பனைமரத்துல வவ்வாலா?

அதிமுகவுக்கு சவாலா??

இவை இன்று மக்களவை முன் அதிமுகவினர் நடத்த்தும் ஆர்ப்பாட்டத்த்தில் எழுப்பப்படாத குரல்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில், திரும்ப திரும்ப மத்திய அரசு கண்டுகொள்ளாமல் ஒரே பதிலை கூறியும் அதிமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் அமளி நடத்தியப் பின்னரும் காவிரி மேலாண்மை வாரியத்தைக்காணோம்.


அதைவிட கொடுமை பாஜக அரசை காப்பாற்றத்தான் அதிமுக இந்த ஆர்ப்பாட்டங்களைச் செய்கிறது என்று இந்தியா முழுக்க அதிமுகவுக்கு பகிரங்க கெட்டபெயர் வேறு .எதிர்க்கட்சிகள் அனைத்தும் அதிமுக உறுப்பினர்களைப்பார்த்து பாஜக அடிமைகள் எனக் கிண்டல் செய்வதும் நடக்கிறது.
தமிழகத்தில் இருந்த அடிமைகள் என்ற அவப்பெயர் தற்போது இந்தியா முழுக்க அதிமுகவினருக்கு கிடைத்ததுதான் பலன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கிய நாளில் இருந்து. அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் அ.தி.மு.க.,வின் ஆர்ப்பாட்டமும், அமளியும், அர்த்தமற்றதாக  கேலிக்குரியதாக மாறி வருகிறது. மேலாண்மை வாரியம் தான் பிரச்னை என்றால், மத்திய அரசுக்கு, வெவ்வேறு வழி களில் அழுத்தம் தரவோ அது தொடர்பாக அரசியல் நகர்வுகளை  செய்யவோ, டில்லியில் திறனுள்ள அதிமுக தலைவர் ஒருவரும் இல்லை.


அதற்கு காரணம் பாஜக,மோடி கட்டுப்பாட்டில் அதிமுக இருப்பதுதான் காரணம்.பாஜக தலைவர்கள் சொல்தான் தற்போது அம்மாவின் அருள்வாக்கு .வரைமுறையில்லாமல் அவர்கள் குவித்துள்ள முறைகேடான சொத்துக்கள்தான் அதிமுகவினரின் முதுகெலும்பை முறித்துப் போட்டுள்ளது. 

'அமளி, ஆர்ப்பாட்டம் நடத்துவது என, துவங்கிய இடத்திலேயே, அ.தி.மு.க., நிற்கிறதே. அடுத்த கட்டமாக என்ன செய்வதாக உத்தேசம்' என, நிருபர்கள், கேள்வி கேட்டு, சலித்துப் போய் விட்டனர். விதவிதமாக எத்தனை கேள்விகளைக் கேட்டாலும், அத்தனைக்கும் தம்பி துரை கூறும் ஒரே பதில், 'கோரிக்கையை ஏற்கும் வரை, சபையை நடத்த விடமாட்டோம்' என்பது மட்டுமே.


தொடர்ந்து, 17 நாட்களாக அமளி செய்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும்,அ.தி.மு.க.,வை யாரும் பொருட்படுத்த வில்லை. ஒரு மரியாதைக்காக வாவது, அரசு தரப்பில் இருந்து யாராவது அழைத்துப் பேசினரா என்றால், அதுவும் இல்லை.

'அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் அமளி, மறைமுகமாக, பா.ஜ.,வுக்கு உதவு கிறதே' என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.தங்கள் மீதான அனைவரது பார்வையும், ஒரு மாதிரியாக விழுவதை, அ.தி.மு.க., - எம்.பி.,க்களில் பலரும் உணர்ந்தே உள்ளனர். 50 எம்.பி.,க்கள் இருந்தாலும், ஆர்ப்பாட் டத்திற்கு, 10 முதல், 15 எம்.பி.,க்களே வருகின்றனர்.சபைக்குள் அமளியில் பங்கேற்கும் பல, எம்.பி.,க்கள், தம்பிதுரை தினந்தோறும் நடத்தும் புல்வெளி, 'பிரஸ் மீட்'டிற்கும், வருவதில்லை. அ.தி.மு.க., - ராஜ்யசபா, எம்.பி.,க்களும், தம்பிதுரை பேட்டியை புறக்கணித்துவிட்டு, மையமண்டபத்திலேயே அமர்ந்துவிடுகின்றனர். 
ஆர்ப்பாட்டம், அமளி என, ஊடகங்களில் செய்திகள் பரபரத்தாலும், அ.தி.மு.க.,வின் தற்போதைய நிலை, தெளிவும் இல்லாமல், முடிவும் தெரியாமல் உள்ளது என்பதே உண்மை என்கின்றன, டில்லி அரசியல் வட்டாரங்கள்.  

அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் சிலர் கூறுகையில் :-
ஆர்ப்பாட்டம் துவக்கத்தில், உணர்வுப்பூர்வமாக இருந்த ஆர்ப்பாட்டம், தற்போது, 'கழுதை தேய்ந்து, கட்டெறும்பாகிய நிலையில் உள்ளது. 
மற்ற கட்சிகள் ஒட்டு மொத்தமாக இணைந்து மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த போது ஆர்ப்பாட்டம் என்று தனித்து நின்றது மோடியை காப்பாற்ற என்ற அளவில் இந்தியா முழுக்க அதிமுகவுக்கு கெட்டப்பெயரை கொடுத்துள்ளது.
திமுக உறுப்பினர்களுடன் இணைந்து காவிரி மேலாண்மை வாரியத்துக்கு போராடியிருக்கலாம்.ஆந்திராவில் தெலுங்கு தேசமும்.எதிர்க்கட்சி ஒய் எஸ் ஆர்.காங்கிரசும் இணைந்து இல்லாவிட்டாலும் ஒரே திசையில் போராடுகிறது. ஆனால் அதிமுகதான் திமுகவுடன் இணைத்தும்,ஒரே வழியில் தனித்து போராடாமல் மக்கள்  மத்தியில்  அம்பலமாகி நிற்க வேண்டிய நிலை. 
தற்போது நடக்கும் அமளியாலும், ஆர்ப்பாட்டத்தாலும், எந்த பயனும் இல்லை என்பதே உண்மை.
இருப்பினும், அமளி தொடர வேண்டுமென்பதே, சென்னையில் இருந்து வந்த உத்தரவு. ஊடகங்களின் கேள்விகளுக்கு, ஒரே பதிலை துணை சபாநாயகர் சொல்கிறார். 
அவருக்கு வெட்கமாக இல்லையோ எப்படியோ, எங்களுக்கு மற்ற கட்சி உறுப்பினர்கள் பார்க்கும் பார்வை கேவலமாக இருப்பதால் சங்கடமாக உள்ளது. 
அதனால் தான் ஆர்வம் குறைந்து, அவருடன் செல்லாமல் போராட்டத்துக்கும் செல்லாமல் தவிர்த்து வருகிறோம்.49 பேர்கள் இருக்கும் கட்சியில் வெறும் 10,15 பேர்கள் மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறோம்."
என்று  கூறினர்.
===================================================================================================
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
சென்னை மற்றும் தமிழகத்தில்  பல இடங்களில் செயல்பட்டு வந்த பிரபல நகைக்கடை  கனிஷ்க்.
  இந்த கனிஷ்க் நகை கடையின் அதிபர்கள், போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, 14 வங்கிகளில், 824.15 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக, டில்லி சி.பி.ஐ.,யில், புகார் அளிக்கப்பட்டு உள்ளது. 
வருமானத்தையும், விற்பனையையும் பூதாகரமாக்கி, இவ்வளவு பெரிய மோசடியை, அவர்கள் அரங்கேற்றியது, விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இது தொடர்பாக, பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான கூட்டமைப்பு அளித்துள்ள புகாரில், இந்த நகைக்கடை நிறுவனம், 20 கோடி ரூபாய்க்கு மேல், கலால் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் கூறியுள்ளது. இதுபோன்ற வங்கி கடன் ஊழல்கள், அடுத்தடுத்து வெளியாவதால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர், பூபேஷ்குமார் ஜெயின். இவரது மனைவி, நீடா. இருவரும், கே.ஜி.பி.எல்., எனப்படும், 'கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் பெயரில், காஞ்சிபுரம் மாவட்டம், நடராஜபுரம், புக்கதுறை கிராமத்தில், நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வந்தனர்.சென்னை உட்பட, நாடு முழுவதும் உள்ள, பிரபல ஜுவல்லரிகளுக்கு, விதவிதமான டிசைன்களில் நகை தயாரித்து, சப்ளை செய்தும் வந்தனர்.

