கவிழும் கப்பல் ?

காகித ஓடம், கடலலை மீது, போவது போலே இருவரும் போவோம் என்று எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் இணைப்பு விழாவுக்கு பிறகு பயணம் தொடங்கிய கப்பலில் விழுந்த ஓட்டைகள் கப்பலை கவிழும் நிலைக்கு தள்ளியுள்ளன.   ஏற்கனவே இருந்த சிறு சிறு ஓட்டைகளை, தனது கை மற்றும் தலை, கால் என அனைத்தையும் வைத்து வித்யாசாகர் ராவை அடைக்கச் சொன்னார் மோடி.   இத்தனை ஓட்டைகளையும் அடைத்தும், கப்பலில் தண்ணீர் ஏறுவதை தடுக்க முடியாமல், திமுக மற்றும் டிடிவி தினகரன் போடும் புதிய ஓட்டைகள் கப்பலை முழுகும் நிலைக்கு தள்ளியுள்ளது.

முதல்வர் பதவியை விட்டுத் தர மாட்டேன், பசையான துறைகளைத் தர மாட்டேன், உங்களைத் தவிர உங்கள் ஆதரவாளர்கள் யாருக்கும் கட்சிப் பதவி கூட தர மாட்டேன்.  உங்களோடு சேர்ந்து வரும் பாண்டியராஜனுக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த பள்ளிக் கல்வித் துறையைக் கூட தர மாட்டேன் என்று பன்னீர்செல்வம் வைத்த எந்த நிபந்தனைக்கும் செவி சாய்க்காமல், வேண்டுமென்றால் வா, இல்லையென்றால் போ.  நான் டெல்லியில் பேசிக் கொள்கிறேன் என்று வெளிப்படையாகவே கூறியும், ஆறு மாத காலம் தர்மயுத்தம் நடத்திய தர்மத்தின் தலைவன், சுயமரியாதை, சுயமில்லாத மரியாதை என்று அனைத்தையும் கழற்றி வைத்து விட்டு, கூச்சமில்லாமல் இணைந்தார்.
சரி. கேட்ட துறைகள்தான் கிடைக்கவில்லை.   கட்சியில் பொதுச் செயலாளராகவாவது ஆகலாம் என்று நினைத்தால், அதற்கும் ஆப்பு வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.   கட்சியின் ஒரே நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் ஆகையால் இனி அந்தப் பதவியில் வேறு யாருமே கிடையாது என்று எடப்பாடி கூறினார்.  அதையும் ஏற்றுக் கொண்டார் மானஸ்தர் பன்னீர்செல்வம்.   பொதுச் செயலாளர் பதவியை நிரந்தரமாக காலியாக வைத்து விட்டு, அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பு குழு என்று ஒரு குழுவை உருவாக்கி, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக பன்னீர் செல்வத்தை நியமித்து விட்டு, தன்னை இணை ஒருங்கிணைப்பாளராக நியமித்துக் கொண்டார் எடப்பாடி.  ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தால் மீண்டும் தர்மயுத்தம் நடத்தும் நிலைக்கு தள்ளப்படுவோமோ என்ற அச்சத்தில் அனைத்துக்கும் ஒப்புக் கொண்டார் பன்னீர்செல்வம்.  இருக்கும் நிதி இலாக்காவை பறித்து இலாக்கா இல்லாத துணை அமைச்சர் என்று அறிவித்தாலும் கூட பன்னீர்செல்வம் வாய் திறக்கப் போவதில்லை.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது, அது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே இணைப்பு.  இல்லையெனில் பேச்சுவார்த்தைக்கு இடமேயில்லை என்று உணர்ச்சி பூர்வமாக அறிவித்தார் பன்னீர்.   ஒரு நபர் விசாரணை ஆணையம் அறிவிக்கப்பட்ட பிறகும், பன்னீர் அணியைச் சேர்ந்த கேபி.முனுசாமி, ஆணையம் அறிவித்தது போதாது.  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூவிக் கொண்டிருந்தார்.   இடைத்தரகர் மும்பையிலிருந்து பறந்து வந்து கரங்களை கோர்த்து வைத்ததும், அத்தனையையும் மறந்தார்கள்.   விசாரணை ஆணையம் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகப் போகிறது.  இது வரை விசாரணை ஆணைய நீதிபதி யார் என்று அறிவிக்கப்படவில்லை.    விசாரணை ஆணையத்துக்கான நீதிபதி யார என்பதை அறிவித்து, அதற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, விசாரணை தொடங்காது என்பதை மூன்று முறை முதல்வராக இருந்த மானஸ்தன் நன்றாகவே அறிவார்.  ஆனால் அது பற்றி வாயைத் திறக்கிறாரா ?   திறக்க மாட்டார். சுயநலம் மற்றும் அயோக்கியத்தனத்தின் மறு உருவம் பன்னீர்செல்வம் என்பதை அதிமுகவில் உள்ள அனைவருமே நன்றாக அறிவார்கள்.
கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்து, ஒரே நாளில் முதல்வராக வேண்டுமென்ற சசிகலா துடித்துக் கொண்டிருந்தபோது, பன்னீர்செல்வம் சமாதியில் தியானம் செய்த பிறகு போராட்டத்தை தொடங்கினார்.   அப்போது சசிகலாவுக்கு எதிராகவும், பன்னீருக்கு ஆதரவாகவும் எழுந்த குரல்கள் நமக்கு மறந்திருக்காது.   அப்போதும் பன்னீர்செல்வம் ஒரு ஊழல் பேர்வழி, மணல் கொள்ளையர், சேகர் ரெட்டியின் கூட்டாளி என்பதையெல்லாம் மக்கள் அறிந்திராமல் இல்லை.   அறிந்துதான் இருந்தார்கள்.  ஆனால் அப்போது எழுந்த அந்த ஆதரவு அலை, சசிகலாவின் பேராசை மீது இருந்த கோபத்தினால்.
அதன் பிறகு சசிகலா சிறை சென்ற பிறகு, பன்னீருக்கு இருந்த ஆதரவு மறையத் தொடங்கியது.   ஜெயலலிதா மரணத்தில் விசாரணை என்ற கோரிக்கையை பன்னீர் வலியுறுத்திய போதெல்லாம், மக்கள் அந்த கோரிக்கையையும் அவர் தர்ம யுத்தத்தையும் ஒரு மவுனமான புன்னகையோடுதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஏன் விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்பதையும், ஜெயலலிதா இட்லியும் கெட்டிச் சட்னியும் சாப்பிட்டார் என்று தினந்தோறும் அமைச்சர்கள் புளுகிக் கொண்டிருந்தபோதும், உத்தமர் பன்னீர் அமைதியாகத்தான் இருந்தார் என்பது மக்களுக்கு தெரியாமல் இல்லை.   மீண்டும் முதல்வர் பதவிக்கான பேரத்தில் தன் தரப்பை வலுப்படுத்துவதற்காகத்தான் பன்னீர் இது போன்ற பொருளில்லாத கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார் என்பதையும் மக்கள் அறிந்துதான் இருந்தார்கள்.
எப்படியாவது தன் தரப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஜெ.தீபா என்ற கோமாளியோடு கூட்டணி சேரக் கூட பன்னீர் தயங்கவில்லை என்பதையும் மக்கள் பார்த்தார்கள்.    ஆனால் இணைப்பு விழாவுக்கு பிறகு பன்னீர்செல்வத்தின் நடத்தையைப் பார்த்த மக்கள், அவர் மீது அருவருப்பு கொள்ளத் தொடங்கினார்கள்.   இன்று பன்னீர்செல்வம் மக்கள் முன்னால் ஒரு ஆண் சசிகலாவாகத்தான் தோற்றம் அளிக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி பன்னீர் போல வெளிப்படையாக மக்களிடையே இயங்காதவர்.   கூவத்தூரில், சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை வாங்கியவர்.   ஆனால் அதிகாரத்தில் அமர்ந்ததும் அதன் சுவையை அணு அணுவாக ரசிப்பவர்.  முதலமைச்சர் பதவியில் அமர்ந்து என்னென்ன செய்தால், பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதை முழுமையாக அறியாமல்தான் ஆட்சிக்கு வந்தார்.  ஆனால் தன் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நெருக்கமான அதிகாரியை உளவுத்துறை தலைவர் பதவிக்கு அமர்த்தி, அவரது உதவியோடு அரசியல் சதுரங்கத்தில் அனைத்து காய்களையும் கச்சிதமாக நகர்த்துகிறார். நியாயம், நேர்மை, சட்டம், விதிகள், மரபுகள் என்று அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு, தனது பதவிக்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்க கற்றுக் கொண்டு விட்டார் எடப்பாடி.  இன்னமும் பதவிக்காலம் இருக்கும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியை டிஜிபியாக நியமித்தால் அவர், எடப்பாடிக்கு அடியாள் போல செயல்பட மாட்டார் என்பதை நன்கு உணர்ந்தே, குட்கா வியாபாரிகளிடம் 60 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கி ஆதாரங்களோடு அம்பலப்பட்ட ஒரு நபரை, அவர் ஓய்வு பெறும் அன்று இரவு 11.30 மணிக்கு டிஜிபியாக நியமித்து உத்தரவிட்டார்.   அதற்காகத்தான் குட்கா வியாபாரி டிகே.ராஜேந்திரனும், குடகில் விடுதியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை  மிரட்டுவதற்காக, தமிழகத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட காவல்துறையினரை அனுப்புகிறார்.   அவர்கள் மிரட்டலுக்கு டிடிவி எம்எல்ஏக்கள் மசியவில்லை.
