சவப்பெட்டியின் கடைசி ஆணி?

நமது பிரதமர் 65 முறை உலகத்தைச் சுற்றி வந்திருக்கிறார். 
ஆனால் ஒரு முறையாவது சுற்றுப்பயணத்தின் விபரத்தை இந்த மாபெரும் அவைக்கு தெரிவித்திருக்கிறாரா? 

அமெரிக்காவுக்கு 5 முறை சென்றிருக்கிறார். அங்கே என்னதான் பேசினார்? 

இந்தியாவை அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளியாக மாற்றியதைத் தவிர நீங்கள் வேறு எதைச் சாதித்தீர்கள் - என்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கடந்த வியாழனன்று இந்தியாவின் அயல்துறை கொள்கை குறித்த விவாதத்தில் பங்கேற்று விளாசித் தள்ளினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி.

நாடாளுமன்றத்தில்  சீத்தாராம் யெச்சூரி பேச்சு முழு விபரம்.:-
இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கு, நம் அயல்துறைக் கொள்கை என்னவாக இருக்க வேண்டும்? 
வரலாற்றுரீதியாக நம் நாட்டின் அயல்துறைக் கொள்கை என்பது, நம்முடைய நாட்டின் நலன்களைப் பாதுகாக்கக்கூடிய விதத்தில், ஒரு சுயேச்சையான அயல்துறைக் கொள்கையாக இருந்து வந்தது. அதற்குத்தான் உச்சபட்ச முன்னுரிமை அளித்து வந்தோம். 

இப்போது, சர்வதேச அரங்கில் நீங்கள் வித்தியாசமான நாடுகளுடனும், சக்திகளுடனும் உறவினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அமெரிக்கா தன் ஒரு துருவக் கோட்பாட்டின் கீழ் உலகைக் கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறது; உலகில் உள்ள பல்வேறு நாடுகள் அதனை பலதுருவக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்க விரும்புகின்றன, இவை இரண்டுக்கும் இடையிலான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் இந்தியா பலதுருவக் கோட்பாட்டிற்காகப் போராடுகிற நாடுகளுடன்தான் கை கோர்த்திட வேண்டும்.

ஆனால், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக என்னுடைய குற்றச்சாட்டு என்னவெனில், நாம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருதுருவக் கோட்பாட்டை நோக்கியே நம் அனைத்து அம்சங்களையும் நகர்த்திக் கொண்டிருக்கிறோம் என்பதாகும். 

இது எந்தவிதத்திலும் இந்தியாவின் நலன்களுக்கானது அல்ல. இந்தியாவின் பாதுகாப்பு, இந்தியாவின் சர்வதேச எல்லைகள் தொடர்பான பாதுகாப்பு, இந்தியாவின் இறையாண்மை ஆகியவை நமக்கு மிகவும் முக்கியமானவை. இவற்றைப் பாதுகாப்பதில் நமக்கு எவ்விதமான மாற்றுக்கருத்தும் இருந்திட முடியாது.நம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை மீறுவதற்கு எவர் முயன்றாலும், அதனைத் தடுத்து நிறுத்தி நம்மைப் பாதுகாக்கக்கூடிய விதத்தில், இந்தியா இருந்திட வேண்டும். 
இதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்க முடியாது. இதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

