மூடநம்பிக்கையை விட மோசமானது

 மோடி நம்பிக்கை…! 
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலாண்மை வாரியம் அமையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். 
நம்பிக்கை இருப்பது தவறில்லை. 
ஆனால், மூட நம்பிக்கை மோசமானது. அதைவிட மோசமானது மோடி மீது வைக்கும் நம்பிக்கை. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு குறித்து பத்தாண்டுகளுக்கு மேலாக ஆறஅமர நிதானமாக விசாரித்து கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. 
காவிரி நடுவர் மன்றம் ஏற்கெனவே கூறியுள்ள இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை மத்திய அரசு ஆறு வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும், இதற்கு காலக் கெடுவை நீட்டிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. 
இதற்கான செயல்திட்டத்தை (scheme) உருவாக்குவதற்குத்தான் ஆறுவார அவகாசம் தரப்பட்டது.
ஆனால், இந்த ஆறு வார காலத்தில் மத்திய அரசு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் எங்கேயும் கூறப்படவில்லை என்று பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து, மத்திய அமைச்சர் ஒருவர் குண்டை போட்டார். இன்னொருவர் மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமில்லை என்று வேரில் வெந்நீர் ஊற்றினார்.
அப்போதெல்லாம், எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான மாநில அதிமுக அரசு சுதாரித்துக் கொள்ளவில்லை.நிச்சயம் மோடி அரசு தமிழகத்தை வஞ்சிக்கப் போகிறது என்பது வெளிப்படையாக பள்ளிக்குழந்தைக்குகூட தெரிந்தது. 
ஆனால், எடப்பாடி வகையறா கெடு முடியட்டும் என்று கூறிக் கொண்டே இருந்தனர். 
மோடி நிச்சயம் நல்லது செய்வார் என்று ஜெபம் செய்து ண்டேயிருந்தனர்.மாநில அதிமுக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியதோடு, பிரதமரை சந்தித்து இது தொடர்பாக முறையிடுவது என்றும் முடிவு செய்தது. 
ஆனால், தமிழக அனைத்துக் கட்சிக் குழுவை சந்திக்க நேரம் ஒதுக்கக்கூட பிரதமர் மோடி மறுத்துவிட்டார். அப்போதும் கூட, அதிமுக அரசுக்கு ரோஷம் வரவில்லை.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவிக்க வைத்து, தேர்தல் நடத்தை விதி நடைமுறைக்கு வந்து விட்டதால் மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று குறுக்குச் சால் ஓட்டவும் மத்திய அரசு தரப்பில் முயற்சிக்கப்பட்டது. 
ஆனால், தேர்தல் நடத்தை விதி உச்சநீதிமன்றத் தீர்ப்பை கட்டுப்படுத்தாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்திவிட்டது.

மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனை நாடாளுமன்றம் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால் மோடி அரசுக்கு கடுமையான சிக்கல் ஏற்பட்டிருக்கும். 
பிஜேபியின் உத்தரவுப்படி நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு காவிரி பிரச்சனையை அதிமுக பயன்படுத்திக் கொண்டது. 
தினமும் கூச்சல் ரகளையில் ஈடுபட்டு, நாடாளுமன்றத்தை முடக்கினார்கள்.
காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்ததோடு இதைப் பயன்படுத்தி மோடி அரசுக்கு முட்டுக் கொடுத்ததை காய்ந்து கிடக்கும் காவிரி ஒருபோதும் மன்னிக்காது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்பட பல கட்சிகளும் வலியுறுத்தியபோதும், ஆந்திராவுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாம் எப்படி ஆதரிப்பது என்று நழுவிக் கொண்டது அதிமுக.அப்படியென்றால், காவிரி பிரச்சனை உட்பட பல்வேறு விசயங்களில் தமிழகத்திற்கு மோடி அரசு நம்பிக்கை துரோகம் இழைத்துள்ளது. 
அதைக் காரணம் காட்டி அதிமுகவே நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரலாமே என்று கேட்கப்பட்டதற்கு, அதிமுக தரப்பில் கெடு முடியட்டும் என்றார்கள். 
கெடுவும் முடிந்துவிட்டது.ஆனால் இவர்கள் எதுவும் செய்யவில்லை. மோடி அரசுக்கெதிராக ஏதாவது செய்தால் தங்களது அரசின் கெடு முடிந்துவிடும் என்று நடுங்கிக் கிடக்கிறார்கள்.
கெடு முடிவதற்கு முதல் நாள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், அதிமுக எம்.பிக்கள் அனைவரும் கூட்டாக தற்கொலை செய்து கொள்வோம் என்று உணர்ச்சிவசப்பட்டார். 
காவிரி உள்ளிட்ட பிரச்சனைகளால் தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை என்பது நடந்து கொண்டேதான் இருக்கிறது. 
அப்போதெல்லாம், இது தற்கொலை அல்ல, காதல் தோல்வி என்று ஏகடியம் பேசியவர்கள்தான் அதிமுகவினர். இப்போது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக
இவர்கள் கூறுவது யாரை ஏமாற்ற? 

