பொங்கி வந்த செம்புனல்,வென்றது !

விவசாயிகளின் பேரணியால்  அரசுகள்  அடிபணியுமா என்பதைவிட,அடிபணிந்துதான் ஆக வேண்டும்  விவசாயம்தான் நாட்டின் நாடி நரம்பு என்பதை மீண்டும், மீண்டும் மத்திய மாநில அரசுகளுக்கு புரிய வைக்கிறது மகாராஷ்டிரா விவசாயிகள் எழுச்சி .

கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராஷ்டிராவில் இடதுசாரி முன்னணி ஆதரவு விவசாயிகள் சுமார் 30,000த்துக்கும் மேற்பட்டவர்கள் நாசிக்கில் துவங்கி நடைபயணமாக இன்று அதிகாலை மும்பையில் உள்ள ஆசாத் மைதானம் வந்து சேர்ந்தனர். 

இன்று அவர்கள் பல குழுக்களாக பிரிந்து மாநில முதல்வர் தேவேந்திர பத்னவிஸ் மற்றும் மாநில அமைச்சர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் காலில் நடந்து, ரோடு மற்றும் ஆற்று ஓரங்களில் தங்கியிருந்து, வெட்ட வெளியில் படுத்து உறங்கி, டிரம்களை இசைத்து, பாட்டுக்கள் பாடி, ஆண்கள், பெண்கள் என்று மகாராஷ்டிரா அரசின் கதவைத் தட்ட வந்து சேர்ந்தனர்.

நுற்றுக்கணக்கில் ஆரம்பித்த பேரணி மும்பை வந்து சேர்ந்தபோது 50ஆயிரமாகி பிரமிக்க வைத்தது.அரசுகளை அதிர வைத்துள்ளது.
ஆனால் இந்திய ஊடகங்கள் இப்பேரணியை வழக்கம் போல் அரசுக்கு ஆதரவாகக் கண்டு கொள்ளவில்லை.

100 பேர்களுடன் துவங்கிய பேரணி வரும் வழிகளில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ளவர்கள் இணைந்து கொள்ள பிரமாண்டமாகியதை கண்டும் ஊடகங்கள் சரியான அளவில் செய்தியாக இதை மக்களிடம் சேர்க்கவில்லை.

தமிழகத்தில் திரளாத விவசாயிகள் கூட்டம், மகாராஷ்டிராவில் கூடி உள்ளது. 

விவசாயிகள் அனைவரும் ஒற்றுமையுடன் கைகோர்த்துள்ளனர். மகாராஷ்டிராவின் சிபிஎம் விவசாயிகள் அமைப்பு இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்து இருந்தது என்றாலும், நடப்பாண்டில் மகாராஷ்டிரா அரசு பார்த்திராத ஒரு பிரம்மாண்ட பேரணியாக அமைந்துள்ளது. 
பேரணிக்கு என்னதான் காரணம்?
காய்ந்து வறண்ட விவசாய நிலங்கள், கடன் தள்ளுபடி செய்வதில் தாமதம், பருத்தி விவசாயத்துக்கு பெயர் பெற்ற மகாராஷ்டிரா மாநிலத்தில் புதியவித புழு தாக்குதலால் குறைந்த பருத்தி உற்பத்தி. விதர்பா மற்றும் மரத்வாடா பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன இப்படி குறைகள் நீள்கிறது.


பழங்குடியினர் தங்களது நிலங்களை சமுதாய நிலங்களாக மாற்றி தரக்கோரி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், பாஜக அரசு செய்து கொடுக்கவில்லை. நடப்பாண்டில் சரியான பருவமழை இல்லாமல் விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 16 சதவீதம் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கரும்பு அதிகளவில் விளையும் மகாராஷ்டிராவில் நடப்பாண்டிலும் அதிகளவில் விளைச்சல் இருந்துள்ளது. ஆனால், மாநிலத்தில் மொத்தமுள்ள 20 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் வெறும் 6 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே கரும்பு விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் இதுசார்ந்த தொழிலுக்கு என்று ரூ. 23,621 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும், இந்த தொகை பட்ஜெட்டின் மொத்த ஒதுக்கீட்டுத் தொகையில் வெறும் 6.5சதவீதம்தான் என்ற குற்றச்சாட்டை விவசாயிகள் வைத்துள்ளனர்.


