைகளைப் போக்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

அமெரிக்காவில், சென்ற ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, “ஜனநாயக சோசலிஸ்ட்” மேடையைச் சேர்ந்த பெர்னி சாண்டர்ஸ், தொழிலாளர் வர்க்கம், மாணவர்கள், படித்த இளைஞர்கள் மத்தியில் கணிசமான அளவில் ஆதரவினைப் பெற்றதைப் பார்த்தோம். 
இது, ஜனநாயகக் கட்சியின் நவீன தாராளமயப் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு எதிரான ஒரு கலகமாகும்.

சமீபத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் முடிவடைந்த முதல் சுற்றில், இடதுசாரிகளின் மேடையான லா இன்சௌமைஸ் சார்பில் நின்ற ஜீன் லக் மெலென்சான் 19.62 சதவீத வாக்குகள் பெற்று வலுவான விதத்தில் முன்னேறியிருக்கிறார். 

சமூக ஜனநாயக சோசலிசக் கட்சியின் வேட்பாளர் மிகவும் குறைந்த அளவில் வெறும் 6.35 சதவீத வாக்குகளே பெற்றிருக்கிறார்.

இந்த அனைத்து நிகழ்வுகளிலுமே, இடதுசாரி மேடையைச் சேர்ந்த தலைவர்கள் அல்லது வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் ஆதரவை அதிகரிக்க முடிந்திருக்கிறது; மற்றும் வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிகளின் நிலைப்பாடுகளுடன் முறிவினை ஏற்படுத்தக்கூடிய அளவில் கடும் தாக்குதலைத் தொடுக்க முடிந்திருக்கிறது. 

அவர்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய வெற்றி, அங்கே நிலவும் வெற்றிடத்தைக் காட்டுகிறது. அது ஒரு வலுவான இடது மாற்றால் நிரப்பப்பட வேண்டியது அவசியமாகும்.

தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் ஆட்சியாளர்களின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கும் எதிர்ப்பினை மேற்கொண்டுவரும் அதே சமயத்தில், இத்தகைய எதிர்ப்பினை ஒரு நம்பகமான அரசியல் மாற்றாக மாற்றக்கூடிய அளவிற்கு அரசியல் சக்தி எதுவும் அங்கே இல்லை. 
சமூக ஜனநாயகக் கட்சிகளிடமும், சோசலிசம் என்று கூறிவிட்டு சமரசம் செய்து கொள்பவர்களிடமும் விலைபோகாமல் கறைபடியாமல் இடதுசாரி மேடைமூலம் உருவாகி இருக்கக்கூடியவர்கள் இதற்கான அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும். 

இவர்கள் தொழிற்சங்கப் போராட்டங்களையும், நவீன தாராளமய முதலாளித்துவத்தை எதிர்த்து சமர்புரிந்து வரும் இதர இயக்கங்களையும் ஒன்றிணைந்து ஒரு தெள்ளத்தெளிவான இடதுசாரி மேடையை உருவாக்க வேண்டும். இதனால் மட்டும்தான் ஒரு வலுவான வீரியமிக்க அரசியல் மாற்றை அளித்திட முடியும்.

இந்தியாவில், 2016 செப்டம்பர் பொது வேலைநிறுத்தத்திற்குப்பின்னர் கடந்த சில மாதங்களாக தொழிலாளர்களின் போராட்டங்களில் ஒரு முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது. தொடர்ந்து பல வேலைநிறுத்த நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு விதமான எதிர்ப்பு நடவடிக்கைகள் நாடு முழுதும் நடந்து கொண்டிருக்கின்றன. 