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கூட திராணியில்லாதவர்கள் பேசும் வீர வசனங்களால் யாருக்கு லாபம்?
தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் திருக் கூட்டத்தால் ஓடோடி சென்று உச்சநீதி
மன்றத்தில் உடனடியாக தடை பெற முடிகிறது. 
குக்கரை  பறிப்பதில் காட்டிய ஆர்வத்தில் லட்சத்தில் ஒரு பங்கையாவது தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி, இந்தியாவுக்கே சோறு போட்ட காவிரி பாசனப்பகுதியை காப்பாற்ற காட்ட முடிந்ததா இவர்களால்?
ஸ்கீம் (scheme) என்றால் என்ன? என்று மத்திய அரசு விளக்கம் கேட்பதாக கூறப்படுவது பிரச்சனையை மீண்டும் ஊறுகாய் பானைக்குள் போட்டு ஊற வைப்பதற்குத்தான் பயன்படும்.
நல்லவேளை ஸ்கீம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி நிறுவனத்திடமும் என்சைக்ளோபீடியா நிறுவனத்திடமும் கேட்டிருப்பதாகக் கூட மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. 
அப்போதும் கூட , பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை போன்றவர்கள் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பஜனைப் பாடிக் கொண்டே இருப்பார்கள்.
நெடுவாசல், காவிரி பாசனப்பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம்,ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம், கூடங்குளம் அணு உலைப் பூங்கா என வந்து கொண்டே இருந்தால், தமிழகத்தில் தாமரை அல்ல, ஆகாயத்தாமரை கூட வளராது.
தமிழக மக்களை எந்தளவுக்கு இழிவாக நினைத்தால் கெடு முடிகிற வரை காத்திருந்துவிட்டு, விளக்கம் கேட்கிறோம் என விளக்கெண்ணெய்யில் வெண்டைக்காய் குழம்புவைக்க முயலும் மத்திய அரசு? முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்களது ஆட்சியை கடப்பாரை வைத்து நெம்பினால் கூட தகர்க்க முடியாது என வீர வசனம் பேசுகிறார். 
தங்களுக்கு பின்னால் வலுவானஒரு கடப்பாரைக் கும்பல் இருப்பதால்தான் அவர்களால் இப்படி பேச முடிகிறது.
குட்கா ஊழல் பிரச்சனையை எழுப்பிய திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை, தினகரன் அணிக்கு சென்ற எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை போன்றவை செல்லாது
என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டால், எடப்பாடி அரசை நீக்க கடப்பாரை அல்ல, ஒரு குண்டூசியே போதும்.