சரி மீண்டும் இன்னொரு போலீஸ் டீமை அனுப்பலாம் என்று எடப்பாடி திட்டமிடுவதற்குள், கர்நாடக மாநில காவல்துறையில், தமிழக காவல்துறையினர் எங்களை மிரட்டுகிறார்கள், பாதுகாப்பு வேண்டும் என்று எழுத்துபூர்வமான புகார் அளிக்கிறார்கள்.  மண்ணைக் கவ்வினார் எடப்பாடி.
இது போல, முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்கான சிறு சிறு நுணுக்கங்களை கற்றுத் தேறி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.  தலைமைச் செயலாளர் பதவியை வாராது வந்த மாமணியாக காப்பாற்றிக் கொள்ள போராடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஒரு புறம், குட்கா வியாபாரி டிகே.ராஜேந்திரன் மறு புறம் ஊத, உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தி மேளம் வாசிக்க, எடப்பாடி பழனிச்சாமியின் கச்சேரி நன்றாகத்தான் நடந்து கொண்டிருந்தது.  டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து, முதல்வர் பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய பிறகும் இந்த கச்சேரி சிறப்பாகத்தான் நடந்து கொண்டிருந்தது.   எடப்பாடி கச்சேரியின் நிலைய வித்வான் வித்யாசாகர் ராவ் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கும் வரையில் நமது கச்சேரிக்கு எந்த விதத்திலும் ஆபத்து இல்லை என்றுதான் நம்பிக் கொண்டிருந்தார் பழனிச்சாமி.
ஆனால் நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்துக் கொண்டே இருந்தது.   டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுனரை சந்தித்த சில நாட்களிலேயே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் ஆளுநரை சந்தித்து சட்டப்பேரவையை கூட்ட வலியுறுத்தினர்.   நிலைய வித்வான் வித்யாசாகர் ராவ், மோடியின் ஏஜென்ட் அல்லவா ?  அத்தனை எளிதாக அசைந்து கொடுத்து விடுவாரா என்ன ?   அடுத்த கட்டமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் சென்று நிலைய வித்வானை சந்தித்தனர்.   அவர்களிடம், இது அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சினை என்றார் நிலைய வித்வான்.   ஒரு அருமையான, தந்திரமான வாதத்தை வைத்து விட்டோம்.  இது அவர்களின் உட்கட்சிப் பிரச்சினை என்று.  இனிமேல் அவர்களால் நமக்கு அழுத்தம் தரவே முடியாது என்று அகமகிழ்ந்து இருந்தார் ஆளுனர்.
ஆனால் இவர் கூறியதை யாருமே பொருட்படுத்தவில்லை.   உட்கட்சிப் பிரச்சினையாக இருக்கட்டும்.  சட்டப்பேரவையை கூட்டு என்ற குரல் வலுத்தது.   மறுபுறம், எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் என்ன செய்வார்கள் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருந்த டிடிவி தினகரன், அவருக்கு ஆதரவான எம்எல்ஏக்களை பாண்டிச்சேரியில் தங்க வைத்தார்.  பாண்டியிலிருந்து ஒரு ஜக்கைய்யன் என்ற ஒரு ஆட்டை ஓட்டிச் சென்றதை கண்டுகொண்ட டிடிவி, மீதம் உள்ள ஆடுகள் அனைத்தையும், கர்நாடகாவுக்கு ஓட்டிச் சென்றார்.   மந்தையிலிருந்து பிரிந்து வந்த ஆடான ஜக்கையன், போலீஸை மட்டும் அனுப்புங்க, கொறைஞ்சது ஆறு எம்எல்ஏவாவது வருவாங்க என்று சொல்லியதை நம்பி, தமிழகத்திலிருந்து மாறு வேடத்தில் ஒரு பெரும் போலீஸ் படையை அனுப்பி ஒரு ஆடு கூட உடன் வர மறுத்ததும், நிலைமை சிக்கலாகிறது என்பதை உணர்ந்தார் எடப்பாடி.  எப்படிப் பார்த்தாலும், தன்னிடம் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 117 எண்ணிக்கை இல்லை என்பது எடப்பாடிக்கு நன்றாக உறைத்தது.