மிகப் பெரிய அளவில் வேலைநிறுத்த நடவடிக்கைகள் பல நடந்துள்ள போதிலும், குறிப்பாக இவற்றில், 2017 பிப்ரவரி 28 அன்று வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நடத்திய வேலைநிறுத்தம், இந்திய மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கங்களின் சம்மேளனம் (FMRAI) பிப்ரவரி 3 அன்று நடத்திய ஒரு லட்சம் ஊழியர்களின் வேலைநிறுத்தம், மார்ச் 16 அன்று 13 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தம் ஆகியவை குறிப்பிடத்தக்கவைகளாகும்.

தனியார்மயத்திற்கு எதிராக சேலம், துர்காபூர், பத்ராவதி உருக்காலை தொழிலாளர்கள் ஏப்ரல் 11 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். 

சிஐடியுவின் அறைகூவலுக்கிணங்க 2017 ஜனவரி 20 அன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் அங்கன்வாடி, ‘ஆஷா’, மதிய உணவு ஊழியர்கள், ‘அனைவருக்கும் கல்வி’ ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

ஹரியானாவில் நடைபெற்ற சாலைப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும், மாருதி சுசுகி நிகழ்வில் தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து அவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து மாருதி தொழிற்பிரிவுகளில் நடைபெற்ற அடையாள வேலைநிறுத்தமும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.

கர்நாடகாவில் 20 ஆயிரம் அங்கன்வாடி பெண் தொழிலாளர்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டமும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அவர்கள் அனைவரும் பெங்களூருவில் தர்ணா போராட்டம் மேற்கொண்டார்கள். 

நான்கு நாட்கள் தொடர்ந்து சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநில அரசு தன்னுடைய பட்ஜெட்டில் அறிவித்ததற்கும் மேலாக, அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயும், உதவியாளர்களுக்கு 500 ரூபாயும் கூடுதலாக அறிவித்தது.
மேலே குறிப்பிட்ட தொழிலாளர் வர்க்கத்தின் நடவடிக்கைகள், பிரதானமாக தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய விதத்திலும், தங்கள் வாழ்வாதாரங்களையும், தங்கள் வருமானத்தையும் பாதிக்கக்கூடிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடிய விதத்திலும் அமைந்திருந்தன. 

இவைகள் தொழிற்சங்கங்களின் அமைப்புரீதியான போராட்டங்களின் குணத்தைப் பெற்றிருந்தன.
எனினும், நாட்டில் வலதுசாரிகளின் தாக்குதல்களை எதிர்த்திட தொழிலாளர் வர்க்கம் இன்னமும் முழுமையாகத் தயாராகவில்லை. 

தொழிலாளர் வர்க்கம் அவற்றை அரசியல்ரீதியாக எதிர்த்திட வேண்டிய நிலையில் இருக்கிறது. வலதுசாரி அரசியலின் பிரிக்கமுடியாத பகுதி, இந்துத்துவா மதவெறி தாக்குதல்களாகும். உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தொழில்மையங்களில் கணிசமான அளவிற்குத் தொழிலாளர் வர்க்கம் தங்கள் வாக்குகளை பாஜகவிற்கு அளித்திருப்பதைக் காண முடிகிறது.

“பொருளாதாரப் போராட்டங்கள் மட்டுமே தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் அரசியல் உணர்வை ஏற்படுத்திவிடாது” என்கிற மாமேதை லெனினின் பொருள்பொதிந்த வாசகத்தை இங்கே நினைவுகூர்தல் அவசியம். 

அவ்வாறு நம்பினோமானால், அது பொருளாதாரவாதத்தை நடைமுறைப்படுத்துகிறோம் என்றே அர்த்தமாகும். இது, தற்போதுள்ள நிலை குறித்து சீர்திருத்த மாயைகளையே ஊட்டி வளர்த்திடும்.
தொழிற்சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுடன் தொழிலாளர்களை வீரஞ்செறிந்த போராட்டங்களுக்குத் தயார்படுத்திடும் அதே சமயத்தில், அவர்கள் மத்தியில் இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான கூர்மையான அரசியல் பிரச்சாரத்தையும் முன்னெடுத்துச் செல்லவேண்டியது இன்றைய அவசர அவசியத் தேவையாகும். 