ஆளுநரின் அருட்கடாட்சம் காரணமாகவே எடப்பாடி அரசு நாற்காலியில் தொங்கிக் கொண்டிருக்கிறது. தங்களுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள தமிழகம் வஞ்சிக்கப்படுவது குறித்து கொஞ்சம்கூட அவர்களுக்கு கவலை யில்லை. அம்மாவின் அரசு என்று வாய்க்கூசாமல் கூறுகிறார்கள். 
காவிரிக்காக ஜெயலலிதா தலைமையிலான அரசு நடத்திய போராட்டத்திற்கும் இவர்கள் விசுவாசமாக இல்லை. இந்த லட்சணத்தில் மிழகத்திற்கு நல்ல பல திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தம்முடைய அரசின் கையாலாகாத நிலையை புளிபோட்டு விளக்கிக் கூறுகிறார்.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு விசயத்திலும் இப்படித்தான் கடைசி வரை நம்ப வைத்து கழுத்தறுத்தது மோடி அரசு. அப்போதும் இவர்களால் எதுவும் செய்ய முடிய வில்லை. 
கடைசியில் நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்த பயிற்சி மையம் அமைக்கிறோம் என்று சமாளிக்கிறார்கள்.
உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம், ஜிஎஸ்டி வரியில் உரிய பங்கு தர மறுப்பு, இந்தி வடமொழி திணிப்பு,கீழடி ஆய்வு முடக்கம், இயற்கை பேரிடர் நிவாரண நிதிமறுப்பு, விவசாயிகள் பயிர்க் காப்பீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மறுப்பு என தமிழகத்திற்கு துரோகத்தின் சுவையை மட்டுமே மோடி அரசு பரிசளித்து வருகிறது. 
கடந்த நான்குஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு 97,000 கோடி ரூபாய் தந்திருக்க வேண்டும். ஆனால், தந்ததோ வெறும் 3,000 கோடி ரூபாய் மட்டும்தான்.

தமிழக விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் தொகையாக ரூ. 3, ரூ. 5 என்று காசோலை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். காவிரிப் பிரச்சனையில் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றாலும்,காவிரிபாசன விவசாயிகளின் ஈமச்சடங்கிற்கு மோடி அரசு உதவும் என்று கூட கூறுவார்கள்.
 அதற்கும் அதிமுகவினர் புல்லரித்து போர்வையை எடுத்து போர்த்திக்கொள்வார்கள். இப்போதும் கூட தமிழக பாஜகவினர் தங்களது சவுண்டு சர்வீஸ் சேவையை நிறுத்தவில்லை. மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்… படும்… படும் என்று மூன்று முறை கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்கிறார் தமிழிசை. 
நடவடிக்கையை  நோக்கி மத்திய அரசு சென்று கொண்டேயிருக்கிறது என்று சாதிக்கிறார் கலவரப் புகழ் எச்.ராஜா.
தமிழகத்தில் குறுக்கும் நெடுக்குமாக விநாயகர், முருகன் பெயரில் இரண்டு யாத்திரையை விட்டால், மக்கள் காவிரியை தலைமுழுகி விடுவார்கள் என்பது அவர் கணக்கு.
தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் கர்நாடக தேர்தல் முடிந்தவுடன் அங்கே பாஜக ஆட்சி வந்துவிடும். 
அதன்பிறகு தமிழகத்தை நோக்கி
காவிரி குபுகுபு என்று வந்து கொண்டேயிருக்கும் என பஞ்சு மிட்டாய் தருகிறார். 