டிடிவி அணியில் இருக்கும் ஆடுகளும் தன் பக்கம் வரப்போவதில்லை என்பதை உணர்ந்தார்.   தொடர்ந்து பல முறை டெல்லிக்கு சென்று,  மத்திய அமைச்சர்களை சந்தித்து, டிடிவி தினகரன் மீது புதிய வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனவும், சட்டப்பேரவையை கூட்டவே கூடாது என்றும் இவர்கள் வைத்த கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படவில்லை.  டிடிவி தினகரனும், இவர்கள் திட்டத்தை தெரிந்து, புதிய வழக்குகள் வந்தால் சந்திக்கத் தயார் என்றே வெளிப்படையாக அறிவித்தார். மத்திய அரசிடமிருந்து இனி பெரிய அளவில் எந்த உதவியும் கிடைக்காது என்பது புரிந்தது.   தன் கையால்தான் கர்ணம் போட வேண்டும் என்பதும் உறைத்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்து செய்த ஒரு அப்பட்டமான அயோக்கியத்தனம்தான், ஜுலை மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், தடை செய்யப்பட்ட பொருளான குட்காவை ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு எடுத்து வந்து, அதன் மூலம் அவை உரிமையை மீறி விட்டார்கள் என்ற உரிமை மீறல் நோட்டீஸ்.  தடை செய்யப்பட்ட பொருள் தமிழகமெங்கும் விற்கலாம்.  அந்த வியாபாரிகளிடமிருந்து 60 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற விஜயபாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சராக நீடிக்கலாம்.  60 லட்ச ரூபாய் பெற்ற டிகே.ராஜேந்திரனை ஓய்வு பெறும் நாளில் டிஜிபியாக நியமிக்கலாம்.  ஆனால், தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன என்று அதற்கு சான்றாக அந்த பொருட்களை சட்டப்பேரவையில் காட்டியதுதான் பெருங்குற்றமாம்.
21 திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.   இந்த நோட்டீஸை பார்த்ததும் திமுக பயந்து போகும்.  அவர்கள் உரிய விளக்கமாக எதை அளித்தாலும் அதை நிராகரித்து, 21 எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்யலாம்.  அதன் மூலம் அவையின் எண்ணிக்கை குறையும்.  இருக்கும் எம்எல்ஏக்களை வைத்து ஆட்சியை காப்பாற்றலாம் என்றே திட்டமிட்டார் எடப்பாடி.  ஆனால் திமுக சாமர்த்தியமாக நீதிமன்றத்தை அணுகியது.   உரிமைக்குழு நோட்டீஸின் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது நீதிமன்றம்.  அதிமுகவில் இருப்பது போல, திமுகவின் வழக்கறிஞர் பிரிவில் இருப்பவர்கள் வண்டு முருகன்கள் அல்ல.  தரமான வழக்கறிஞர்கள்.  உரிமைக்குழு நோட்டீஸின் மீது நடவடிக்கை எடுக்க தொடர்ந்து தடை பெற்றார்கள்.    எடப்பாடியின் இந்த தந்திரமும் தோற்றது.
அடுத்து எடப்பாடி ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டார்.  அது என்னவென்றால், டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வது என்பதே அது.    தர்மயுத்தம் நடத்திக் கொண்டு, அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, தனது 11 எம்எல்ஏக்களோடு சேர்ந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்த மானஸ்தன் பன்னீர் மீதும் அவர் ஆதரவு எம்எல்ஏக்கள் மீதும் கட்சித் தாவல் நடவடிக்கை இல்லையாம். ஆனால் இது வரை எந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பங்கேற்காத, அரசு கொறடாவின் உத்தரவை எந்த வகையிலும் மீறாத டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பாராம்.
இரண்டு வாரங்களைக் கடந்தும், நிலைய வித்வான் வித்யாசாகர் ராவ், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அரசியல் கட்சிகள் ஆளுனரை மோசமாக விமர்சிக்கக் கூடத் தொடங்கின.  எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆளுனர் தன் பதவிக்குரிய மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறினார்.    ஆனால்,  எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும்.  அதற்காக எத்தகைய கயவாளித்தனங்களையும் அரங்கேற்றலாம் தவறில்லை என்று இருக்கும் ஒரு கேடுகட்ட கட்சியான பிஜேபிக்கு இதெல்லாம் உறைக்குமா என்ன ?   அந்தக் கட்சி நியமித்த  ஆளுனர் அப்படி ரோசத்தோடு நடந்து கொள்வாரா என்ன ?
இப்படியே கச்சேரியை ஓட்டலாம் என்று எடப்பாடி இறுமாந்து இருந்த நிலையில்தான், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.   அந்த வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞர் புகழேந்தி, தனது மனுவில், நடக்கும் ஆட்சி தனது பெரும்பான்மையை இழந்து விட்டது.  19 எம்எல்ஏக்கள், முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுனரிடம் கடிதம் அளித்துள்ளனர்.  பெரும்பான்மையை இழந்த ஆட்சியை ஆளுனர் தொடர அனுமதிப்பது அரசியல் சாசனத்துக்கு புறம்பானது என்று தன் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை பட்டியலிடவே உயர்நீதிமன்ற பதிவகம் மறுத்தது.  ஆளுனரை எப்படி நீங்கள் எதிர் மனுதாரராக போடலாம் என்று ஒரு வாரம் இழுத்தடிக்கப்பட்டது. இறுதியாக விஷயம் தலைமை நீதிபதிக்கு கொண்டு செல்லப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.   அப்போது இந்த மனுவுக்கு எதிராக வாதிட்ட தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சாதாரண குடிமகனுக்கு இது போன்ற வழக்கை தொடர உரிமை கிடையாது.   எதிர்க்கட்சித் தலைவர்தான் தொடர முடியும்.  மேலும் ஆளுனருக்கு எந்த நீதிமன்றமும் உத்தரவிட முடியாது என்று வாதிட்டார்.  மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அரசியல் சட்டம் மீறப்படுகையில் அனைத்து குடிமகனுக்கும் நீதிமன்றத்தை அணுக உரிமை உள்ளது.   ஒரு ஆளுனர் கடமையை தவறாக செய்யும்போது மட்டும் நீதிமன்றம் தலையிடக் கூடாது.  ஆளுனர் தன் கடமையை செய்யத் தவறும்போதும் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று வாதிட்டார்.