கனிஷ்க் என்ற பெயரில், தங்கம் மற்றும் வைர நகை விற்பனை செய்யும் கடையையும் நடத்தி வந்தனர்.
இவர்களின் தொழில் கூட்டாளிகளாக, சென்னை, யானைக் கவுனியைச் சேர்ந்த தேஜாராஜ், அஜய்குமார், சுமித் உள்ளிட்டோர் செயல்பட்டு வந்தனர். 
பூபேஷ்குமாரும், அவரது மனைவியும், கூட்டாளிகளுடன் சேர்ந்து, 2008ல், சென்னையில் உள்ள, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில், தங்கள் நிறுவனம், 50 கோடி ரூபாய் லாபம் ஈட்டிஇருப்பதாக, போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, 10 கோடி ரூபாய் கடன் வாங்கினர்.
பின், அடுத்தடுத்த ஆண்டு களில், பல கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருப்பதாக, போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, எஸ்.பி.ஐ., வங்கியில் மட்டும், 240.46 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். 
தொடர்ந்து, பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி என, 14 வங்கிகளில், 824.15 கோடி ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்து உள்ளனர்.
மோசடி பணத்தில், பூபேஷ் குமார், நீடா மற்றும் அவர்களது கூட்டாளிகள், சென்னை, என்.எஸ்.சி., போஸ் சாலை, மும்பை, ஐதராபாத், கொச்சி மற்றும் துபாயில், தங்கம் மற்றும் வைர நகை கடைகளை திறந்துள்ளனர். 
நகை இருப்பு அதிகமாக உள்ளது; ஆண்டு லாபமும் பல கோடி ரூபாய் ஈட்டிஉள்ளோம்' , என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தே 824.15 கோடி ரூபாயை கடனாக பெற்று உள்ளனர். 
முதலீடு செய்த அளவுக்கு வருமானம் இல்லாததால்,வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்துள்ளனர்.இதனால், அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை, வங்கிகள் ஆராய துவங்கின.


 நகை தொழிற்சாலையில் உள்ள, இருப்பு விபரங்களையும்சேகரித்தன. 
அப்போது, பூபேஷ்குமார், நீடா மற்றும் அவர்களது கூட்டாளிகள், ஆண்டு வருமானம் மற்றும் இருப்பு விபரம் குறித்து போலியாக கணக்கு காட்டி, மோசடியில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து, பூபேஷ்குமார் உள்ளிட்டோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க, எஸ்.பி.ஐ., வங்கி தலைமையில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 

அவர்கள், கடன் தொகையை வசூலிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டினர்.

இதற்கிடையில், 2017ல், பூபேஷ்குமார், 20 கோடி ரூபாய் கலால் வரி செலுத்தாத வழக்கில் சிக்கினார். அதனால், நகை தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்ட, கனிஷ்க் ஜுவல்லரி மற்றும் தி.நகரில் இருந்த, 'கார்ப்பரேட்' அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவானார்.மொரீஷியஸில் தற்போது தங்கியுள்ளார்.