அமெரிக்க ஒப்பந்தத்தால் மின்சக்தி கிடைத்தா?
இன்றைய சூழ்நிலையில், அமெரிக்காவினால் தலைமை தாங்கப்படும் ஒருதுருவக் கோட்பாட்டுடன் இந்தியா தன்னைப் பிணைத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பிருந்த அரசாங்கங்களும் இப்படிச் செயல்பட்டதை நாம் பார்த்தோம். அப்போதும் நாங்கள் இதனை முழுமையாக எதிர்த்தோம். ஐமுகூ அரசாங்கம் இருந்த சமயத்திலும் இந்தியா, அமெரிக்காவுடன் ஒரு நீண்ட கால ராணுவ சூழ்ச்சிக் கூட்டணியை நோக்கி நகர்ந்தது. 
– அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொள்ள முடிவு செய்தது. அதன் காரணமாக நாங்கள் அதற்கு அளித்துவந்த ஆதரவினை விலக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. ஏனெனில் நாங்கள் ஐமுகூ அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் ஓர் அங்கமாக அந்த ஒப்பந்தம் அமைந்திடவில்லை.
ஆனால், இன்றைய தினம், அந்த ஒப்பந்தத்தின் கதி என்ன? 
அந்த ஒப்பந்தத்தால் இந்தியா என்ன சாதித்திருக்கிறது? அந்த அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியாவிற்குக் கூடுதலாக ஒரு மெகாவாட் அளவாவது அணுசக்தி மூலமாக மின்சாரத்தை நாம் பெற்றோம் என்று சொல்ல முடியுமா? 
அமெரிக்காவிடமிருந்தாவது அணுசக்தி முகமையிடமிருந்தாவது அணுசக்தி தொழில்நுட்ப மாற்றம் நமக்கு நடைபெற்றிருக்கிறதா? ‘
அணு விநியோகஸ்தர்கள் குழுமத்தில்’ நுழைவதற்காவது அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்களா? 
இன்றைய தினம் நம் விஞ்ஞானிகள் ராக்கெட்டுகளையும், செயற்கைக்கோள்களையும் விண்ணில் அனுப்பமுடிகிறதென்றால், அதற்கு அவர்களின் சொந்தத் திறமைதான் காரணமாகும். எந்த அயல்நாட்டின் ஒத்துழைப்பாலும் அவர்கள் இந்தத் திறனை வளர்த்துக்கொள்ளவில்லை.

இந்தியா எங்கே செல்ல வேண்டும்?
ஐமுகூ அரசாங்கம் சர்வதேச அளவில் மேற்கொண்ட பல நடவடிக்கைகளுக்காக நாம் பாராட்டப்பட்டிருக்கிறோம். இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டணி ‘ இப்சா(IBSA)’ அமைக்கப்படுவதற்கு நாம் நீண்ட கால அடிப்படையிலான பங்களிப்பினைச் செய்திருக்கிறோம். 
அதேபோன்று ‘பிரிக்ஸ்’ (‘BRICS’) எனப்படும் இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டணிக்கு நாம் மிக முக்கிய பங்களிப்பினை ஆற்றியிருக்கிறோம். இப்படிப்பட்ட பலதுருவ அணி சேர்க்கை என்பது இயற்கையானதாகும். உலகம் அதனை நோக்கித்தான் நகர வேண்டும்.
ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் இந்தியா எந்த அளவிற்குத் தன்னைச் சுருக்கிக் கொண்டிருக்கிறது? 
இப்போது இந்தியா, உலக அளவில் அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாறியிருக்கிறது என்றே நான் பார்க்கிறேன். அமெரிக்காவுடன் நாம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இவ்வாறு நான் கூறுகிறேன்.
 ஐந்து முறை நம் பிரதமர் அங்கே சென்றிருக்கிறார். ஐந்தாவது முறை அவர் சென்ற போது, என்ன நடந்தது? 
நான் அதற்குச் சற்றே பின்னால் வருகிறேன்.

நான்காவது முறை அவர் சென்றபோது, ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. உண்மையில் அது நம்மை மிகவும் சங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது. ‘லீமா’ (‘LEMA’) எனப்படும் கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் (Logistics Exchange Memorandum of Agreement) என்பது குறித்து நமக்கு எதுவுமே தெரியாது. 

இந்த ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் என்ன என்று நமக்கு எதுவுமே தெரியாது. இந்த ஒப்பந்தம் நம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன் வைக்கப்படவில்லை. இங்கே இந்த ஒப்பந்தம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. 
ஆனால் அமெரிக்காவில் உள்ள செனட் சபையில் 2017ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு அதிகாரத்துவச் சட்டம் (2017 National Defence Authorization Act) என்பதன் ஓர் அங்கமாக அமெரிக்க செனட் சபையின் ஒப்புதல் இதற்குத் தேவைப்பட்டிருக்கிறது. 
அங்கே அது விவாதிக்கப்பட்டிருக்கிறது.
அந்த ஒப்பந்தத்தில் என்ன அடங்கியிருக்கிறது என்பதை அவர்களின் இணையதளத்திலிருந்துதான் நம்மால் தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த ஒப்பந்தம் குறித்து அவர்கள் என்ன கூறுகிறார்கள்? 