ஆளுனர் கடமையை செய்யத் தவறுகையில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்ற விஷயத்தில் தலைமை நீதிபதி சரியென்று கருதினார்.   முதல்வருக்கு உங்கள் மெஜாரிட்டியை ஏன் நிரூபிக்கக் கூடாது என்று நோட்டீஸ் அனுப்ப அவர் எத்தனித்த நேரத்தில் குறுக்கிட்ட தலைமை வழக்கறிஞர், நான் இது குறித்து அரசோடு விவாதிக்க வேண்டும்.  வழக்கை ஆயுத பூஜை விடுமுறைகளுக்கு பிறகு தள்ளி வையுங்கள் என்று கூறினார்.  தலைமை நீதிபதி வழக்கை அக்டோபர் முதல் வாரத்துக்கு தள்ளி வைத்தார்
இந்த வழக்கு இப்படியே நிலுவையில் இருந்தது.   ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பி விட்டோம் என்று எடப்பாடி ஏகாந்தமாக இருந்த நேரத்தில்தான் அடுத்த இடி இறங்கியது.   ஆளுனருக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி உத்தரவிட வேண்டுமென்று திமுக வழக்கு தாக்கல் செய்தது.    இதை எடப்பாடி சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
இந்த வழக்கையும் நீதிமன்ற பதிவகம் பட்டியலிட மறுத்தது.   ஏற்கனவே நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கையில் மற்றொரு வழக்கை பட்டியலிட முடியாது.  மேலும் இதே பொருள் தொடர்பாக மற்றொரு வழக்கு தலைமை நீதிபதி முன்பு நிலுவையில் உள்ளது.  ஆகையால் இதை பட்டியலிட முடியாது என்று மறுத்தது.  திமுக சார்பாக மூத்த வழக்கறிஞர் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சென்றார்.
பதிவகம் எடுத்துரைக்கும் புகார்களை கூறினார்.   தலைமை நீதிபதி, என் முன்னால் வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த வழக்கை விசாரிக்கலாமா வேண்டாமா என்பதை தனி நீதிபதிதான் முடிவு செய்ய வேண்டும்.   இந்த வழக்கு குறித்து தனி நீதிபதி முடிவு செய்வார்.   வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுங்கள் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில்தான் வியாழனன்று வழக்கு நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. திமுக சார்பாக டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜரானார்.  வழக்கை தள்ளி வைக்க முனையும் வகையில் அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.  இதே போன்ற ஒரு வழக்கு தலைமை நீதிபதி முன்பு நிலுவையில் உள்ளது என்றார்.  அதை நீதிபதி நிராகரித்தார்.   நான் ஆளுனரிடம் இந்த வழக்கு குறித்து விவாதிக்க வேண்டும். அது வரை வழக்கை தள்ளி வையுங்கள் என்றார்.
உடனே கபில் சிபல், வழக்கை தள்ளி வைக்கும் இந்த குறுகிய காலத்துக்குள், எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து, அவசர அவசரமாக அவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ? எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய மாட்டோம்.  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாக 48 மணி நேரம் அவகாசம் கொடுப்போம் என்று அவர்களை கூறச் சொல்லுங்கள் என்றார்.
இந்த நேரத்தில் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த எம்எல்ஏ வெற்றிவேல் சார்பாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  அவருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிஎஸ்.ராமன், தங்களையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள கோரினார்.  அந்த கோரிக்கை ஏற்கப்பட்டது.   டிடிவி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாக அவரும் கூறவே, இன்று மாலைக்குள், எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யப் போகிறீர்களா இல்லையா, அவர்கள் மீதான நடவடிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்று கேட்டு நீதிமன்றத்தில் கூறுங்கள் என்று தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார்.
மதியம் 2.15 மணிக்கு வழக்கு மீண்டும் தொடங்கியது.   அப்போது பேசிய தலைமை வழக்கறிஞர், “சபாநாயகர், தன் நடவடிக்கைகளை இப்போதுதான் தொடங்கியிருக்கிறார். அந்த நடவடிக்கைகள் விதிகளின்படி எடுக்கப்படுகின்றன.   அந்த நடவடிக்கைகள் முடிந்தால்தான் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பது தெரியும்.   இந்த நிலையில், என்ன நடவடிக்கை எடுக்கப்படப் போகிறது, எப்படிப்பட்ட நடவடிக்கை என்று எதையுமே கூற முடியாத நிலையில் சபாநாயகர் உள்ளார்” என்று கூறினார்
தலைமை வழக்கறிஞரின் இந்த வாதம்தான் எடப்பாடியின் திட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.  தகுதிநீக்கம் செய்த பிறகு வாக்கெடுப்பை அவசர அவசரமாக நடத்த வேண்டும் என்பதே அவர்களது திட்டம் என்பது வெட்ட வெளிச்சமாகியது.
