நவம்பர் புரட்சி

நவம்பர்-7.
தமிழகத்தில் இன்றைய புரட்சியாக கமல்ஹாசன் கட்சி ஆரம்பிப்பாரா என்பது இருக்கலாம்.
தமிழகத்தில் புரட்சி என்பதற்கு அர்த்தமே வேறுதான்.இங்கு புரட்சியை முன்னாள் வைத்திருக்கும் தலைவர்,தலைவி,தளபதி ,நடிகர்,திலகம்,கலைஞர் என்று பட்டங்கள் அதிகம்.
ஆனால் புரட்சி என்றால் நவம்பர் 7 ரஷ்ய புரட்சிதான் உண்மையான புரட்சிக்கு அர்த்தம்.அதன் பின்னணி,வரலாறை உங்கள் நினைவுக்கு தருகிறோம்.உண்மை புரட்சியை உணர்ந்து கொள்ளுங்கள்.
மனித குல வரலாற்றில் ஏராளமான புரட்சிகள் நடந்தேறி உள்ளன. அவை ஏற்படுத்திய அதிர்வுகளும் மகத்தானவை. பெர்களிஸ் யுகம், சாக்ரட்டீஸ் யுகம், பிளாட்டோ காலம், அரிஸ்டாட்டில் காலம் என கிரேக்க புரட்சி அறிவின் வாயிற்கதவுகளை திறந்து விட்டது.
கி.பி 9 முதல் 15ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் மத அடிப்படைவாதம் மேலோங்கி இருந்தது. போப் வைத்ததுதான் சட்டம். கத்தோலிக்க குருக்கள் இட்டதுதான் ஆணை, ப்ராடெஸ்டெண்ட், கத்தோலிக்கர் கால்விஸ்டுகள் என ஓயாத, குரூர மதச்சண்டைகள். 

ஓரளவு விஞ்ஞான கருத்தோட்டம் கொண்ட பாப்லோர் ப்யூரிட்டன் என்ற மதபிரிவினர் தோன்றினர். இதிலும் பெண்கள் கொஞ்சம் முற்போக்கு. 
மதவெறியர்கள் இவர்களை தேடித் தேடி, நெருப்பிலிட்டு கொன்றார்கள். எதையும் ஆராய்ந்து ஏற்பது, எதையும் கேள்விக்குள்ளாக்குவது என ஐரோப்பிய அறிவு யுகம் தோன்றியது.
பின்னர் தொழிற்புரட்சி, இங்கிலாந்திலும், இன்னும் பிற நாடுகளிலும் கைத்தொழிலில் ஈடுபட்டோர் புதுப்புது கருவிகளை கண்டுபிடித்தனர். தொழிலாளர் இயக்கம், ‘சார்ட்டிஸ்ட் இயக்கங்கள்’ தோன்றின. 

18ஆம் நூற்றாண்டில் அமெரிக்க புரட்சி நடந்தேறியது. பிரிட்டனை எதிர்த்து, குடியேற்ற நாடுகள் சுதந்திரப்போரில் ஈடுபட்டன. வாஷிங்டன் தலைமையில் ஆயுதபோர் தாமெஸ் பெயின், பிராங்களின், மாடிஸன் போன்ற ஜனநாயக மேதைகள் தோன்றினர்.
அனைவருக்கும் வாக்குரிமை எனும் 15ஆவது சட்டத்திருத்தம் பெரும் அளவில் உரையாடலை துவக்கியது. மனிதர்கள் அனைவரும் சமம் என்ற பிரகடனங்கள் பிறந்தன. 

அதே 18ஆம் நூற்றாண்டில் பிரம்மாண்ட அதிர்வாய் பிரஞ்சுப்புரட்சி தோன்றியது. வால்டர், ரூசோ, மனித உரிமை பிரகடனங்கள் செய்தனர். உழைக்கும் மக்கள் பாரீஸ் கம்யூன் அமைத்தார்கள். 
ஜனநாயகம், சகோதரத்துவம், சமத்துவம் எனும் முழக்கங்கள் எதிரொலித்தன. வரலாற்றில் இவை யாவும் மகத்தான புரட்சிகள்.
மானுட வாழ்வில் அழியாத காவியங்கள். ஆனால் இந்த புரட்சிகளின் கனவுகள், லட்சியங்கள் ஆங்காங்கே வரம்பிட்டு நின்று விட்டன. வரலாற்று வழி தடைகளை தாண்டி அவைகளால் முன்னேற இயலவில்லை. 