இந்தியா, நம்முடைய மிகப்பெரிய ராணுவக் கூட்டாளியாக, மிகவும் நெருக்கமான ராணுவக் கூட்டாளியாக, மாறியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இதன் பொருள் என்ன?அவர்களுடைய இணையதளத்தில் இதுதொடர்பாக உள்ள அறிக்கையில், 12(9)(2)ஆவது பிரிவில் ‘ஈ’ (‘E’) பத்தியில், "ராணுவத் தளவாடங்களின் பாதுகாப்பை சரிப்படுத்திக்கொள்வதற்கான ஏற்பாடுகள், சைபர் பாதுகாப்பு மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் தொடர்பாக ராணுவ சேவைகளின் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளுதல் ஆகியவற்றுடன் அமெரிக்க ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதற்கு ஏற்ப இந்தியாவை மாற்றியமைத்தல்" என்று கூறப்பட்டிருக்கிறது. 

எந்த அளவிற்கு நம் நாட்டின் இறையாண்மை சரணடையவைக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.

நாம் இங்கே, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு ஆகியவை எவருடனும் சமரசம் செய்துகொள்வதற்கில்லை என்று பேசிக்கொண்டிருக்கிறோம். 

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் மேலும் என்ன வெல்லாம் கூறப்பட்டிருக்கிறது, தெரியுமா? 

"தெற்காசியா மற்றும் பெரிய அளவில் இந்திய – ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், அமெரிக்காவின் நலன்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில், ‘முன்னெடுத்து’ என்கிற சொல்லைத் தயவுசெய்து அடிக்கோடிட்டுக்கொள்ளுங்கள், இந்தியாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு கிடைத்திடும்." ஆகவே, இப்போது நாம், அமெரிக்காவின் இளைய பங்காளி என்ற முறையில், நம்முடைய அண்டை நாடுகளில் அமெரிக்கா எடுத்திடும் அத்துணை ராணுவ சூழ்ச்சி நடவடிக்கைகளுக்கும் அதன் சொல்படி கேட்டு நடந்திடும் ஏவலாளாக மாறியிருக்கிறோம். 

நம் சுயேச்சையான அயல்துறைக் கொள்கையை சவப்பெட்டிக்குள் அடைத்துவைத்து கடைசி ஆணியும் அடிக்கப்பட்டுவிட்டது.

இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளையும் பார்த்தபின்னர் கனத்த இதயத்துடன் இதை நான் கூறுகிறேன். அமெரிக்காவின் கட்டளைக்கிணங்க பல்வேறு துறைகளை நாம் மாற்றி அமைத்துக்கொண்டிருப்பதன் காரணமாக ஏற்பட்டு வரும் பாதிப்புகளை இப்போது நம்மால் பார்க்க முடிகிறது. நமது பிரதமர் 65 முறை உலகத்தைச் சுற்றி வந்திருக்கிறார். 

ஆனால் ஒருதடவையாவது, தன் சுற்றுப்பயணத்தின் விவரம் குறித்து இந்த அவைக்கு அவர் தெரிவித்திருக்கிறாரா? 

நம் அயல்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தான் அயல்நாடுகளுக்கு சென்றுவந்தபின் அதன் விவரங்களை கலந்தாலோசனைக் குழுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து என்ன நடந்தது என்று கூறிவிடுவார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். ஆனாலும், அவரும் இந்த அவையில் அவற்றைத் தெரிவித்ததில்லை.அனைத்துத் துறைகளில் அந்நிய முதலீடுகள் 100 சதவீதம் அளவிற்கு அனுமதித்திருக்கிறீர்கள்.

இப்போது ரயில்வேயையும் தனியாருக்குத் தாரை வார்க்கத்தொடங்கிவிட்டீர்கள். ஏர் இந்தியா நிறுவனம் தனியாருக்குத் தாரை வார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணுவத் தளவாடங்கள் கொள்முதலில் தனியார் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

இவற்றின் இறுதி விளைவு என்னவாகும்? நம் நாட்டின் ராணுவ உற்பத்தில் 49 சதவீத அளவிற்கு அந்நிய முதலீட்டுக்கு வழிதிறந்துவிட்டிருக்கிறீர்கள். இது நம்முடைய நலனுக்காக என்று சொல்ல முடியுமா? 