இதனைத் தொழிற்சங்கங்கள் மட்டும் செய்துவிட முடியாது. இதனை, தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில், அவர்களுடைய பணியிடங்களில், அவர்களுடைய குடியிருப்புப் பகுதிகளில், அவர்களுடைய குடும்பத்தார் மத்தியில், தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டத்தை, கம்யூனிஸ்ட் கட்சி நடத்திட வேண்டும்.
நாடு முழுதும் பல பகுதிகளில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. இந்துத்துவா குண்டர்கள் தங்கள் கருத்துகளுக்கு எதிராகப் பேசுபவர்களை நசுக்கிட முனைகிறார்கள்.
மாமேதை லெனின், தன்னுடைய புகழ்பெற்ற “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலில் தெரிவித்துள்ளபடி, தொழிலாளி வர்க்கம் அனைத்துவிதமான ஒடுக்குமுறை மற்றும் கொடுங்கோன்மைக்கும் எதிராகத் தக்க பதிலடி கொடுக்கக்கூடிய விதத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். 

அதனை, சோசலிச உணர்வுடன் ஊட்டி வளர்த்திட வேண்டும். சமூக மாற்றத்திற்கான போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்திச்செல்லக்கூடிய வல்லமையை அதற்கு ஏற்படுத்தித்தர வேண்டும்.
இன்றையதினம் இந்தியாவில், இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, தொழிலாளர் வர்க்கம் தலைமைதாங்க வேண்டும் என்கிற உணர்வை அதனிடம் ஊட்டி வளர்த்திட வேண்டும்.

கம்யூனிஸ்ட்டுகள், தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உணர்வை வளர்த்திட வேண்டும். அப்போதுதான், நவீன தாராளமய முதலாளித்துவம் மற்றும் வகுப்புவாதம் என்னும் இரண்டையும் எதிர்த்துப் போராடி முறியடிக்கக்கூடிய அளவிற்கு தொழிலாளர் வர்க்கம் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள முடியும்.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (ஏப்ரல் 30, 2017)
(தமிழில்: ச.வீரமணி)
==============================================================================================
ன்று,
மே -01.
  •  உழைப்பாளர்(மே) தினம்
  • புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது(1930)
  • இந்தியாவில்  மகாராஷ்டிர மாநிலம் அமைக்கப்பட்டது(1960)
  • ===============================================================================================
கோடநாடு உண்மையான...குற்றவாளிகள் யார்?
ஜெயலலிதா கோட்டையில் அரசாண்டதை விட கொடநாட்டில் ஓய்வெடுத்ததே அதிகம்.அன்று கிராமத்தினர் கூட அவ்வழியாக போகக்கூடாது என்று தடுக்கப்பட்டதால்   மர்மம் நிறைந்த கொடநாடு மாளிகை இன்றோ மர்மம் மிகு  திகில் மாளிகையாகிவிட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வருமானத்துக்கும் அதிகமாக சேர்த்துள்ளதாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் கோர்ட்டில் பட்டியலிடப்பட்ட சொத்துபட்டியலில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 306 வகை யான சொத்து விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஜெ., மறைவுக்குப்பின் இந்த சொத்துக்களின் கதி என்ன, யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது, என்பது மர்மமாகவே உள்ளது. 