தாரணத்திற்கு அமெரிக்க புரட்சியும், பெயின் தாமசின் மனித உரிமை பிரகடனங்களும் 1952 வரை கறுப்பின மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. 
அங்கே சுதந்திரம் என்பது வெள்ளையர்களுக்கான சுதந்திரமாக வரம்பு கட்டி தேங்கி விட்டது.ஆனால் ஜவஹர்லால் நேரு கூறுவது போல் கிழக்கில் உதித்த நாகரிகம், வரலாற்றில் இதுவரை கண்டிராத மறுமலர்ச்சி அது. 

ஆம், பாரதி கூறிய யுக புரட்சிதான் அது.
வரலாற்றின் அனைத்து புரட்சிகளின் சிறப்புகளை வாரி அணைத்தபடி, 1917ல் தோழர் லெனினது போல்ஷ்விக் கட்சியின் வழி காட்டுதலில் நடந்தேறியது. 
ரஷ்ய பாட்டாளி வர்க்கம் நடத்திய மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி அது. மகத்தான இப்புரட்சியின் நூற்றாண்டு நிறைவில் நிற்கிறோம்.
அமெரிக்க எழுத்தாளர் ஜான் ரீடு கூறியது போல் இது ரஷ்ய தேசத்துக்கான புரட்சியாக மட்டும் தெரியவில்லை. 
இது கண்டங்கள் முழுவதும் பரவ துடிக்கும் புரட்சி.
லெனின், சமாதானம், உணவு, நிலம், மின்சாரம் குறித்து செய்த பிரகடனங்கள் புகழ் வாய்ந்தவை. 


யுத்தங்கள் உலகை மறு பங்கீடு செய்பவை. 
இவை மூலதன முதலாளிகளின் பேராசையின் விளைவு, நாம் எப்போதுமே யுத்தங்களை வெறுக்கிறோம். 
நீடித்த சமாதானம் நமது பாதை என்றார். 

முதலில் குடிமக்கள் அனைவருக்கும் உணவை உத்தரவாதப்படுத்துவது போல்ஷ்விக் கட்சியின் முதன்மை பணி என்றார்.தாமதமின்றி நிலப் பிரபுக்களின் நிலக்குவியலை கையகப்படுத்தி நிலமற்ற ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க உத்தரவிட்டார். 
லெனின் செல்வந்தர்களை விரட்டுகிறார் என உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவித்த, புரட்சி கமிட்டியில் கல்விக்கு பொறுப்பேற்ற தோழர் லூனா சார்ஸ்கி கூறினார். 
“ஆம், கிறிஸ்து, லேவாதேவிகாரர்களை ஆலயங்களிலிருந்து விரட்டினார். 
அதேபோல லெனின் அட்டூழியம் புரிந்த நிலபிரபுக்களை நிலங்களை விட்டு விரட்டினார்.
இப்போது கிறிஸ்து வாழ்ந்தால் போல்ஷ்விக் கட்சியில்தான் இணைவார்” என்றார். 

லெனின் ஆட்சியில் கல்விக்கு முதலிடம் வழங்கினார். லூனா சார்ஸ்கி-யிடம் விவாதித்தபோது, பள்ளிக்கூடம் ஆசிரியர், பாடமுறை என கற்பிக்கும் சூழலை விட கற்கும் சூழலான உணவு, உறக்கம், சுகாதாரம் என நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார். 

அறிவின் தடைகளை உடைக்கும் மானுட அறிவியல்சார் கல்விக் கொள்கை ஒன்றை வகுக்க வலியுறுத்தினார்.
ரஷ்யாவில் ஏராளமான தேவாலயங்கள் உள்ளன. அவைகளை கல்விக் கூடங்களாக்கும் யோசனைகளை அவர் முன்மொழிந்தார். 

இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம் என பாரதியின் கூற்று அங்கே நடந்தேறியது.
கல்வியும், உணவும் அரசின் பொறுப்பு என்பதனை தமிழக கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு, ரஷ்யாவில் நேரில் கண்டார். 
அவரது அழுத்தத்தில் காமராஜரால் கொண்டு வரப்பட்டது மதிய உணவுத்திட்டம்.
கல்வி சாலைகளை நேரில் சுற்றிப்பார்த்து எங்கேயும் மத கருத்துக்கள் இல்லை, அறிவியலுக்கு புறம்பில்லை, லாப நோக்கில்லை என நெஞ்சாரப் புகழ்ந்தார் தந்தை பெரியார்.

ஜார் ரஷ்யாவின் நாசமடைந்த, பொருளாதார சூழலில் ஆதரவற்ற குழந்தைகளை மக்கள் கமிசார்கள் கண்டறிந்து அவர்களை பள்ளியிலும், காப்பிடங்களிலும் சேர்க்க உத்தரவிட்டார். குழந்தைகள் பெயர் போதும், தந்தை பெயர் வேண்டாம் என உத்தரவிட்டார்.

யுத்தம், வறுமை, ஆண் ஆதிக்கம் என யாவுமாக சேர்ந்து பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுத்தியது. ‘சபிக்கப்பட்ட’ அப்பெண்களிடம் லெனின் நேரில் உரையாடினார். 
கல்வி, வேலை, திருமணவாழ்க்கை என சமூக கௌரவத்தை அவர்களுக்கு அளிக்க உத்தரவிட்டார்.

வரலாறு இதற்கு முன் கண்டிராத சமூக நலத்திட்டம், சேம நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, சிறப்பானது யாவும் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய்வாய்ப்பட்டோர்களுக்கு கிடைக்க உத்தரவிட்டார்.
1933ல் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ப்ராங்ளின் ரூஸ்வெல்ட் தேசிய தொழிலாளர் உறவு சட்டம் கொண்டு வந்து, தொழிலாளர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்த போது, இத்தகைய சட்டத்தின் பிறப்பிடமே சோவியத் ரஷ்யா என புகழ்ந்துரைத்தார்.

இன்று உலகில் காணும், சமூக நலத்திட்டங்கள், சேமநலத்திட்டங்களின் ஆரம்பமே நவம்பர் புரட்சிதான். 

அனைத்திற்கும் மேலாக, அன்றைய ரஷ்யா, தேசிய இனங்களின் சிறைக் கூடமாகவே காட்சி தந்தது. 

லெனின் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டிசைவு ரஷ்யா என்றார். அவரவர் தாய் மொழியில் கல்வி என்றார். அனைத்து தேசிய இனமும் சமம் என்று சட்டம் இயற்றினார்.
தேசிய இனப்பிரச்சனை தலைதூக்கி பெரும் நெருக்கடி சூழ்ந்த போது, ஒடுக்கப்படும் தேசிய இனம், தன் போக்கை தானே தீர்மானித்து கொள்ள, பிரிந்து சென்று தனி நாடு காணும் தேசிய இன சுயநிர்ணய கோட்பாட்டை வகுத்தளித்தார். 

லிதுவேனியா, லாத்வியா, எஸ்தோனியா பிரிந்து சென்று தனி நாடு அமைய உதவினார். வரலாற்றில் முன், பின் அறியாத மாபெரும் அரசியல் உரிமை அது. மாபெரும் அரசியல் கலாச்சாரம் இது. 
நவம்பர் புரட்சிதான் இதனை சாத்தியப்படுத்தியது. 

ஐரோப்பாவின் மனித உரிமை பிரகடனங்களிலேயே இதுதான் மாபெரும் சிறப்பு என ஐரோப்பா முழுவதும் கொண்டாடியது.இன்று புவிசார் வரைபடத்தில் சோவியத் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் அரசியலும், விடுதலைசார் உணர்வுகளும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
சோவியத் புரட்சி எல்லைக்கப்பால் சாதித்ததும் ஏராளம். மார்க்சிய மூலவர்களின் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை அது முன் எடுத்தது. 

இந்தியா உள்ளிட்ட உலக விடுதலை இயக்கங்களை சமரசமின்றி ஆதரித்து நின்றது. ஒடுக்கப்பட்ட ஏழை கறுப்பின நாடுகளுக்கு செய்த உதவி உலக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பாசிசத்தை வீழ்த்த அது கொடுத்த வரலாற்று விலை !
இவை யாவும் மகத்தான மானுட பெருமை அல்லவா? 