முதலமைச்சர் எடப்பாடி சார்பாக, மூத்த வழக்கரிஞர் சோமயாஜி ஆஜரானார்.  அவர் தனது வாதத்தின்போது, சபாநாயகர் ஒரு அரசியல் சாசன அதிகாரி.  அவரை பதிலளிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது. சபாநாயகரின் நடவடிக்கைகளை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது என்றார்.   உடனே நீதிபதி, “இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரமே இல்லை என்கிறீர்களா ? சபாநாயகர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று நான் கேட்கவில்லை. இதில் எப்போது உத்தரவு பிறப்பிப்பார் என்றுதான் நான் கேட்டேன்”  என்று கூறி விட்டு, சபாநாயகரின் நடவடிக்கைகள் குறித்து, வழக்கறிஞர்கள் தெரிவித்த முரண்பட்ட கருத்துகளை புரிந்து கொண்டார்.    அதனால்தான் இது விஷயமாக செப்டம்பர் 20 வரை சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டார்.
இது எடப்பாடி பழனிச்சாமி போட்ட திட்டங்களை தவிடுபொடியாக்கியது.    இப்படியொரு உத்தரவு வரும் என்பதை அவர்கள் எதிர்ப்பார்க்கவேயில்லை.   வெள்ளிக்கிழமை எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்.  திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சபை கூடும்.  நம்பக்கை வாக்கெடுப்பு நடக்கும்.   காவல்துறை அதிகாரிகளை அதிக அளவில் சட்டப்பேரவைக்குள் அழைத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி என்று அறிவிக்க வேண்டும் என்பதே அவர்கள் திட்டம்.
நீதிமன்றத்தின் நடவடிக்கையால் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.   பன்னீர்செல்வமோ, எனக்கு முதல்வர் பதவியை கொடுக்கவில்லை அல்லவா.   இந்த அரசு இருந்தால் என்ன… போனால் என்ன என்ற மனநிலையில் இருக்கிறார்.
இது குறித்து பேசிய ஒரு ஆங்கில ஊடகத்தில் பத்திரிக்கையாளர், “எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்ததே சசிகலாதான்.   ஆனால் கூவாத்தூரில் நடந்த விவகாரங்களை மக்கள் மறப்பதற்கு முன்பாகவே மிகப்பெரிய துரோகியாக மாறினார் எடப்பாடி.   பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக கிளம்பியதைக் கூட (பிஜேபியின் உதவியோடு) ஒரு வகையில் பொறுத்துக் கொள்ளலாம்.  ஆனால் எடப்பாடி பழனிச்சாமி செய்தது தன்னையும், தன் குடும்பத்தையும் வருமான வரித் துறை சோதனைகளில் இருந்து பாதுகாக்கும் ஒரு பச்சைத் துரோக நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடியும்.
பிஜேபி சொல்வதையெல்லாம் ஓபிஎஸ் கேட்க தயாராக இருந்தாரென்றால், எடப்பாடி பழனிச்சாமி, தரையில் தவழ்ந்து கொண்டிருந்தார்.    பிஜேபி சொன்னதையும் சொல்லாததையும் அவர்கள் மனம் குளிரும்படி செய்து காட்டினார்.   இத்தனை ஆண்டு காலம் அதிமுகவில் இருந்து மன்னார்குடி கூட்டத்தின் சக்தியை நன்றாகவே அறிந்தும் கூட பிஜேபி சொன்னபடி மன்னார்குடி கூட்டத்தை ஒதுக்கி வைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார்.  ஆனால் அவர் எடுத்த அனைத்து முடிவுகளும் பிஜேபியை பொறுத்தவரை ஏதாவதொரு சட்டச் சிக்கலையே சந்தித்ன.   ஓரடி முன்னே, ஈரடி பின்னே என்பதாக மாறியது எடப்பாடியின் நிலை.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமேயென்றால் எடப்பாடியால் ஒரே ஒரு எம்எல்ஏவைக் கூட தன் பக்கம் இழுக்க முடியாது.  ஏனெனில், மன்னார்குடி கூட்டத்தை எதிர்த்து, தங்கள் அரசியல் வாழ்வை சூன்யமாக்கிக் கொள்ள டிடிவி தினகரன் பக்கம் இருக்கும் எந்த எம்எல்ஏவும் தயாராக இல்லை.   கடந்த முறை நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடியால் வெற்றி பெற முடிந்ததற்கு சசிகலாவும் டிடிவி தினகரனுமே முக்கிய காரணம்.  ஆனால் இம்முறை அது அவ்வளவு எளிதாக இருக்காது.