இச்சொத்துக்கள் பற்றி ஓரளவு விபரமறிந்த மன்னார்குடி குடும்பத்தினர், அவற்றை கைப்பற்ற கடும்போட்டியில் இறங்கியிருப்ப தாகவும், அதனால் மோதல் முற்றி வருவதாக வும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. ஒரு மாநிலத்தை ஆண்டு, ஆட்சியிலும், கட்சியிலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய ஜெ.,வின் சொத்துக்களையே சூறையாட ஒரு கும்பல் திட்டமிட்டு துணிந்திருப்பதையே, கோடநாடு சம்பவம் காட்டுவதாக, தமிழக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோடநாடு எஸ்டேட் கொலையில் தொடர்புடைய உண்மையான, 'மாஸ்டர் மைண்ட்'களை, அரசியல் நெருக்கடி காரணமாக தப்பிக்கவிட்டுள்ள போலீசார், கூலிப்படையினரை மட்டும் கணக்கில்காட்டி, வழக்கை மூட முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
பங்களா அறைகளில் ஜெ., சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா, என்பது குறித்து, புலனாய்வு ஏஜென்சிகளின் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும்,அதிமுகவில் இருந்தும் கூட கோரிக்கைகள் எழுந்துள்ளன.

'கடந்த, 23ம் தேதி நள்ளிரவு, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட்டிற்கு மூன்று வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், காவலாளி ஓம்பகதுார், 51, என்பவரை அடித்துக் கொன்றுவிட்டு பங்களாவிற்குள் நுழைந்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் பயன்படுத்திவந்த அறைகளின் கதவுகளை உடைத்து, ஐந்து கைக்கடிகாரங்கள், வீட்டு அலமாரியில் வைக்கப்படும் படிகப்பொருட்கள் சிலவற்றை மட்டும் 
கொள்ளையடித்துச் சென்றனர்.


ஜெ., பங்களாவில் நுழையமுயன்ற முகமூடி கும்பலை பார்த்த காவலாளி ஓம்பகதுார் கூச்சலிட்டுள்ளார். அவரைப்பிடித்து கட்டிப் போட முயன்றபோது, திமிறி எழுந்து போராடி யுள்ளார். ஆத்திரமடைந்த கும்பல், இரும்பு ராடால் அவரை தலையில் அடித்துள்ளது; இதில் அவர் உயிரிழந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தனிப்படை போலீசார் கூறுகையில், 'மற்ற காவலாளிகளை காட்டிலும், 'கூர்க்கா'க்கள் பணியிடத்திற்கு விசுவாசமாக நடப்பவர்கள். கொலை செய்யப்பட்ட ஓம்பகதுார், எதிர்த்து போராடாமல் இருந்திருந்தால் பிழைத்திருக்க வாய்ப்புள்ளது. எதிர்த்து போராடியதாலேயே கொல்லப்பட்டிருக்கிறார்' என்றனர்.

''இத்திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவர்கள், ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் சேலம், இடைப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் மற்றும் அவரது நண்பர், கோவையைச் சேர்ந்த சயான். இருவரும் சேர்ந்து திட்டமிட்டு, கேரளாவைச் சேர்ந்த ஒன்பது பேரைக் கூட்டுச் சேர்த்து கோடநாடு எஸ்டேட்டில் கோடிக்கணக்கில் பணமிருக்கும் எனக்கருதி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ், சேலத்தில் நடந்த சாலை விபத்தில் பலியாகிவிட்டார்.
''இன்னொரு முக்கிய குற்றவாளியான சயான், பாலக்காட்டில் நடந்த சாலை விபத்தில் படுகாய மடைந்து கோவை தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெறுகிறார். இவ்வழக்கில், திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ்சமி,39, தீபு,32, சதீஷன், 42, உதயகுமார், 47, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருகிறோம். கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளையில் நீலகிரியைசேர்ந்த உள்ளூர்வாசிகளுக்கோ, அரசியல் பிரமுகர் களுக்கோ எந்த தொடர்பும் கிடையாது. முழுக்க முழுக்க கனகராஜ், சயான் தலைமையிலான 11 பேர் கும்பலே காரணம்,'' என்று, நேற்றுமுன் தினம் அவசர அவசரமாக 'வழக்கை முடித்து' அறிக்கை வெளியிட்டிருக் கிறது நீலகிரி மாவட்ட போலீஸ்.