அதனால், பூபேஷ்குமார் மற்றும் அவரது மனைவி, கூட்டாளிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க, எஸ்.பி.ஐ., வங்கி தலைமையிலான கூட்டமைப்பு, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்தில், நேற்று ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளது. 
அதனடிப்படையில், சி.பி.ஐ., விசாரணையை துவக்கி உள்ளது.
நாடு முழுவதும், கனிஷ்க் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில், சி.பி.ஐ., நேற்றிரவு அதிரடி சோதனை நடத்தியது.
ஏற்கனவே, நிரவ் மோடி, விக்ரம் கோத்தாரி போன்றவர்கள் செய்த முறைகேடுகளால், வங்கி ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. 
அதைத் தொடர்ந்து, இந்த விவகாரமும் வெடித்துள்ளதால், முழு அளவில் விசாரணை நடத்த வேண்டிய நெருக்கடி, மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாபாராமதேவை எதற்காக போலி சாமியார் என்கிறோம் .மக்கள் உபயோக மருந்து பொருட்களைத்தயாரிக்கும் இவற்றின் பதஞ்சசலி தயாரிப்பு பொருள் இது.
இதை வாங்கியது இம்மாதம்(மார்ச்)10 மத்தேதி.
அனால் இது ஏப்ரல் மாதம்தான் தயாரிக்கவே படுகிறது.
ஏப்ரல் -2018இல் தயாரித்து ஒரு மாதம் முன்னதாகவே மார்ச்-2018 இல் கடைகளில் விற்க நடமாடும் சாமிகளால் மட்டுமே முடியும் .
என்ன பாபா ராமதேவ் மகிமை.
==============================================================================================
ன்று,
மார்ச்-22.
  • உலக தண்ணீர் தினம்
  • லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை முதன் முதலாக காண்பித்தனர்(1895)
  • அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது(1945)
  • ஆர்தர் ஷாவ்லொவ் மற்றும் சார்லஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தை பெற்றனர்(1960)
  • இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்-ஐ அறிமுகம் செய்தது(1993)


‘உலக தண்ணீர்தினம்’. 

1993ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா சபையின்47ஆவது கூட்டத்தொடரில் உலக தண்ணீர் தினம்அறிவிக்கப்பட்டது. 

இன்றைக்கும் உலகில் அனைவருக்கும் இயற்கை பொதுவாக கொடுத்த ஒரு கொடை தண்ணீர். மழை நீரை தேக்கிவைத்து நீர்நிலைகளை சரியாக பராமரிக்காமல் விட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது.
இயற்கை வளங்களை பாதுகாப்பதை மறந்து அதற்கு மாறாக பல்வேறு செயல்களில் மனித இனம்ஈடுபடுவதாலும் தான் பற்றாக்குறை ஏற்படுகின்றது.

முந்தைய காலத்தில் கோடைக் காலம் துவங்கிவிட்டால் வீட்டுக்கு வெளியே பானையோ அல்லதுஒரு பாத்திரமோ வைத்து அதில் நீர் நிரப்பி வைப்பார்கள். வழியில் செல்வோ‌ர் அந்த நீரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்‌வார்‌க‌ள். இன்றைக்கும் வாசலில் குடங்கள் இருக்கின்றன. 

ஆனால் அவை நீர்நிரம்பி அல்ல, நீர் நிரப்ப. எப்போதாவது வரும் குழாய்நீருக்கும், குடிநீர் லாரிக்காகவும் காத்திருக்கும் குடங்கள் அவை.எனவேதான் நீர்நிலைகளைக் காப்பதும், நீர்வளத்தைப் பெருக்குவதும்தான் உலக தண்ணீர் தினத்தின் நோக்கம். நாம் வாழும் பூமியின் நிலப்பரப்பானது வெறும் 30 சதவிகிதம்மட்டும்தான். மீதம் இருக்கும் 70 சதவிகிதம் நீர்ப்பரப்புத்தான். 