2016-2017ஆம் ஆண்டில் நல்ல பருவ மழை பெய்து விவசாய விளைச்சலும் நன்றாக இருந்துள்ளது. விவசாய அறுவடை மட்டும் 22.5 சதவீதம் அதிகரித்து, மொத்த வளர்ச்சி 10 சதவீதமாக இருந்துள்ளது. ஆனால், அந்த ஆண்டில் பண மதிப்பிழப்பு பெரிய அளவில் விவசாயிகளையும் பாதித்தது.

ஆனால், நிலைமை 2017-2018ஆம் ஆண்டில் ஒரே மாதிரி இல்லை. பருவ மழை பாதித்தது. விவசாய பொருளாதார வளர்ச்சி 8.3 சதவீதமாக சுருங்கியது. இதன் தாக்கம் ஒட்டு மொத்த வளர்ச்சியையும் பாதித்தது. ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாகக் குறைந்தது. இது விவசாயிகளுக்கு மன அழுத்தம் மட்டுமின்றி பொருளாதார சிக்கலையும் ஏற்படுத்தியது.

2017ஆம் ஆண்டுக்கான கரிப் பருவத்தில் 15 மில்லியன் ஹெக்டேரில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டைவிட சற்று அதிகம். பருப்பு வகைகள், தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி ஆகியவை பயிரிடப்பட்டு இவற்றின் உற்பத்தி 3,3, 1, 0.1% ஆக இருந்தது. ஆனால், கரும்பு மட்டும் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 43 சதவீதம் அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்தது. இதேபோல் ராபி பருவத்திலும் உற்பத்தி குறைந்துள்ளது.

இதனால் சிறுகுறு விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்கள் தொடர்ந்து குறைந்து, உற்பத்தியும் குறைந்து தேவையை பூர்த்தி செய்யாமல் இருப்பது விலை உயர்வுக்கும் காரணமாகிறது. ஆனால், விவசாயிகளுக்கு இதனால் எந்தப் பலனும் கிடைப்பது இல்லை. தரகர்கள் மட்டுமே லாபம் அடைகின்றனர். பதுக்கி வைத்து விற்பனைக்கு கொண்டு வருவது தரகர்களின் வர்த்தகமாக உள்ளது.



கடந்தாண்டு ஜீன் மாதம் விவசாயிகளின் ரூ. 34,022 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் பத்னவிஸ் தெரிவித்து இருந்தார். ஆனால், அறிவித்து ஏறக்குறைய ஓராண்டு ஆகப் போகிறது. இன்னும் அனைத்து விவசாயிகளின் துயரங்கள் துடைக்கப்படவில்லை.

4.64 மில்லியன் விவசாயிகளின் ரூ. 23.102 கோடி கடனை ரத்து செய்ய வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், வங்கிகள் 3.57 மில்லியன் விவசாயிகளுக்கு ரூ. 13,732 கோடி கடனை மட்டுமே தள்ளுபடி செய்தது. இந்த வகையில் பார்க்கும்போது ஒரு விவசாயிக்கு ரூ. 40,000 மட்டுமே தள்ளுபடி ஆகியுள்ளது. ஆனால், மாநில அரசு கணக்கின்படி ஒரு விவசாயிக்கு ரூ. 1.5 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

பயிர் காப்பீடு இன்சூரன்ஸ், லாபகரமான வருமானம், இரட்டை வருமானம், இழப்பீடு, பூச்சி கொல்லிகளுக்கு நிவாரணம் என்று அனைத்து வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டன. ஆனால், இவற்றில் எதையும் நிறைவேற்றவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கார்ப்பரேட்களுக்கு 14 லட்சம் கோடிகள் வரி விலக்கு ,வரி தள்ளுபடி ,வரி குறைப்பு என்று அள்ளி  வழங்கும் பாஜக அரசு அவர்களுக்கும், உணவைத்தரும் விவசாயிகளை கண்டுகொள்ளாதது மட்டுமல்ல ம்,மேன்மேலும் விவசாயிகளை நசுக்கும் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதும் கொந்தளிப்பை உண்டாக்கிவருகிறது.