நம்முறை ராணுவ வசதிகளை ஆய்வு செய்வதற்கு அமெரிக்காவை மட்டுமல்ல, எந்த நாடு வேண்டுமானாலும் ஆய்வு செய்திடலாம் என்று ஒப்புக்கொண்டு வந்திருக்கிறீர்களே இது நம் நாட்டின் நலனுக்காகவா?

இதுவரை நம் நாட்டின் ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்து வந்த டிஆர்டிஓ என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஸ்தாபனம், இனி இஸ்ரேலுடன் நெருக்கமான முறையில் ஒத்துழைத்திடும். இது நம்முடைய நலனுக்காகவா? நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான். 

பிரதமர் மோடி, ஐந்தாவது தடவையாக அமெரிக்கா சென்றுவந்தபின், இந்தியாவின் பாதுகாப்பிற்காக நாம் என்ன பெற்றிருக்கிறோம்? 

நாம் எச்1 விசா தொடர்பாக எவ்வித உறுதிமொழியையும் அமெரிக்காவிடமிருந்து பெறவில்லை. அமெரிக்காவில் சிலிகான் பள்ளத்தாக்கில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட நம் நாட்டு இளைஞர்கள் பணிபுரிகிறார்கள். அவர்கள் தொடர்ந்து அங்கே பணியாற்றுவது இன்றைக்குக் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆனால், இப்போதும் நீங்கள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்.
டிரம்ப்பை அமெரிக்கர்களே கூட நம்பவில்லை.

டிரம்ப் தன்னுடைய எழுபது நாட்கள் பதவியை நிறைவு செய்ததைத்தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஏட்டில் வெளியாகியுள்ள செய்தியைப் படிக்கிறேன், அந்த ஏட்டின் தலையங்கம் என்ன எழுதியிருக்கிறது என்று படிக்கிறேன். "ஜனாதிபதி டிரம்ப் ஆட்சிக்கு வந்தபின்னர் ஏதாவது செய்வார் என்று மற்ற பல அமெரிக்கர்களைப்போலவே நாமும் எதிர்பார்த்தோம். 

ஆனால் இந்த எழுபது நாட்களில் எதுவுமே நடக்கவில்லை. 

இனிவரக்கூடிய 1400 நாட்களும் அப்படித்தான் இருக்கப்போகிறதோ என்றே தோன்றுகிறது" இவர்கள்தான் அமெரிக்கர்கள். ஆயினும் அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவின் அபிலாசைகளைத் தீர்த்துவைப்பார் என்று நம்புகிறீர்கள்.

இந்தப் பின்னணியில்தான் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவெனில், இந்தியா அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாறியது மட்டுமல்ல, அதனை பிரதமர் மோடி, இஸ்ரேலுக்குப் பயணம் செய்ததன் மூலம் மிகவும் உறுதிப்படுத்தியிருப்பதுமாகும். 
இப்போது இஸ்ரேல் சென்றபோது ஏழு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறார். அவை என்னவென்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். பாலஸ்தீனத்திற்கு செல்லாதது மட்டுமல்ல பாலஸ்தீனத்தை இழிவுபடுத்தக்கூடிய விதத்தில் பிரதமர் மோடி பேசியிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் கசிந்திருக்கின்றன. அவ்வாறு பேசியிருப்பதன் மூலமாக நம் சுயேச்சையான அயல்துறைக் கொள்கை சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுவிட்டது.

பாலஸ்தீனத்திற்கும் நமக்கும் இருந்த ஒருமைப்பாடு என்பது நாம் சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே தொடங்கிவிட்டது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் மகாத்மா காந்தி என்ன கூறினார்? 