இருந்தாலும் அதில் 97.5 சதவிகிதம் உப்பு நீர்தான். இதில் நல்லநீர் வெறும் 2.5 சதவிகிதம்தான்.
அதில் பனிப்பாறைகளாகவும் பனித்தரைகளாகவும் உள்ளது போக மீதி நன்னீர்ப்பரப்பு0.26 சதவிகிதம்தான். 
எனவே 30 சதவிகிதம் நிலப்பரப்பில் வசிக்கும்மக்களுக்கு 0.26 சதவிகிதம் நீர்தான் உயிராதாரம்.இந்த நீரைத்தான் மனிதனின் அனைத்துத் தேவைகளுக்கும், விவசாயம் உள்ளிட்ட பல்வேறுவகைகளுக்கும் நாம் பயன்படுத்திக்கொள்கிறோம். கூடுதல் தண்ணீர்த் தேவைக்கு மழையையும் ஆறுகளையும் ஏரிகளையும்தான் நம்பி இருக்கிறோம். 

அவையும் இன்றைக்கு சரியான மழையில்லாததாலும் அரசு நீர் நிலைகளை பராமரிக்காமல் விட்டதாலும் தண்ணீர் தேங்க வழியின்றி தூர்ந்துபோயுள்ளது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் கடந்த 2016ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவக்காற்றும், தென்மேற்குப் பருவக்காற்றும் ஏமாற்றியது. 

ஆனால் அதற்கு முந்தைய 2015-ஆம் ஆண்டில் பெய்த மழையை வரலாறு காணாத மழை என அறிஞர்கள் கூறினார்கள். 
ஆனால் பெய்தமழைநீரை முழுவதுமாகத் தேக்கி வைக்க முடியாமல் போனாலும், பாதியளவுகூட அப்போது தேக்கி வைக்க வழியில்லை என்பதே உண்மை. ஏன்என்றால் தண்ணீர் சூழ்ந்த பகுதிகள் அனைத்தும் நீர்நிலைகளை அழித்துக் கட்டப்பட்ட குடியிருப்புகளே.

 இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் குடிநீர்ப்பஞ்சம் ஏற்படும் எனச்சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான ஆறுகள் இன்று வறண்ட நிலையிலும், கழிவுநீர் பாய்ந்து நீர் மாசு ஏற்படும் வகையிலும் தான் உள்ளன.தொடர்ந்து நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும், பிளாஸ்டிக் கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று நீரியல் நிபுணர்களும் தன்னார்வலர்களும் கூறியும்போராடியும் வருகின்றனர்.

மேலும் அரசு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கினாலும் அதை முறையாக பயன்படுத்தாததால் நீர்நிலைகள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. 

இன்றைக்கும் கிராமப்புறங்களில் வாழும் இந்திய மக்களுக்கு சுத்தமான குடிநீர் என்பது அதிகம் கிடைப்பதில்லை என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகம் இன்றும் தண்ணீருக்காக அருகில் உள்ள கேரளா,கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை நம்பியே உள்ளது. 

மேலும் தமிழகத்தில்உருவாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கும்தாமிரபரணி ஆற்று நீரை அந்நிய குளிர்பானநிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்திடம் அந்த நீரை அருகில் உள்ள பிற மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு சரியான திட்டமிடல் இல்லை. உலக தண்ணீர் தினம் என்பது, கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் தண்ணீரைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது.

தண்ணீர் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரம் என்பதை ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ளவேண்டும், தமிழ்நாட்டில்வரும் கோடைக்காலம் வரலாறு காணாத வறட்சியாக இருக்கும் என்ற எச்சரிக்கையோடு தண்ணீரைஇந்த தண்ணீர் தினத்தில் சேமித்திட அரசும் மக்களும் நினைக்கவேண்டும்.
======================================================================================

ரத யாத்திரையை தமிழ் நாட்டுக்குள் விடாமல் தடுக்க காரணம் தெரிகிறதா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?