கர்நாடக பாஜகவினர் தமிழர்கள் குடிக்க தண்ணீர் கேட்டால் கூட தரமாட்டார்கள். அமித்ஷாவால் ஊழல் பேர்வழி என்றழைக்கப்பட்ட எடியூரப்பா தமிழக எல்லையான பிலிகுண்டுலு வரை வந்து காவிரியை கண்காணித்து விட்டு போனவர்.
மோடி பாஜக செய்யாததை கர்நாடக பாஜக செய்யப் போவதாக பொன்னார் அவிழ்த்து
விடுகிறார். மொத்தத்தில் தமிழக மக்களை மோடி அரசு வழக்கம் போல அப்பட்டமாக வஞ்சித்துவிட்டது. மத்திய அரசின் துரோகத்தை மட்டுமல்ல, அவர்களுக்கு துணை நிற்கும்மாநில அதிமுக அரசின் துரோகத்தையும் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். 
ஸ்கீம் என்றால் என்ன வென்று மோடிஅரசு விளக்கம் கேட்கட்டும். 
ஆனால் துரோகம் என்றால் பாஜக அதிமுகதான் என்று அகராதியில் இடம் பெறும்.
                                                                                                                                  -மதுக்கூர் இராமலிங்கம் ,
நன்றி:தீக்கதிர்.
நான் தமிழன் என்ற முறையில் கட்சி சார்பில் வராமல் தனி மனிதனாக வந்துள்ளேன்: ஸ்டெர்லைட் போராட்டம். தூத்துக்குடியில் கமல்ஹாசன் ஆவேச பேச்சு
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரத்தில் 49வது நாளாக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
இந்த போராட்டத்தில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் போராட்டத்தில் பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தார்.அப்போது 
ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
அப்போது கமல் பேசுகையில், எனக்கு கட்சி இருந்தாலும் தனி மனிதனாக வந்துள்ளேன்.
நான் இங்கு வந்துள்ளது தனிமனிதனாக. எனது பெயர் கமல்ஹாசன். நான் நடிகன் என்பதை விட நான் மனிதன். நான் தமிழன். இப்போது உங்களுககு நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த அநீதி வியாபார பேராசையின் ஒரு கோரமுகம். 
எனக்கு பல்வேறு செய்திகள் வருகின்றன. அவர்களிடம் பேசவில்லை. நேராக இங்கு வந்துவிட்டேன். நீங்கள் காசு கேட்பதாக சிலர் என்னிடம் கூறுகின்றனர். ஆனால், இவர்கள் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுக்க தயாராக உள்ளனர். 
இதையும் நான் கேள்விப்பட்டது தான்.பிள்ளைக்கறி சாப்பிட்டால் தான் வியாபாரம் நடக்க வேண்டும் என்றால், அதுநடக்கக்கூடாது. ஆலைக்கு எதிராக எனது குரல் எங்கெங்கு கேட்குமா அங்கெல்லாம் சொல்வேன். 
நான் ஓட்டுக்காக இங்கு வரவில்லை. "இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக போராட்டத்தில் பங்கேற்க வரும் வழியில் தனது ரசிகர்களிடம் காரில் இருந்தவாறு கமல் பேசியதாவது: மக்கள் உயிரை பற்றி கவலைப்படாத தொழில் தேவையில்லை. மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை. மத்தியில் இருப்போருக்கு கேட்க வேண்டும். குற்றம் நிகழ்ந்துள்ளது. குற்றம் களைதல் அரசின் வேலை. 
இதனை அரசு செய்யவில்லை என்றால், மக்கள் செய்வார்கள்.
என்று அவர் பேசினார்.

=====================================================================================
ன்று,
ஏப்ரல்-01.
  • சிங்கப்பூர், பிரிட்டன் குடியேற்ற நாடானது(1826)
  • இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது(1935)
  • மலாய் கூட்டமைப்பு உருவானது(1946)
  • இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது(1957)
  • கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது(2004)
=======================================================================================
பழம்பெரும் திரைப்பட இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்

முட்டாள் தினம்

"ஸ்டெர்லைட் ஆலையில் மாசுக்கட்டுப்பாடு சாதனங்கள் சரிவர இயக்கப்படுகிறதா என்பது பற்றி தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. ஆலையில் இருந்து வெளியேறும் புகை தகுந்த சுத்திகரிப்புக்கு பின்னே வெளியேற்றப்படுகிறது. "
அமைச்சர் கருப்பணன்.
இதுதான் இன்றைய அரசின் முட்டாள் தினச் செய்தி.

ஆலை தற்போது பராமரிப்புக்காக 15 நாட்கள் மூடப்பட்டுள்ளது.இயங்கவில்லை.
இயங்காமல் இருக்கும் இந்த நாட்களில்தான் தூத்துக்குடி துணை ஆட்சியர் அங்கு ஆய்வு செய்துள்ளார்.நிலத்தடி நீர்,காற்று மாசு மாதிரியை எடுத்து சென்று ஆய்வு செய்தனர்.அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி அமைசசர் "புகையே வெளிவரா நிலையில் சுத்திகரிக்கப்பட்டு" வருவதாக சொல்வது பிரச்னையின் கனத்தை விட அவர் வாங்கிய சூட்கேசின் கணம் அதிகம் என்று தெரியவைக்கிறது.
போராட்டம் இன்னும் வேகமானால்தான் அடிமைகள் நடவடிக்கையில் இறங்குவார்கள்.
#ஸ்டெர்லைட்டை மூடு #
========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?