"எப்படி ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்து இருக்கிறதோ, எப்படி பிரெஞ்சுக்காரர்களுக்கு பிரான்ஸ் இருக்கிறதோ அப்படி பாலஸ்தீனர்களுக்கு பாலஸ்தீனம்" என்று கூறினார். ஆனால் மோடியின் பயணத்தில் பாலஸ்தீனத்தின் நிலப்பகுதிகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மேலும், இந்தியா தற்போது அதிக அளவில் ராணுவ தளவாடங்களை இஸ்ரேலிடமிருந்துதான் இறக்குமதி செய்கிறது.

இப்படியாக இந்தியா இன்றைய தினம் உலக விவகாரங்களில் தன்னுடைய அணுகுமுறையை முழுமையாக மாற்றிக் கொண்டிருக்கிறது.இதனால் என்ன ஆதாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கிறது?நம்முடைய பொருளாதாரக் கொள்கைகளில் அந்நிய மூலதனத்திற்கு வழிதிறந்து விட்டிருக்கிறீர்கள், 

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற உங்கள் அறிவிப்பு, ஜிஎஸ்டியை நீங்கள் கொண்டுவந்திருக்கும் முறை இவை அனைத்துமே பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி செய்து தந்திருக்கிறது.அந்நிய மூலதனத்தைக் குஷிப்படுத்துவதற்காக சொந்த நாட்டு மக்கள்மீது சுமைகளை ஏற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.

உலகப் பொருளாதார நெருக்கடி 2008இல் ஏற்பட்டபின்னர், மேற்கத்திய நாடுகள் எதற்காக ஏங்கின? அமெரிக்கா எதற்காக ஏங்கியது? 
அவை சந்தைகளுக்காக ஏங்கின. 
மலிவான வள ஆதாரங்களுக்காக ஏங்கின. இப்போது அவற்றின் ஆதாயங்களுக்காக நீங்கள் இந்திய சந்தையைத் திறந்து விட்டிருக்கிறீர்கள். நம் மக்களைக் கசக்கிப்பிழிந்து அவர்கள் நெருக்கடியைத் தீர்த்துக்கொள்ள வசதி செய்து தந்திருக்கிறீர்கள்.

அயல்துறைக் கொள்கையின் மிக முக்கியமான கூறு, நம் உறவுகள் அண்டை நாடுகளுடன் எப்படி இருக்கிறது என்பதாகும். அண்டை நாடுகளுடன் நம் உறவு இப்போது எப்படி இருக்கிறது. நேபாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியர்களும், நேபாளியர்களும் அண்ணன் – தம்பி போல அல்ல, மாறாக இரட்டையர் போல வாழ்ந்து வந்தோம். ஒருவரின் வலி மற்றவருக்குத் தெரியும்.

ஒருவரின் சந்தோஷம், மற்றவரின் சந்தோஷமாக இருந்து வந்தது. இன்றையதினம் அந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? 

நேபாள நாடாளுமன்றம் தங்கள் அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றி 22 மாதங்களாகின்றன. அவர்கள், அவர்களுடைய அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். அதில் நமக்கு ஒத்துப்போகாத அம்சங்கள் இருக்கலாம். நாம் அதனை ராஜீயரீதியாக எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் நேபாளத்தில் உள்ள பொதுக் கருத்து என்னவென்றால், இந்தியா தங்கள் விவகாரங்களில் தலையிடுகிறது என்பதாகும். 
ஏன் இவ்வாறான நிலை எழுந்துள்ளது?

ஏனென்றால், நேபாளத்தில் மன்னராட்சி முறை மீண்டும் வரவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. ஏனெனில், உலகில் இருந்த ஒரேயொரு இந்து ராஷ்டிரமாக அது இருந்து வந்தது. இப்போது அங்கே இந்திய எதிர்ப்பு உணர்வு வளர்ந்தால், அது நம் நாட்டின் நலனுக்கு உகந்ததா?

வங்கதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? 
அந்நாட்டின் பிரதமர் வருகிறார். அங்கே விரைவில் பொதுத் தேர்தல் நடக்க இருக்கிறது. 
அந்த நாட்டுடன் சில ஒப்பந்தங்களைப் போட்டிருந்தோம். அவை இன்னமும் நிறைவேறவில்லை. இதனால் அங்கே நம் நாட்டிற்கு எதிராக அதிருப்தி மனப்பான்மை வளர்ந்து வருகிறது. இது இந்தியாவின் நலனுக்கு உகந்தது அல்ல.