சம்பவம் நடந்து, ஐந்து நாட்களாக எந்த போலீஸ் உயரதிகாரியும் ஊடகங்களிடம் பேச முன்வராத நிலையில், தேடப்பட்டதாக கூறப் பட்ட நபர்கள் சாலை விபத்தில் சிக்கிய அன்று மாலையே, வழக்கின் விசாரணை ஏறத்தாழ முடிந்துவிட்டதைப் போன்று, நிருபர்களை அழைத்து பேட்டியும் அளித்திருக்கிறார் நீலகிரி எஸ்.பி., முரளி ரம்பா. இதன் பின்னணிதான், பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. 

போலீசார் கண்டுபிடித்து அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிட்ட, 'வழக்கின் கதை' (தியரி) பல்வேறு கேள்விகள் எழ காரணமாகி இருக்கிறது.

*கோடநாடு கொள்ளை வழக்கில் கனகராஜ், சயான் ஆகியோர்தான் 'மாஸ்டர் மைண்ட்' என்றால்... சாலை விபத்தில் அவர்கள் சிக்கும் முன்பே, அவர்களை பிடிக்க மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கை என்ன?
* கனகராஜை 'தீவிரமாக' தேடியிருந்தால் அவரால் எப்படி சர்வசாதாரணமாக தனது வீட்டிற்கு சென்றுவர முடிந்தது? நண்பரின் வீட்டிற்குச் சென்று, அவரது இரு சக்கர வாகனத்தை 'ஓசி' வாங்கிச் செல்ல முடிந்தது? இவரது நடவடிக்கைகளை உண்மையாகவே கண்காணித்திருந்தால் விபத்தில் சிக்கி பலியாகும் முன்பே எளிதாக கைது செய்திருக்க லாமே; அதை செய்யாதது ஏன்?
* வழக்கின் மற்றொரு முக்கிய குற்றவாளியாக போலீசாரால் கூறப்படும் சயான், அவரது மனைவி வினுப்பிரியா, மகள் நீத்து ஆகியோர், விபத்துக்குள்ளான காரில் இருந்து மீட்கப்படும் போது, மூவர் கழுத்திலும் ஒரே மாதிரியான வெட்டுக்காயம் இருந்ததாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து கோடநாடு கொலை வழக்கை விசாரிக்கும் நீலகிரி போலீசார் விசாரித்தனரா?
* மனைவி, மகளை பலிகொடுத்த சயான், பாலக்காடு மருத்துவமனையில் சுயநினைவுடன் பேசும் நிலையில்தான் இருந்துள்ளார். அவ்வாறு இருக்கையில் அங்குள்ள மாஜிஸ்திரேட்டை வரவழைத்து, 'மரண வாக்குமூலம்' வாங்காமல் கோவைக்கு அவரை, அவசர அவசரமாக கோவை போலீசார் 'துாக்கி வந்தது' யாருடைய உத்தரவின் பேரில்? அதன் நோக்கம் என்ன?

*ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணியாற்றிய சேலத்தைச் சேர்ந்த கனகராஜ் கடந்த, 2012 ம் ஆண்டிலேயே வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார். ஐந்தாண்டுகள் கழிந்த நிலையில், கோடநாடு பங்களாவில், 'சி.சி.டி.வி.,' கேமரா கிடையாது என்பது அவருக்கு எப்படி தெரியும்?
* சாதாரண டிரைவரான கனகராஜ் என்ற தனி நபருக்கு, 24 மணி நேரமும் பாதுகாப்பு கெடுபிடி மிகுந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டிற்குள் புகுந்து 
கொள்ளையடிக்கும் துணிச்சல் வருமா?
* ஜெ., மரணத்துக்குப்பிறகோ, சசிகலா சிறைக்குப் போன பிறகோ கோடநாட்டில் நடக்காத சம்பவம், தினகரன் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக டில்லி சென்றதும் நடந்ததன் பின்னணியை விசாரித்தனரா?
* ஜெ., - சசி பங்களா அறைகளில் இருந்த ஐந்து கைக்கடிகாரங்கள் மட்டுமே களவுபோனது என்ற முடிவுக்கு எப்படி போலீசார் வந்தனர்? கொள்ளையர்கள் இவ்வாறு கூறினர் என்றால்... அவர்களது கூற்றை அப்படியே ஏற்றுக்கொண்டதா போலீஸ்? வேறுபொருளோ, ஆவணமோ கொள்ளை போகவில்லை என்பதை யாரை வைத்து புலன்விசாரணையில் உறுதிப்படுத்தினார்கள்?
* கூலிப்படையை ஏற்பாடு செய்ததே மன்னார்குடி குடும்பத்தினருடன் மிக நெருக்கமாக இருக்கும், நீலகிரி மாவட்டத்தில் மர ஆலை நடத்தும் முக்கிய புள்ளி என, தனிப்படை போலீசார் விஷயத்தை முன்கூட்டியே கசியவிட்டது எப்படி?
*கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அந்நபரிடம் விசாரணை நடத்தப்பட்டதா? அவர் பல ஆண்டு களாக கோடநாடு எஸ்டேட்டிற்குள் சர்வசாதார ணமாக சென்று வந்தவர் என்பது, நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர்களும் அறிந்த விஷயம். அவ்வாறு இருக்கையில் அவரை விசாரணை செய்யாமலேயே அவசர அவசரமாக வழக்கை முடிக்க துாண்டிய சக்தி எது?
*கொலை நடப்பதற்கு மூன்று நாள் முன்பே அந்நபர் வெளிநாடு சென்றுவிட்டார் என்ற நிலையில் அவரது நடவடிக்கையை போலீசார் சந்தேகித் திருக்க வேண்டாமா? மன்னார்குடி குடும்பத்தின ருக்கு மிகநெருக்கமானவர் என்பதால் உண்மை யறிந்து விசாரிக்காமல் விட்டுவிட்டார்களா?
*கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடித்த ஐந்து வாட்ச்களையும் குற்றவாளிகள், கேரளாவிலுள்ள ஆற்றில் துாக்கி வீசிவிட்டார்கள் எனக்கூறும் போலீசார், அலமாரி அலங்காரத்துக்கு மட்டுமே பயன்படும் படிகப் பொருட்களை மட்டும் எவ்வாறு பறிமுதல் செய்தார்கள்? 

ஜெ., - சசி பயன்படுத்திய ஐந்து வாட்ச்களின் மதிப்பை காட்டிலும், படிகப் பொருட்களின் விலை அவ்வளவு மதிப்புடை யதா? இவற்றை மட்டும் ஆற்றில் போடாமல் பத்திரமாய் பாதுகாத்து வைத்திருந்தார்களா?
* எஸ்டேட் பங்களா அறைகளில் ஜெயலலிதாவின் சொத்து பத்திர ஆவணங்களோ,பணமோ கொள்ளை போகவில்லைஎன்ற முடிவுக்கு போலீசார் எவ்வாறு வந்தனர்? வழக்கு விசாரணையை விரைவாக முடித்து, 'பிரஸ்'சுக்கு பேட்டி அளிக்குமாறு சென்னையில் இருந்து உத்தரவிட்ட அதிகாரி யார்?

இவை உள்ளிட்ட இன்னும் எண்ணற்ற கேள்விகள், நீலகிரி மாவட்ட மக்கள் மத்தியில் உலாவுகின்றன. போலீஸ் தரப்பில் பதில்தான் இல்லை. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் விளக்கமும் இல்லை. வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸ் அதிகாரிகளுக்கும், 'வாய்ப்பூட்டு' போடப்பட்டிருக் கிறது. கோடநாடு சம்பவம் மற்றும் போலீசாரின் 'வழக்கு முடிவுரையை' பார்க்கையில், கூலிப் படையினரை மட்டும் கணக்கில் காட்டி, அவர்களை குற்றம்புரியத்துாண்டிய நபர்களை போலீசாரே காப்பாற்ற முயற்சிப்பதாக புலம்புகின்றனர், கோட நாடு எஸ்டேட் தொழிலாளர்கள்.