தாகூர் ஓர்முறை ரஷ்யாவை சுற்றிப்பார்த்து திரும்பியவுடன் ரஷ்யாவில் நீங்கள் கண்டது என்ன என வினவியபோது, மானுடத்தின் அடுத்த தலைமுறைக்கான திசையைக் கண்டேன் என்றாராம்.

ஆம், நவம்பர் புரட்சி, மனித குலத்தின் யுக யுகங்களுக்கான திசை. இதற்கு அழிவில்லை, மரணமில்லை.
இது என்றும் வாழும் வாழ்வியல்..! மங்காத நவம்பர் புரட்சியின் கனவுகள் நீடூழி வாழ்க…!
                                                                                                                         மு.வீரபாண்டியன்  
======================================================================================
ன்று,
நவம்பர்-06.
  • தஜிகிஸ்தான் அரசியலமைப்பு தினம்(1994)
  • டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டது(1844)
  • எட்வின் ஆம்ஸ்ட்ராங், எஃப்.எம்., ஒளிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்(1935)
  • புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1944)
  • போலந்தில் 2வது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது(1918)
======================================================================================
1936 - எஃப்எம் ரேடியோ பயன்பாட்டுக்கு வந்ததற்குக் காரணமான ஆய்வறிக்கையை, எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங், நியூயார்க்கிலுள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரேடியோ என்ஜினியர்ஸ் என்ற அமைப்பில் சமர்ப்பித்தார். 

ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஏஎம் ரேடியோ வீச்சுப் பண்பேற்றம் (Amplitude Modulation) என்ற முறையில் செயல்பட்டு வந்தது. இதன் ஒளிபரப்பில், இடி முதலானவற்றால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பது குறித்து ஏராளமானவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டனர். 

1922இல் ஜான் ரென்ஷா கார்சன் என்பவர் தன் ஆய்வறிக்கையில், எஃப்எம் குறித்த தன் ஆய்வுகளைக் குறிப்பிட்டு, அது ஏஎம் ஒலிபரப்பைவிட எவ்விதத்திலும் மேம்பட்டதாக இருக்காது என்று குறிப்பிட்டிருந்தார். 

அவர் ஆய்வில் பயன்படுத்தியது குறுகிய அலை எஃப்எம் ஆகும். ஆனாலும், எஃப்எம் ஒலிபரப்பில் கார்சன் அலைவரிசை விதி முக்கியமான ஒன்றாக இன்றும் விளங்குகிறது. எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங், அகண்ட அலை அதிர்வெண் பண்பேற்றம் (Frequency Modulation) என்ற எஃப்எம் ஒலிபரப்பு முறையைக் கண்டுபிடித்தார். 

1933இலேயே இதை இவர் கண்டுபிடித்துக் காப்புரிமை பெற்றுவிட்டாலும், இது நடைமுறையில் சாத்திய மற்றது என்ற கருத்து நிலவி வந்தது. 

மே 1934 முதல் அக்டோபர் 1935 வரை, எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 85ஆவது மாடியிலிருந்து இவர் மேற்கொண்ட ஆய்வுகளில், 130 கிமீ தூரத்துக்கு எஃப்எம் ஒலிபரப்பு சென்றடைந்தது. 

ஆனாலும், இவருக்கு நிதி உதவி செய்து வந்த ரேடியோ கார்ப்பரேசன் ஆஃப் அமெரிக்கா நிறுவனம், தொலைக்காட்சிக்கு முன்னுரிமை அளித்து, இவரது ஆய்வுகளை நிறுத்தச் சொல்லிவிட்டது. 
(1940இல் இதே நிறுவனம் இவரது எஃப்எம் காப்புரிமைக்கு 10 லட்சம் டாலர் தருவதாகக் கேட்டதும், அதை ஆர்ம்ஸ்ட்ராங் மறுத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.) 

இந்த நிலையிலேயே, இன்று சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கை எஃப்எம் ரேடியோவின் மேம்பட்ட தன்மையை விளக்கி, பயன்பாட்டைத் துவக்கி வைத்தது. 

இதைத் தொடர்ந்து 1937 ஜனவரி 1இலேயே தொடர் எஃப்எம் ரேடியோ ஒலிபரப்பு துவங்கிவிட்டது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?