எது எப்படி இருப்பினும், பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் தலைவர்கள் கிடையாது.   அதிமுகவில் முடிவெடுக்கும் இடத்தில் அவர்கள் என்றுமே இருந்தது கிடையாது.   எப்படி, எந்த முறையில் முடிவெடுக்கப் படுகிறது என்பது கூட அவர்களுக்கு தெரியாது.   அவர்கள் அரசியல் வாழ்க்கை முழுவதுமே, கட்சியின் அடிமட்டத் தொண்டனாக, சொன்னதை செய்யும் சேவகர்களாகவே இருந்து பழக்கப்பட்டு விட்டனர்.   இப்போது, அதிகார வெறி பிடித்த, சூதும் வாதும் நிறைந்த, பிஜேபியின் அடிமைகளாக தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு விட்டனர்.    இது வெளிப்படையாக அனைவருக்குமே தெரிகிறது.
மோடி மீண்டும் பிரதமராகலாம்.   பிஜேபி விரும்பும் வரை, எடப்பாடி முதலமைச்சராக இருக்கலாம்.  சில காலம் கழித்து பன்னீர்செல்வம் கூட முதல்வராகலாம்.   ஆனால் அவர்கள் பின்னால் இருக்கும் எம்எல்ஏக்களின் கதி என்ன ?  அவர்களுக்கு என்ன அரசியல் எதிர்காலம் ?   மீண்டும் ஒரு தேர்தலை அவர்கள் சந்தித்து வெற்றி பெற முடியுமா ?   ஒரு வேளை வழக்குகள் வந்தால் அவர்களால் அதை சந்திக்க முடியுமா ?  எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் பின்னால் செல்வதால் அவர்களுக்கு குறுகிய கால பலன்கள் கிடைக்கலாம்.   ஆனால் அவர்களின் எதிர்காலம் ஏற்கனவே இருண்டு விட்டது.
பிஜேபியின் கடுமையான நெருக்கடியால் இன்று சசிகலா குடும்பம் அடக்கி வாசிக்கலாம்.    ஆனால் 2019 தேர்தல் நெருங்குகையில் இவர்கள் இப்படியே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.   2019 தேர்தல் நெருங்குகையில், மோடி எடப்பாடியையும் பன்னீர்செல்வத்தையும் கழற்றி விட்டு விட்டு, டிடிவி தினகரனோடு கூட கை கோர்க்கலாம்.  இது நடக்கவே நடக்காது என்று யாராலும் சொல்ல முடியுமா ?  அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தர பகைவர்களும் கிடையாது என்பது முதுமொழி”
எடப்பாடிக்கு அடுத்த சிக்கலாக இப்போது உருவெடுத்திருப்பது யார் தெரியுமா ?  வியப்பாக இருக்கும்.  சபாநாயகர் தனபால்தான் அது.   கடந்த இரண்டு வாரங்களாகவே, தனபாலை இப்படி செய், அப்படி செய் என்று கடுமையான நெருக்கடியை அளித்து வருகிறார் எடப்பாடி.   எதற்கெடுத்தாலும் டெல்லியில் சொல்லி விட்டார்கள்.  எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.  நீங்கள் உடனே இதை செய்யுங்கள் என்று தனபாலுக்கு கடுமையான நெருக்கடியை அளித்து வருகிறார்.   அந்த நெருக்கடியின் வெளிப்பாடுதான் குட்கா எடுத்துப் போனதற்கு உரிமை மீறல் நோட்டீஸ் மற்றும் டிடிவி எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்.  இப்போது எடப்பாடி அளித்து வரும் நெருக்கடி உடனடியாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது மட்டுமே.  திமுக கலாட்டா செய்யும் என்றால், குட்கா கிங் பார்த்துக் கொள்வார்.  நீங்கள் தகுதி நீக்கம் செய்து விட்டு அவையைக் கூட்டுங்கள் என்கிறார் எடப்பாடி.
ஆனால் இப்படி செயல்பட தனபால் தயாராக இல்லை என்பதுதான் சிறப்பான செய்தி.  வழக்கம் போல இதர அடிமைகளைப் போன்ற ஒரு அடிமைதான் தனபால் என்று எடப்பாடி நினைத்து விட்டார்.  தனபால் அடிமைதான்.   ஆனால் அப்படி அடக்கியாள எடப்பாடி என்ன ஜெயலலிதாவா ?  புளிமூட்டைதானே ?  தனபால் எதற்காக எடப்பாடி பேச்சைக் கேட்க வேண்டும் ?