கோடநாடு எஸ்டேட்டிற்குள் சர்வசாதாரணமாக சென்றுவரக்கூடிய நபர் யார் என்பது, நீலகிரி போலீசார் அறியாத ரகசியம் அல்ல. அந்த நபருக்குத்தான் ஜெ., அறை எது, சசி அறை எது என்று நன்கு தெரியும். காரணம், பல ஆண்டுகளாக பல்வேறு வேலைகளை கவனித்தவர் அவர்.சசிகலா குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர். அதனால் தான், கடந்த சட்டசபை தேர்தலின்போது, நீலகிரி மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளுக் கான தேர்தல் செலவினங்களை கவனிக்கும் பொறுப்பு அவரிடம் தரப்பட்டது.
அமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களே அவரிடம் கூறி மேலிடத்தில் காரியம் சாதித்தது உண்டு. தற்போது அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா சிறையிலும், துணைப்பொதுச்செயலாளர் தினகரன் டில்லி போலீஸ்லும் உள்ளனர். குடும்பத் திற்குள் பல உறுப்பினர்களிடையே பதவி, சொத்துச் சண்டை உக்கிரத்தில் உள்ளது.

இந்நிலையில்தான், எஸ்டேட் பங்களா விபரங் களை நன்கறிந்த நபரைக்கொண்டு, சொத்துப்பத்திர ஆவணங்களை கடத்தியுள்ள னர். துரதிஷ்டவசமாக காவலாளி தடுத்து போராடியதால் அடித்துக் கொல் லப்பட்டி ருக்கிறார். விவகாரமும் யாரும் எதிர்பார்க் காத வகையில் பூதாகரமாகிவிட்டது. கொலைநடந்திருக்காவிட்டால், இது ஒரு பெரிய சம்பவ மாகவே கருதப்பட்டிருக்காது.
மன்னார்குடி குடும்ப உறுப்பினர் யாரோ ஒருவரின் உத்தரவின் பேரில், கூலிப் படையை அனுப்பியது, 'நீலகிரி புள்ளி'யாக இருக்கலாம் என்பதுதான் எங்களது சந்தேகம். சம்பவம் நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்பே அந்நபர் வெளிநாடு சென்றுவிட்டார். அவரை பின்னாலிருந்து இயக்கியது யார் என தெரிய வில்லை.

ஏற்கனவே, வழக்கு சிக்கலில் உள்ள மன்னார் குடி குடும்பத்திற்கு மேலும் ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது எஸ்டேட் காவலாளி கொலை விவகாரம்.சேலத்தைச் சேர்ந்த கனகராஜ், கோவையைச் சேர்ந்த சயான் ஆகியோரை மட்டுமே இவ்வழக்கில்,'தலைமை குற்றவாளிகளாக' அறிவித்ததன் மூலம், இவ்வழக்கின் உண்மையான 'மாஸ்டர் மைண்ட்'களை தப்பிக்கவிட்டுவிட்டதாகவே சந்தேகம் எழுகிறது. போலீஸ்துறையை, குறிப்பாக உளவுத்துறையை தன் கட்டுப்பாட் டில் வைத்திருக்கும் முதல்வர் பழனிச்சாமிக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

எனவே, கோடநாடு மர்மம் குறித்து புலனாய்வு ஏஜென்சிகள் மூலமாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்அப்போதுதான் உண்மை வெளிவரும் என்கிறார்கள் அதிமுகவில் உள்ள விபரம் தெரிந்தவர்கள்.

                                                                                                                           தினமலரில்  இருந்து,



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?