அதை இந்திய மக்களும் புரிந்து வைத்துள்ளதைத்தான் இப்பேரணி வரும் வழிகளில் பொது மக்கள் அவர்களுக்கு உணவு,குடிநீர் வழங்கி உற்சாகப்படுத்தியதை உணர்த்துகிறது.


இதுதான் தற்போதைய போராட்டமாக பெரிய அளவில் வெடித்துள்ளது. 
தமிழகத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்து ஒன்று சேராத நிலையில், மகாராஷ்டிரா விவசாயிகள் ஒன்று சேர்ந்து இருப்பது அந்த மாநில அரசை திக்குமுக்காடச் செய்துள்ளது. இந்தப் பேரணி மற்ற மாநில அரசுகளையும் சிந்திக்க வைத்துள்ளது என்றே கூறலாம். அன்று டெல்லி சென்று போராட்டம் செய்த தமிழக விவசாயிகள் விரட்டி அடிக்கப்பட்டனர். 
ஆனால், இன்றைய நிலைமை மகாராஷ்டிராவில் அவ்வாறு இல்லை. 

திரண்ட கூட்டத்தால் மத்திய அரசுக்கும் தலைவலி ஏற்பட்டுள்ளது. 
விவசாயம் நாட்டின் நாடி நரம்பு என்பதை மத்திய, மாநில அரசுகள் உணரும் வரைஅல்லது அதை விவசாயிகள் அவர்களை உணரவைக்கும் வரை இப்போராட்டங்கள் தொடரத்தான் செய்யும்.
இமயமலைக்கு ஆன்மிக அரசியல்வாதிகள் செல்வதை எட்டுக்கால செய்தியாக வெளியிடும் பத்திரிகைகள் மக்களின் வாழ்வாதார பிரசனைகளை கண்டுகொள்வதில்லை என்பதுதான் இன்றைய தலையாய கவலை.
அந்த பத்திரிக்கைகளை நடத்துவது பெரும் பணக்காரர்கள்,கார்ப்பரேட்கள் அதனால் இந்த நிலை என்றாலும் அதில் பணி  புரிபவர்கள் தாங்களும் விவசாயிகள் பிள்ளைகள்தாம் ,தொழிலாளர்கள்தாம் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

 அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலச்செயலாளர் அஜித்நாவ்லே தலைமையில் 20 பேர் கொண்ட விவசாய பிரதிநிதிகள் முதல்வருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் விவசாயிகள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அப்போது விவசாயிகள் வழக்கம்போல் வாய் மொழி உத்திரவாதத்தை ஏற்க முடியாது. ஏற்கனவே இதுபோன்று விவசாயிகளுக்கு அளித்த எந்த உறுதிமொழியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. ஆகவே எழுத்துபூர்வமாக இந்த இந்த கோரிக்கைகளை ஏற்கிறோம் என கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர்.
நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் முதல்வர் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துபூர்வமாக உறுதியளித்தார். மேலும் 180 கி.மீட்டர் நடைபயணமாக வந்திருக்கும் விவசாயிகளை அவர் அவர் ஊருக்கு திரும்ப அரசு தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

விவசாயிகள் சொந்த ஊர் திரும்ப இன்று இரவு இரு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அரசே அறிவித்தது. மேலும் ஏராளமான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. உடனே 15 பேருந்துகள் போராட்டக்களத்திற்கு வந்தன.
மகாராஷ்டிரா விவசாயிகள் செங்கொடி ஏந்தி வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தை துவங்கி வைத்து இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கின்றனர். 
இதனை தொடர்ந்து விவசாயிகளின் முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. அதே போல் கொடுத்த உறுதி மொழிப்படி கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் இதைவிட  பன்மடங்கு விவசாயிகளோடு நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என அறிவித்தனர்.
அதுவும் அளவு மாற்றம் குணமாற்றத்தை ஏற்படுத்தும் என்ற மார்க்சிய விஞ்ஞானத்தை மீண்டும் ஒரு முறை நிருபித்திருக்கின்றனர். நம் விவசாயிகள்..
======================================================================================
ன்று,
மார்ச்-13.

