நீல திமிங்கல சவால்

நீல திமிங்கல சவால்  (Blue whale Challenge) பல உயிர்களை கொல்லும் விபரீத விளையாட்டு. இது இணையதளத்தில் விளையாடப்படும் ஒரு அபாய விளையாட்டு.
 இது மனரீதியாக பாதிக்கப்படும் ஒரு விளையாட்டு. 

இது வரை இந்த விளையாட்டால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், சிறுவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 
அயல்நாட்டில் தொடங்கி தற்பொது இந்தியாவிற்குள் ஊடுருவி பல மாணவர்களின் உயிரை பறித்து வருகிறது இந்த உயிர்கொல்லி  விளையாட்டு.


இது போனில் டவுன்லோட் செய்யும் மற்ற விளையாட்டுகள் போல அல்ல. 
இது சமூக வலைத்தளங்கள்  மூலம் ஒரு ரகசிய குழுவில் சேர்ந்து விளையாடப்படும் விளையாட்டாகும்
முதலில் ரஷ்ய சமூக வலைதளத்தில் துவங்கப்பட்டு இதுவரை ரஷ்யாவில் 133 பேரின் உயிரை எடுத்துள்ளது. இது 50 நாட்களுக்கு விளையாடப்படும்  விளையாட்டு.

இதில் முகம் தெரியாத யாரோ ஒரு நபரால் கொடுக்கப்படும் அபாய கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். 

இறுதியாக 50-வது நாளில் விளையாடுபவர் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும். 
இந்த 50 நாட்களில் தங்களை தாமே காயப்படுத்தும் வகையில் விளையாட்டு அமையும். 

அதாவது இரவில் தனியாக பேய் படம் பார்ப்பது, உடம்பில் கத்தியால் நீல திமிங்கலத்தை வரைவது, கத்தியால் வெட்டுவது, மொட்டை மாடி சுவற்றில் நின்று பாட்டு கேட்பது போன்ற கட்டளைகளை போட்டியாளர்கள் செய்ய வேண்டும்.

அது மட்டுமின்றி அவர்கள் செய்யும் அனைத்து விபரீத பணிகளை செல்பி வீடியோ எடுத்து இணையத்தில் போட வேண்டும். 
அதன் பின்னரே அவர்களுக்கு அடுத்த டாஸ்க் கொடுக்கப்படும். 
இந்த டாஸ்க் குகள் பிக் பாஸ் டாஸ்க் போன்று விளையாட்டுத்தனமாக இராது.உயிர்க்கொல்லி டாஸ்க்கள் .

இந்த அனைத்து கட்டளைகளையும் நிறைவேற்றிய பிறகு இறுதியாக தற்கொலை டாஸ்க் கொடுக்கப்படும். 

இந்த விளையாட்டிற்கு அடிமையாகி பலர் தங்கள் உயிர்களை மாய்த்து கொள்கின்றனர், முக்கியமாக குழந்தைகள் மற்றும் மாணவர்கள்.

இந்த ப்ளூ வேல் விளையாட்டு கொடூரமான சவாலை போல இன்னும் பல சவால்கள்கொண்ட விளையாட்டுகள் இணையத்தில் உலவுகின்றன.

தனது சவாலை சந்தித்து திறமையை காட்டுவது போல் ஆரம்பமாகும் இந்த விளையாட்டுகள் கடைசியில் மனப்பாதிப்பை உண்டாக்கி கடைசி சவாலாக தற்கொலைக்கு தள்ளி விடுகின்றன.

அதாவது சோக்கிங் சவால், கழுத்தை நெரித்தல்; கோஸ்ட் பெப்பர் சவால், அதிக மிளகாயை வாயில் அடைத்து செல்பி எடுக்க வேண்டும்; சினமன் சவால், பட்டைத் தூளை தண்ணீர் குடிக்காமல் முழுங்க வேண்டும். 

இவை எல்லாம் உயிரை பறிக்கும்  அபாயமான சவால்கள் ,விளையாட்டுகள் ஆகும்.

2015-ல் இருந்து விளையாடி வரும் இந்த நீலத்திமிங்கல விளையாட்டு தற்பொழுது இந்தியாவில் பரவி வருகிறது. 
கடந்த 29 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த 14 வயதான மாணவன், ப்ளூ வேல் சவாலை ஏற்று 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டான். 

இதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த ஒரு மாணவன் இந்த விளையாட்டால் தற்கொலை செய்துள்ளான்.
தற்போது மதுரையில் ஒரு மாணவன் இவ்விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டதாக கொடூரமான செய்தி வந்துள்ளது.

அரசும் சமுக வலைதளங்களும் இதை தடுக்கம் முயற்சியில் ஈடுபட்டாலும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இது மனதை  பாதித்து தற்கொலை செய்யத் தூண்டும்  விளையாட்டு. 

இந்த சமூகத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத குழந்தைகள் எவரும் இல்லை. 
குழைந்தைகள் தங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க பெற்றோர்களே போனை கையில் கொடுத்து விடுகிறார்கள். 

நாகரீக வாழ்க்கையில் சிறு வயதிலே தனி அறை, தனி கைபேசி என சகலமும் கிடைத்துவிடுகிறது. இது போன்ற தனிமையே இது போன்ற விளையாட்டில் ஈடுபடக் காரணமாக அமையலாம். 

பொதுவாக போட்டியாளர்கள் ’yes’ என்று உடம்பில் ப்ளேடால் வெட்டி அதை புகைப்படம் எடுத்து அனுப்பிய பிறகே விளையாட்டில் இணைக்கப் படுவார்கள். 

உதட்டில் காயம் மற்றும் உடம்பில் வெட்டு காயம் போன்றவற்றை பார்த்தால் உடனே நண்பர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். மேலும் நடு இரவில் தூங்காமல் இருத்தல், வினோதமான பாடல் ஏதேனும் கேட்டால் உடனே அதை நிறுத்த வேண்டும்.


பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது குழந்தைகளை கண்காணித்து இது போன்ற விளையாட்டிற்கு அவர்கள் அடிமை ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டும். 

அவர்கள் தனிமையை விரும்பினால் உடனடியாக அவர்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். 
இது மன அழுத்தத்திலும், தனிமையில் இருக்கும் சிறுவர்களை அபாய விளையாட்டுகளில் இருந்து காக்க உதவும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?