இதன் காரணமாகத்தான் நேற்றும் இன்றும், சபாநாயகர் தனபால், சட்ட வல்லுனர்களைக் கூட்டி தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறார்.   தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எப்படி வாதாடினாலும், இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வது எந்த பயனையும் அளிக்காது.  மேலும் உடனடியாக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தால் அது நீதிமன்றத்தால் நிச்சயம் தடை செய்யப்படும் என்பதை பட்வர்த்தனமாக சொல்லி விட்டார்.   இதன் காரணமாகத்தான் டிடிவி எம்எல்ஏக்கள் மீது கடந்த இரண்டு நாட்களாக நடவடிக்கை ஏதும் இல்லை.
தனபாலை எந்த நெருக்கடி அளித்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத கையறு நிலையில்தான் எடப்பாடி இருக்கிறார்.
வழக்கமாக தேர்தல் நெருங்கும் சமயத்தில், அதிகாரிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.   ஊழல் அதிகாரிகளும் சரி, நேர்மையான அதிகாரிகளும் சரி.  அடுத்து எந்த அரசு வரும்.  அதில் நாம் எந்த நிலையில் இருப்போம் என்பதை மிக மிக கவனமாக அலசி ஆராய்வார்கள்.    அவர்களின் கருத்து முக்கியமானது.
தலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளிடையே கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் விவாதம் என்ன தெரியுமா ?  இன்னும் எத்தனை நாள் ?
நீங்களே சொல்லுங்க 
எடப்பாடி அரசு  கவிழும் கப்பலா இல்லையா ?
நன்றியுடன்  சவுக்கு தளத்தில் இருந்து ,
=======================================================================================
ன்று,
செப்டம்பர்-16.

  • உலக ஓசோன் பாதுகாப்பு தினம்
  • மெக்சிகோ விடுதலை தினம்(1810)
  •  உலகின் முதலாவது இலவச நூலகம் மான்செஸ்டர் நகரில் அமைக்கப்பட்டது(1852)
  • மலேசியா நாடு உருவாக்கப்பட்ட தினம்(1963)
========================================================================================
  •  ஓசோன் 
சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களை தடுத்தி நிறுத்தி நம்மை பாதுகாப்பது தான் ஓசோன் படலம். இதன் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். அளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 


இதையடுத்து ஓசோனைக் காக்க 1987, செப்.16ல் கனடாவில் உள்ள மான்ட்ரியல் நகரில் 'மான்ட்ரியல் ஒப்பந்தம்' ஏற்பட்டது. இதனை குறிக்கும் விதமாக 1987ல் இருந்து செப்., 16ம் தேதி உலக ஓசோன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'சூரிய ஒளியின் கீழ் அனைவரது வாழ்க்கையையும் பாதுகாப்போம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 

ஓசோன் என்பது வாயுக்களால் ஆன படலமாக பூமியிலிருந்து 20 முதல் 60 கி.மீ., உயரம் வரை பரவி உள்ளது. 20லிருந்து 25கிமீ வரை அடர்த்தியாக பரவியுள்ளது. சூரிய ஒளி கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளது. இவை அகச்சிவப்பு கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். அகச்சிவப்பு கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக்கின்றன. 

இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதாக் கதிர்கள் பூமிக்கு வராமல் தடுப்பது தான் ஓசோன் படலத்தின் முக்கிய பணி. மற்ற பசுமை இல்ல வாயுக்களோடு சேர்ந்து புவி வெப்பமயமாதலை தடுக்கிறது. 
ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் குளோரோ புளூரோ கார்பன் என கண்டறியப்பட்டது. இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, ஏசி, ஏர் கூலர்கள், மற்றும் புகையிலை தொழிற்சாலைகள், தீயணைப்பு கருவி ஆகியவற்றில் குளிரூட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர். 

இவ்வாயு நூறு ஆண்டுகள் வரை நிலைத்திருக்கும். சூரிய கதிர்கள் இவ்வாயுவின் மீது படும்போது வேதியியல் மாற்றத்தால் ஒரு குளோரின் அணு மட்டும் பிரிந்து, ஓசோன் துகளை தாக்குகிறது. ஓசோனிலிருந்து ஒரு ஆக்ஸிஜன் அணுவை இழுத்துக் கொள்கிறது. 

இது குளோரின் மோனாக்ஸைடு துகளாக மாறுகிறது. இவ்வாறு ஓசோன் படலம் பாதிக்கிறது. 

இதனால் இந்த குளோரோ புளூரோ கார்பன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மாற்று தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். ஆனாலும் இன்றும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. மண்ணை சிறிது சிறிதாக செயலிழக்க செய்யும் பிளாஸ்டிக், பாலிதீன் ஆகியவற்றின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் ஓசோனை பாதுகாக்கலாம்.
ஓசோன் வாயுக்கள் அளவு குறைந்தால், பூமியின் வெப்பநிலை உயரும். துருவப்பகுதிகளில் பனிக்கட்டிகள் உருகி, கடல் நீர் மட்டம் உயரும். தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும். ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் வழியே பூமியை அடையும் புற ஊதாக்கதிர்கள், காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இக்கதிர்வீச்சு கண் நோய், பார்வை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தல், தோல் புற்று நோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.
==========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?