  • ஆக்ஸிஜனை கண்டுபிடித்த ஜோசப் பிரீஸ்ட்லி பிறந்த தினம்(1733)
  • வில்லியம் ஹேர்ச்செல், யுரேனஸ் கோளை கண்டுபிடித்தார்(1781)
  • மங்கோலியா, சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது(1921)

ஜோசப் பிரீஸ்ட்லி. 
1733ல் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் நகரத்தில் ஓர் ஏழை நெசவாளியின் மகனாகப் பிறந்து, ஏழு வயதிலேயே தந்தையை இழந்து அத்தையின் அரவணைப்பில் படித்து, பட்டம் பெற்றுப் பாதிரியாராக ஆனார். பல மொழிகளிலும் சிறந்த புலமை பெற்றாலும் தட்டுத் தடுமாறித்தான் பேசுவார்.
ஒரு சிறு தேவாலயம் அவரைப் பாதிரியாராக ஏற்றுக் கொண்டது. அது வருமானமில்லாத தேவாலயம். வாரத்திற்கு ஒரு பவுண்டு தான் வருமானம். அதனால் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியையும் ஏற்றுச் செய்து வந்தார் பிரீஸ்ட்லி.
அந்த தேவாலயத்துக்குப் பக்கத்தில் மதுபானம் தயாரிக்கும் ஆலை ஒன்று இருந்தது. அங்கிருந்து எப்போதும் வீசும் துர்நாற்றம் பிரீஸ்ட்லியின் மூக்கைத் துளைத்தது. அந்த துர்நாற்றம் சாராயம் காய்ச்சும் தொட்டியி லிருந்து கிளம்பும் ஆவியி லிருந்து தான் வருகிறது என்று அனுமானித்த அவர், ஆலைக்குள் சென்று அந்த ஆவியை ஒரு பெரிய கண்ணாடிப் புட்டியில் பிடித்துக் கொள்ள அனுமதி கோரினார். ஆலை நிர்வாகியும் அதற்கு அனுமதியளித்தார்.
அதன்படி, அந்த ஆவியைக் கண்ணாடி புட்டியொன்றில் பிடித்துக்கொண்டு திரும்பிய பிரீஸ்ட்லி அதை ஆராய்ந்தார். புட்டியின் மூடியை லேசாகத் திறந்து அந்த ஆவி வெளி யேறும் போது அதற்கு மேல், எரியும் விறகை நீட்டினார். உடனே அது அணைந்து விட்டது. அதன் மூலம் தீயை அணைக்கும் சக்தி அந்த ஆவிக்கு இருப்பதைத் தெரிந்து கொண்டார்.
அந்த ஆவியைப் பற்றி பிரபல விஞ்ஞானி களின் நூல்களில் ஏதாவது சொல்லப் பட்டுள்ளதா என்று தேடினார். ஒன்றும் தெரிய வில்லை. அந்த ஆவியைத் தனியாகத் தயாரிக்க முடியுமா என்றும் ஆராய்ந்தார். அதில் வெற்றியும் பெற்றார்.
அவர் கண்டுபிடித்த அந்த வாயு தான் "கரியமில வாயு.' அத்துடன் வேறு சில வாயுக்களையும் சேர்த்து ஆராய்ந்த பிரீஸ்ட்லி பிராண வாயுவையும் கண்டுபிடித்தார்.
======================================================================================
நாங்கள் தான் இரண்டு.
அதிக குற்றவியல் (கிரிமினல்) வழக்குகளில் சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பெற்று பெருமையை சேர்த்துள்ளது .

மக்களின் பிரதிநிதிகளாக இருந்துகொண்டு பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்படுகிறது.

 இந்நிலையில், முதல் முறையாக மத்திய அரசு எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

அஸ்வனிக் குமார் என்ற வழக்குரைஞர் "குற்றவியல் வழக்குகளில் தொடர்பு கொண்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் அரசியலில் தலைகாட்ட முடியாதபடி தடைவிதிக்கக் வேண்டும்எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது 13,500 க்கு அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன.அவர்கள் வெற்றி பெற்றதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை." என்று  உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். 
 இதில் பெரும்பான்மையினர் பாஜக வைச் சார்ந்தவர்கள் என்பதும் பெருமைக்குரியதே. 

 இந்த மனுவை2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிடப்பட்டது.
அதனையொட்டியே இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
======================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?