பாகிஸ்தானின் நிலைமை என்ன? 
இப்போது திடீரென்று அறிவிப்பு வந்திருக்கிறது ஆச்சர்யமாக இருக்கிறது. 
அதுகுறித்து அயல்துறை அமைச்சர் விளக்குவார் என நம்புகிறேன். இருநாட்டின் தேசியப் பாதுகாப்பு முகமைகளும் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கின்றன என்பதாகும். இது உண்மையானால், பாகிஸ்தான் மண்ணிலிருந்து பயங்கரவாத நடவடிக்கைகள் நிறுத்தப்படாதவரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று நீங்கள் சொல்லிவந்தது என்னவாயிற்று? 

இப்போது பேச்சுவார்த்தைகள் நடக்கிறதா? 
இல்லையா?

பதான்கோட்டில் பாகிஸ்தான் உளவாளிகளை அனுமதித்தீர்கள். நாம் என்ன திரும்பப் பெற்றோம்? 
துல்லியத் தாக்குதல் நடத்தினீர்கள். வந்துள்ள செய்திகளின்படி இறந்த நம் வீரர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கானது. 
என்ன கொள்கையைத்தான் நீங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?

இப்போது சீனத்துடன் மோதல் போக்கு. ராஜீய பேச்சுவார்த்தைகளின் மூலம் இரு நாட்டுப் பிரச்சனைகளையும் பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற அரசின் கொள்கைமுடிவோடு நாங்கள் நூறு சதவீதம் உடன்படுகிறோம். இது சீனாவுடன் மட்டுமல்ல. இந்த ஆண்டு நீங்கள் மலபார் ராணுவப் பயிற்சியை நடத்தி இருக்கிறீர்கள். மலபார், அரபிக்கடலில் இருக்கிறது. ஆனால் பயிற்சியை வங்காள விரிகுடாவில் நடத்தி இருக்கிறீர்கள்.

இதன் பொருள் என்ன? 
யாருடன் பயிற்சி? 
அமெரிக்காவுடனும், ஜப்பானுடனும் கூட்டு ராணுவப் பயிற்சியை இந்தியா செய்திருக்கிறது. 
இதன் மூலம் தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவில் உள்ள நாடுகளுக்குக் குறிப்பாய் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? 
இரு நாடுகள் தங்களுக்கு எதிராக ஒரு பொது எதிரி இருக்கிறார் என்று கருதினால் அவருக்கு எதிராக இத்தகைய கூட்டு ராணுவ பயிற்சிகளை நடத்திடும். 
அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே, வங்காள விரிகுடாவில், பொது எதிரி யார்? 
நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் இதனை புரிந்து கொள்ளமாட்டா என்று நினைக்காதீர்கள்.
அண்டை நாடுகளுடன் நல்லுறவு நீடிப்பது அயல்துறைக் கொள்கையின் அடித்தளமாக அமைந்திட வேண்டும். 
அமெரிக்க – இஸ்ரேல் – இந்தியா கூட்டணி நம் நாட்டின் நலனுக்கானது அல்ல.

இவற்றை இந்த அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

                                                                                                                                               நன்றி:தீக்கதிர்,                         தமிழில் : ச.வீரமணி

=======================================================================================

ன்று,
ஆகஸ்ட்-06.
  • ஹிரோஷிமா, டோரோ நாகாஷி நினைவு தினம்
  • பொலீவியா விடுதலை தினம்(1825)
  • ஜமைக்கா விடுதலை தினம்(1962)
  • உலகளாவிய வலை (WWW)தொடர்பான ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ் லீ வெளியிட்டார்(1991)
=========================================================================================


அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்குதோம் கட்சி மாறி ஒட்டு போடுங்கனதும்  ஏமாந்திட்டேன் !

பாஜக,வருமானவரித்தொல்லை இல்லாத இடமா பார்த்து எம்.எல்.ஏக்களை  கொண்டு போறாங்களாம்.

                      காமிராவே இல்லாத இடமா போய் ரகசியம் பேசலாம்னு பார்த்தா, இங்கேயும் நம்மை படம்                                                                                    எடுக்கங்களேப்பா? 




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?